ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...


ரொம்ப நாளைக்குப் பிறகு சரோஜ் நாராயண்சுவாமியிடமிருந்து போன்கால்.

படம் பார்த்தா சத்யம் தியேட்டர்ல பார்க்கணும், டிபன் சாப்பிட்டா சரவணபவன்ல சாப்பிடணும்கிற மாதிரி அந்தக் காலத்துல எங்களுக்கெல்லாம் ரேடியோவில நியூஸ் கேட்டா சரோஜ் நாராயண்சுவாமி வாசிச்சுக் கேட்கணும். அப்பத்தான் நியூஸ் கேட்ட திருப்தி கிடைக்கும்.

'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சுவாமி' என்று தனக்கே உரிய மிடுக்கும் கம்பீரமுமான குரலில் அவர் செய்தி வாசிக்கத் தொடங்கும்போதே இஞ்சி மொரப்பா சாப்பிட்ட மாதிரி நம்முள்ளும் அந்தச் சுறுசுறுப்பு குடியேறிவிடும்.

சிம்மக்குரலோன் சிவாஜிகணேசனே ஒருமுறை, 'நான் இரண்டு குரல்களுக்கு ரசிகன். ஒன்று இலங்கை அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் குரல்; மற்றது, செய்தி அறிவிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமியின் குரல்' என்று சொல்லியிருக்கிறார் என்றால், சும்மாவா பின்னே..?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடுமென்று ஒருநாள் அவர் முதன்முறையாக என்னோடு போனில் தொடர்பு கொண்டார். 'வணக்கம்மா... சொல்லுங்க' என்றேன். 'நான் யார் பேசறேன்னு தெரியறதா?' என்று கேட்டார். 'தெரியுமே, சரோஜ் நாராயண்சுவாமிதானே?' என்றேன். 'அட, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?' என்றார் ஆச்சர்யமாக. 'இதில் ஆச்சர்யப்பட என்னம்மா இருக்கிறது? உங்க குரல்தான் உலகத்துக்கே தெரியுமே?' என்றேன். 'அப்படியா!' என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கேட்டார்.

அன்று முதல் அவ்வப்போது அடிக்கடி என்னோடு போனில் உரையாடுவார். நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் அவரது குரலை எந்த அளவுக்கு ரசித்துக் கேட்டேனோ அதே அளவுக்கு இன்றைக்கு அவர் போனில் பேசும்போதும் சிலிர்ப்பு உண்டாகிறது.

தனக்குக் கலைமாமணி விருது கிடைத்திருப்பதைச் சொன்னார். ஆனால், விழாதான் எப்போன்னு தெரியலே என்றார். தேர்தல், அமைச்சரவை விரிவாக்கம்னு தள்ளிப் போகுது; கூடிய சீக்கிரம் அறிவிச்சுடுவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன்.

'ஜெயா டி.வி-யில் என் குரலை யாரோ அப்படியே மிமிக்ரி செய்து செய்தி வாசிக்கிறார்கள்; என்னிடம் கேட்பவர்களுக்கு அது நான் இல்லை என்று அடிக்கடி விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டி இருக்கிறது' என்றார்.

கடைசியாக, என் பிளாக் படித்ததைப் பற்றிச் சொன்னார். பாராட்டினார். தனது கருத்துக்களைப் பின்னூட்டம் இட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால், வரவில்லை.

அவரே ஒரு பிளாக் எழுதலாமே என்கிற என் அபிப்ராயத்தைச் சொன்னேன். என்னைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது குரலுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். இந்திரா காந்தியிலிருந்து பல பெரிய புள்ளிகள் வரை நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்; ஆகாசவாணியில் பல பிரமுகர்களை பேட்டி கண்டவர்; அந்தக் காலத்தில் ஆனந்த விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியவர்; அனுபவங்களின் பெட்டகமாக இருப்பவர்; நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். அவர் பிளாக் எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கு அது ஓர் அனுபவப் புதையலாக இருக்கும்.

*****
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒரு குரு!

0 comments: