ஈஃபிள் தாத்தா!


சமீபத்தில் கலைஞர் டி.வி-யிலோ, ஜெயா டி.வி-யிலோ, மெகா டி.வி-யிலோ... எதிலென்று சரியாக ஞாபகம் இல்லை... 'சிவந்த மண்' படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி பார்த்தேன். (ஆபீசுக்குக் கிளம்பும் வேளையில் அடுத்தடுத்து இந்த மூன்றிலுமே பழைய பாடல் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதால், இயன்றவரை சேனல்களை மாற்றி மாற்றி எனக்குப் பிடித்த பழைய பாடல் காட்சிகளைப் பார்த்துவிடுவது என் வழக்கம்.)

'ஒரு ராஜா ராணியிடம்...' என்ற பாடல் அது. எனக்குத் தெரிந்து வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் படம் 'சிவந்த மண்'. மேற்படி பாடல் காட்சியில் ஓரிடத்தில் 'கொலோசியம்' வரும். ஞாபகம் இருக்கா, சமீபத்தில் 'எனக்கு இருபது, உனக்குப் பதினெட்டு' படத்தில் கூட கொலோசியம் வந்ததே! அதில், இடிந்து நொறுங்கிக் கிடக்கும் அதை கிராஃபிக்ஸில் மீண்டும் பழையபடி புதுக் கட்டடமாக மாற்றும் காட்சி அருமையாக இருந்தது.

நிற்க. 'சிவந்த மண்' பாடலில் முக்கியமாக, 'ஈஃபிள்' டவர் முன் சிவாஜியும் காஞ்சனாவும் ஆடிப் பாடுவார்கள். சின்ன வயதில் அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தபோது, அந்த 'பிள்' கோபுரத்தைப் பார்த்து நான் வியந்ததுண்டு.

அந்தக் கோபுரத்துக்கு இன்று வயது 120.

1889-ல் கஸ்டேவ் பிள் என்பவரால் கட்டப்பட்ட கோபுரம் அது. சாம்ப்ஸ் டீ மார்ஸ் என்ற இடத்தில் இருக்கும் அந்தக் கோபுரத்தின் உயரம் 900 அடி. உயரமான கட்டடங்களை சிமெண்ட்டும் இரும்பும் கொண்டுதான் கட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருந்த அந்தக் கால எஞ்சினியர்களுக்குச் சவால் விடும் விதமாக மொத்தக் கோபுரத்தையும் வெறும் இரும்பினாலேயே கட்டி முடித்தார் பிள்.

அன்றைக்குச் சுமார் 12 கோடி ரூபாய் செலவில், இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. இதன் உச்சிக்குச் செல்ல மொத்தம் 1672 படிகள். கோபுரத்தைக் கட்டி முடித்ததும், அத்தனைப் படிகளையும் ஏறிச் சென்று சந்தோஷப்பட்டிருக்கிறார் கஸ்டேவ் பிள்.

பாரீஸ் போனால் அவசியம் இந்த பிள் கோபுரத்தின் மீது ஏறிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அது சரி, இங்கே இருக்கிற எல்.ஐ.சி. கட்டடத்தின் உச்சிக்கே ஏறிப் பார்த்ததில்லை.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் பார்க்கணும்னானாம்... அந்த மாதிரி கதையா இல்லே இருக்கு!

*****
உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்வது புத்திசாலித்தனம்;
உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்வது முட்டாள்தனம்!

0 comments: