ஞானவாபி - II

வாவி என்றால் குளம். வாவிதான் சம்ஸ்கிருதத்தில் ‘வாபி’ என்றாகியதோ? எனில், ஞானவாபி என்றால் ஞானக் குளம். அறிவுக் குளம்.

தி.நகரில் உள்ள ‘ஞானவாபி’க்குள் நுழைந்ததும், ஒரு பெரிய நகருக்குள் இருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில், பெரியதொரு கோயிலை ஒட்டிய சற்று விசாலமான மண்டபத்தில் இருப்பதான பிரமையே ஏற்பட்டது. சின்னச் சின்னதாக ஏராளமான அறைகள்; வசதியான குளியல் அறைகள்; கர்மாக்களைச் செய்வதற்கென பிரத்யேக இடங்கள்; உட்காருவதற்குத் தோதான மணைப் பலகைகள்; அக்னி வளர்த்து ஹோமம் செய்வதற்கான சிறு சிறு சதுர சிமெண்ட் தொட்டிகள்; அகன்ற கிணறு; ஓர் அறையில் ஹோமத்துக்குத் தேவையான வறட்டிகள், தர்ப்பைகள், சமித்துகள், தொன்னைகள்.

இரண்டு அழகான காளைக் கன்றுகளும் அங்கே இருந்தன.

ஒருவர் இறந்த ஒன்பதாம் நாளிலிருந்து அவருக்கான கர்மாக்களைச் செய்யத் தொடங்க வேண்டும் என்பது ஐதிகம். அடுத்த நாள் ‘பத்து’ எனப்படும். அதையடுத்து சோதகும்பம், சபிண்டீகரணம். அவை முடிந்து, அந்த ஆத்மா பிரிந்த அந்த இல்லத்தில் வைத்து கிரேக்கியம் என்கிற சடங்கைச் செய்யவேண்டும்.

ஒன்பதாம் நாளில் பிண்டம் வைப்பதில் தொடங்குகிறது கர்மா. சாதத்தை ஒன்பது சிறிய உருண்டைகள், ஒன்பது பெரிய உருண்டைகளாகப் பிடித்து வைத்து, மறைந்த ஆத்மாவுக்குப் படைப்பது. சோதகும்பம் என்கிற காரியம் செய்கிற சமயத்தில் ஞானவாபியிலேயே குளித்து, அங்கேயே டிபன், சாப்பாடு எல்லாம் முடித்துக் கொள்வதற்கு வசதியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம், காளைக் கன்றுக்கு ஒரு பூஜை நடந்தது. மறைந்த ஆத்மாவை ருத்ர பூமிக்கு அனுப்பி, சிவபெருமானிடத்தில் ஒப்படைப்பதாக ஐதிகம். அப்படி அனுப்புவதற்குரிய வாகனமான ரிஷபத்தை (காளை) மகிழ்வித்து, தாஜா செய்து, இந்த ஆத்மாவைப் பத்திரமாக எடுத்துச் சென்று சிவனிடத்திலே ஒப்படைத்துவிடு என்று கேட்டுக் கொள்கிற பூஜை அது.

மறுநாள், சபிண்டீகரணம் என்பதும் ஒரு முக்கியமான கர்மா. அன்றைய தினம் குத்துவிளக்கு, குடம், குடை, செருப்பு, வேட்டி, தலையணை என நம்மால் முடிந்த பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.

மறுநாள் கிரேக்கியம். அப்படித்தான் சொல்லிப் பழக்கம். அதன் உண்மையான உச்சரிப்பை, பொருளை, இந்தக் காரியங்களை நடத்தி வைத்த வாசன் சாஸ்திரிகள் விளக்கமாகச் சொன்னார். பொதுவாகவே, ஒவ்வொரு நாளுமே அந்தக் கர்மா எதற்காகச் செய்யப்படுகிறது, சொல்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை முக்கியமான இடங்களில் விளக்கியபடியேதான் நடத்தி வைத்தார் அவர்.

நவகிரஹ யக்யம் என்பதுதான் பின்னர் கிரஹ யக்யம் என்று சுருங்கி, கிரேக்கியம் என்று மருவிவிட்டது என்று விளக்கினார். நேற்றைக்குத்தான் இந்த நவகிரக பூஜையும் ஹோமமும் வீட்டில் நடந்தது.

ஒரு கல்யாணத்துக்கு ஆகிற செலவு இந்தக் காரியங்களுக்கும் ஆகியது. ஆனால், இதை இப்படித்தான், இவ்வளவு விமரிசையாகத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம் வசதிக்கேற்றபடி சிக்கனமாகவும் செய்யலாம். கல்யாணத்தைக்கூட ஒரு கோயிலில் வைத்து மஞ்சள் முடிந்த தாலியைக் கட்டிச் சிக்கனமாகச் செய்வதில்லையா? எதுவுமே கட்டாயம் இல்லை. எதை எந்த அளவில் செய்தாலும், அதில் நமக்குப் பரிபூரண மனத் திருப்தி கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், கடனே என்று செய்யக் கூடாது. ஒரு வேலையில் இருந்தால், மாதா மாதம் சம்பளம் வாங்குகிறோமே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு செய்யக் கூடாது. அப்படிச் செய்கிற செயலில் முழுமை இருக்காது.

கர்மாக்களும் அப்படித்தான்! சிலருக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம்; பலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்; ‘செத்துப் போன ஆத்மாவைக் குளிரப் பண்ணுகிறதாவது! எல்லாம் பேத்தல்!’ என்று நினைக்கலாம். சிலர், இத்தனைச் செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை; செய்ய வேண்டியதுதான். ஆனால், சிக்கனமாகச் செய்தால் போதும் என்று எண்ணலாம்.

எங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டுமென்று தோன்றியது; செய்தோம். மறைந்த ஆத்மா நல்ல கதியை அடையும் என்கிற ஆத்ம திருப்தி உண்டாகியிருக்கிறது.

மனித வாழ்க்கையில் இறுதியில் எஞ்சி நிற்பது அதுதானே!

***
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இரண்டு முக்கியமான நாட்கள் உண்டு. ஒன்று, அவன் பிறந்த நாள்; மற்றொன்று, எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்த நாள்!

ஞானவாபி

பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் நான் பூணூல் அணிவதில்லை. 35 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் காஞ்சி சங்கர மடத்தில் எனக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டபோது, ஒரு சில ஆண்டுகளே நான் பூணூல் அணிந்திருந்தேன். பின்னர் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டேன்.

நான் முன்பு பணியாற்றிய ‘சாவி’ பத்திரிகையின் ஆசிரியர் சாவி, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஹாய் மதன், பத்திரிகையாளர் ஞாநி ஆகியோரும் பூணூல் அணியாதவர்கள்தான் என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டேன். அவர்கள் என்ன காரணங்களுக்காகப் பூணூல் அணிவதைத் தவிர்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒன்றும் கடவுள் பக்தி இல்லாத நாஸ்திகன் அல்ல. சமயச் சடங்குகளை வெறுப்பவனும் அல்ல. என் நண்பர்களான பகுத்தறிவுவாதிகள் சிலர் கேலி செய்வார்களே என்பதோ, மதச் சின்னத்தை அணியலாகாது என்கிற புரட்சி(!)யான எண்ணமோகூட நான் பூணூல் அணியாததற்குக் காரணமல்ல.

எழுதத் தெரியாதவனுக்கு பேனா எதற்கு? பூணூல் அணிந்தவன் முறையாக அதற்கான நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். திரிகால சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஐந்து வேளைத் தொழுகையையும் தவறாமல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவர்கள் ஞாயிறு தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றனர். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், நமது இந்து மதத்துக்கென உள்ள சம்பிரதாயங்களை ஓரளவுக்காவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடிக்காதவனுக்குப் பூணூல் வெறும் நூல்தான்.

மற்ற மதங்களைப் போன்று இந்து மதம் கெடுபிடியான மதம் அல்ல. சுதந்திரம் கொடுக்கும் மதம். இந்து மதத்தில் இருப்பவன் தன் சொந்த மதத்தைக் கேலி செய்யலாம்; இழித்துப் பேசலாம்; பழிக்கலாம். இந்து மதம் அவனைக் கேள்வி கேட்காது. நாஸ்திகனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் மதம் இந்து மதம். எனவேதான், நாள் கிழமைகளில்கூட கோயிலுக்குச் சென்று வழிபடுவதோ, விபூதி அணிவதோ எனக்குப் பழக்கமாக ஆகவே இல்லை. அது அவ்வளவு அவசியம் என்று தோன்றவும் இல்லை.

சமீபத்தில் ஒரு நாள், நான் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி அணிந்திருந்ததைப் பார்த்து என் மகள் கேட்டாள்: “என்னப்பா, தலைவலியா?” ஆம். உண்மைதான்! தலைக்குக் குளித்தால், எத்தனைத் துவட்டினாலும் தலையில் நீர் சேர்ந்துகொண்டு மிகப் பயங்கரமாக வலிக்கும். எத்தனை சாரிடான்கள் போட்டாலும் தீராது. விபூதியை வெந்நீரில் குழைத்துப் பூசிக்கொண்டு படுத்தால், ஒரு மணி நேரத்தில் தலைவலி பட்டென்று விட்டுவிடும். இது எங்கள் குடும்பத்தில் கை கண்ட வைத்தியம்.

சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை என்று சொன்னேன். அவை முட்டாள்தனமானவை என்கிற பகுத்தறிவு(!) எண்ணமும் எனக்குக் கிடையாது. தினம் தினம் எத்தனையோ முட்டாள்தனங்களைச் செய்துகொண்டு இருக்கிறோம். இவன் வந்தால் நாட்டுக்கு நல்லது செய்வான், இவன் கை சுத்தமானவன், யோக்கியன் என்று நம்பி தேர்தலுக்குத் தேர்தல் யாருக்காவது ஓட்டுப் போட்டுக்கொண்டு இருக்கிறோமே, அந்த முட்டாள்தனத்தை விடவா? எனவே, நமது மனத் திருப்திக்காகச் சடங்குகளைச் செய்வதில் தப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், முழு மனத் திருப்தியோடு செய்யும் சடங்குகள் நம் எண்ணங்களுக்கு வலுவூட்டி, குடும்பத்தில் நன்மையைக் கொண்டு வருகிறது என்பதுதான் உளவியல்ரீதியான உண்மை.

பித்ருக்களுக்குச் செய்யும் கர்மாக்களும் இத்தகைய நலனை அளிக்க வல்லவைதான். குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒழுங்காகச் சோறு போடாமல், வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்காமல், அவர்களை ஒரு பாரமாக எண்ணி உதாசீனப்படுத்திவிட்டு, அலட்சியமாக நடத்திவிட்டு, அவர்கள் மனம் புண்படப் பேசிவிட்டு, அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கான கர்மாக்களை ஒழுங்காகச் செய்கிறேன் என்று ஒருவன் கிளம்பினால், அவனைவிடக் கேடு கெட்டவன் எவனும் இருக்க முடியாது. அவன் உண்மையில் தன் மனத் திருப்திக்காக அவற்றைச் செய்ய மாட்டான். ஊர் மெச்சுவதற்காகவே செய்வான். அவனை இந்து மதக் கடவுள் மட்டுமல்ல; எந்த மதக் கடவுளும் மன்னிக்க மாட்டார்!

சமீபத்தில் இறைவனடி சேர்ந்த எங்கள் மாமியார் உயிரோடு இருந்தவரையில், உடல் உபாதைகள் தவிர, உள்ளத்தால் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்தார். அவரின் மற்ற இரு பெண்களும்கூட தங்கள் தாயார் மீது அத்தனைப் பாசம் வைத்திருந்தார்கள். பெண்கள் தங்கள் தாயாரின் மீது பிரியம் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை; என் மாமியாருக்கு வாய்த்த மாப்பிள்ளைகளும் அவரை அவ்வளவு அனுசரணையாகக் கவனித்துக் கொண்டார்கள் என்பதுதான் விசேஷம். உயிரோடு இருந்தவரையில் அவரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள்.

2000-வது ஆண்டில், திடீரென்று ஒரு நாள் என் மாமியார் சுய நினைவற்றுக் கீழே விழுந்துவிட்டார். நான் பதறிப்போய் என் சகலைகள் இருவருக்கும் போன் செய்தேன். உடனே அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, அடுத்த அரை மணிக்குள் ஓடி வந்தார்கள். டாக்ஸி வரவழைக்கப்பட்டது. அப்போது நாங்கள் குடியிருந்த வீடு, ஒற்றையடிப் பாதை மாதிரியான ஒரு நீள சந்தின் இறுதியில் இருந்தது. அங்கிருந்து என் மாமியாரை ஆஸ்பத்திரிக்கு எப்படி எடுத்துச் செல்வது என்று நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, சிறிய மாப்பிள்ளை விழுந்து கிடந்த என் மாமியாரை அலாக்காகத் தன் இரு கைகளில் தூக்கினார். என் மாமியார் தெம்பும் திடனுமாக இருந்த சமயம் அது. நல்ல உயரமும், அதற்கேற்ற பருமனும் எடையுமாய் இருந்த என் மாமியாரை சின்ன மாப்பிள்ளை தனியொரு ஆளாகவே சுமந்து சென்று, டாக்ஸியில் படுக்க வைத்தார். எந்த ஒரு தயக்கமும் இன்றி, ஒரு தாய்க்குச் செய்வதைப் போன்ற ஈடுபாட்டுடன் அவர் அன்று நடந்துகொண்ட விதம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

அதன்பின்னர் விஜயா ஹாஸ்பிட்டலில் மாமியாரைச் சேர்த்து, கோமாவிலிருந்து அவர் மீண்டு, உடம்பு குணமானாலும் பேச்சு குழறிப் போய், ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் தேறி வந்து, பேச்சும் கொஞ்சம் தெளிவடைந்து, பழைய அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்குத் தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு முன்னேறினார். மீண்டும் அடுத்த கண்டம். தடுமாறிக் கீழே விழுந்ததில், தொடை எலும்பு முறிந்துவிட்டது. பிளேட் வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டு, அவர் மீண்டும் எழுந்து நடக்க மூன்று மாதமாகியது.

அதன்பின்னர் தொட்டுத் தொட்டு அவரை ஏதாவது உடம்பு படுத்திக்கொண்டே இருந்தது. இருமல், முதுகு வலி, கால் வலி, தொண்டையில் சாப்பிட முடியாமல் எரிச்சல் என ஒன்று சரியானால், மற்றொன்று ஆஜராகிவிடும். என் குழந்தைகளைக் கொஞ்சுவதும், டி.வி. சீரியல்கள் பார்ப்பதும், ஒரு பத்திரிகை விடாமல் படிப்பதும்தான் அவரின் பொழுதுபோக்கு.

அவர் மறைந்த பின்னர், அவருக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை ஒன்பதாம் நாளில் தொடங்கி, வீட்டில் செய்யவேண்டிய கிரேக்கியம் வரையில் எங்கள் மனசுக்குத் திருப்தியாய், முழுமையாய், ஒன்றுகூட விடாமல் பரிபூர்ணமாய்ச் செய்தோம்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளில் இவற்றைச் செய்வது என்பது முடியாத காரியம். எனவே, இதற்கென்றே தி.நகரில் ‘ஞானவாபி’ என்றொரு இடம் உள்ளது. காஞ்சி முனிவர் அருளாசியோடு, ஸ்ரீராம் சமாஜத்தினர் இதை நடத்துகிறார்கள். குறைந்த வாடகையில் நிறைய சௌகரியங்கள்.

பதிவு நீள்வதால் இங்கே நிறுத்திக்கொண்டு, ‘ஞானவாபி’ பற்றி என் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

***
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்!

இங்கேயும் சில ராஜபக்‌ஷேக்கள்!

னிதாபிமானம், இரக்கம், உதவும் மனப்பான்மை, முதியோரை மதித்தல், துயரப்படுவோருக்குக் கை கொடுத்தல் போன்றவை எல்லாம் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் இயல்பாகவே அமைந்திருக்க வேண்டிய குணங்கள். இத்தகைய குணங்கள் இல்லாதவரெல்லாம் மனிதரில் சேர்த்தியா என்பதே கேள்விக்குரியது. ஹார்ட் டிஸ்க், மதர் போர்டு இன்ன பிறவெல்லாம் இருந்தால்தானே அது கம்ப்யூட்டர்? இல்லாவிட்டால் வெறும் டப்பாதானே?

சென்ற நூற்றாண்டில் இத்தகைய குணங்கள் ஏதோ விசேஷ குணங்களாக, நற்குணங்களாகச் சிறப்பித்துப் பேசப்பட்டன. அத்தகைய குணங்களைக் கொண்டிருப்போர் பெரிய மனிதர்கள், உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்று போற்றப்பட்டனர். அந்த ‘நற்குணங்கள்’ இல்லாதவர்கள் சாதாரண மானுடர்களாகச் சொல்லப்பட்டனர். “நான் ஒண்ணும் மகாத்மா கிடையாது. சாமானியன்!” என்கிற டயலாகுகளெல்லாம் பிறந்தன.

காலப்போக்கில், ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டிய குணங்களெல்லாமே ஏதோ அபூர்வ குணங்கள் போலாகி, “அத்தகைய ‘மேன்மையான’ குணங்கள் மகான்களுக்கு மட்டுமே உரித்தானவை; நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கு இல்லை” என்று எல்லோருமே கருதத் தொடங்கிவிட்டார்கள். இன்று உலகில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரிடம் சுயநலமே மிஞ்சியிருக்கிறது. தன்னலத்தைப் பார்த்துக் கொள்ளாதவன் இளிச்சவாயன் என்கிற எண்ணம் பரவியிருக்கிறது. அடுத்தவரை அலைக்கழிப்பதும், ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், முடிந்தவரையில் சுரண்டுவதும்தான் சாமர்த்திய குணங்களாக ஒவ்வொருவர் மனத்திலும் படிந்திருக்கிறது. அதனால்தான் கவியரசு, ‘யாரடா மனிதன் அங்கே... கூட்டி வா அவனை இங்கே...’ என்று பாடி வைத்துவிட்டுப் போனார்.

சமீபத்திய இரண்டு நிகழ்வுகளில் நான் சந்தித்தவர்கள் அனைவருமே சுயநலவாதிகளாகவும், அடுத்தவருக்கு உதவும் மனோபாவம் சிறிதும் அற்றவர்களாகவும்தான் காணப்பட்டார்கள்.

முதல் நிகழ்வு, என் மாமியாரின் இறுதிச் சடங்கு. நேரில் வந்து அவரின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் கொடுக்கும்படி எங்கள் தெருவிலேயே உள்ள ஒரு டாக்டரை அணுகினேன். இறந்தவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்ததா, டயபடீஸ் இருந்ததா என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருந்தார் அவர். “சார், முதல்ல வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணுங்க!” என்றேன். “உங்களுக்கு டெத் சர்ட்டிஃபிகேட் வேணும். அதுக்காகத்தானே வந்திருக்கீங்க?” என்றார். “ஆமாம் சார்!” என்றேன். “என் லெட்டர்ஹெட்ல தந்தா, அதை ஏத்துக்க மாட்டாங்க. அதுக்குன்னு குறிப்பிட்ட ஃபாரம் இருக்கு. எங்கே எரியூட்டப் போறீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்றார். “அநேகமாகப் பக்கத்துல கண்ணம்மாபேட்டையிலதான் சார் இருக்கும்” என்றேன். “அப்போ அங்கே போய் டெத் சர்ட்டிஃபிகேட் ஃபாரம்னு கேளுங்க. கொடுப்பாங்க. அதை வாங்கி ஃபில்லப் பண்ணி எடுத்துட்டு வாங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்” என்றார்.

வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன். பின்னர்தான் என் பெரிய சகலை, சின்ன சகலை இருவரும் வந்தனர். “டாக்டர் கன்ஃபர்ம் பண்ணாம நாம மேற்கொண்டு எதுவும் பண்ண முடியாது ரவி!” என்றார் பெரியவர். உடனே கூப்பிட்டால் வேறு டாக்டர் யாராவது வருவார்களா என்று அருகில் உள்ள கிளினிக்குகளில் எல்லாம் ஏறி இறங்கினோம். யாரும் இல்லை. நர்ஸுகளைக் கூப்பிட்டால், “ஐயோ! நாங்க வரக் கூடாதுங்க. டாக்டர்தான் வந்து பார்த்துச் சொல்லணும்” என்று மறுத்துவிட்டார்கள். கடைசியில் பழையபடி முன்னே நான் போய்ப் பார்த்த அதே டாக்டரின் வீட்டுக்கே மூணு பேருமாகப் போனோம்.

“என்ன இப்ப வந்து கூப்பிடறீங்க? இப்பவே மணி ரெண்டு ஆகுது. ரெண்டரைக்கெல்லாம் நான் கிளினிக்ல இருந்தாகணும். மத்தவங்க மாதிரி இல்லை நான். ரெண்டரைன்னா ஷார்ப்பா ரெண்டரைக்குக் கிளினிக்ல இருப்பேன். ஸாரி, வேற யாரையாவது கூப்பிட்டுக்குங்க!” என்று பிகு செய்தார். “கொஞ்சம் தயவு பண்ணுங்க!” என்றோம். “முன்னேயே வந்தாரு இவரு. சர்ட்டிபிகேட்டுக்குதானே வந்திருக்கீங்கன்னேன். ஆமான்னாரு. இல்லை, வந்து பார்த்து உறுதிப்படுத்தினீங்கன்னா போதும்னு சொல்லியிருந்தாருன்னா உடனே கிளம்பி வந்திருப்பேன். கடைசி நிமிஷத்துல வந்து தொல்லை பண்ணினீங்கன்னா எப்படி?” என்று சொல்லிவிட்டு ஓர் அறைக்குள் புகுந்துகொண்டுவிட்டார்.

நாங்கள் காத்திருப்பதா, கிளம்புவதா என்று தெரியாமல் சில நிமிடங்கள் வரை அங்கேயே நின்றிருந்தோம். ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தார். “என்ன?” என்றார். “கொஞ்சம் கூட வந்து... சார், தூரம் அதிகமில்லை. எதிர்ச் சாரியில் பத்துப் பன்னிரண்டு வீடுகள் தள்ளி... என்கிட்டே பைக் இருக்கு. ரெண்டே செகண்ட்ல போயிட்டுத் திருப்பிக் கொண்டு வந்து விட்டுடறேன்” என்று பவ்வியமாகக் கேட்டுக் கொண்டார் சின்ன சகலை. “புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க. நான் குளிச்சு முடிச்சு ஃப்ரெஷ்ஷா கிளினிக்குக்குப் போறேன். நடுவுல இந்த மாதிரி சாவு வீட்டுக்கு வந்துட்டுப் போனேன்னு என் பேஷண்ட்ஸுக்குத் தெரிஞ்சா ஃபீல் பண்ண மாட்டாங்களா? ப்ச..!” என்று சலித்துக் கொண்டார். பின்னர், “சரி, போங்க வரேன்!” என்று முறைப்பாகச் சொன்னவர், தன் பைக்கில் வந்தார். நான் நடந்து வீடு வந்து சேர்வதற்குள் அவர் வந்து மாமியைப் பார்த்து, மரணத்தை உறுதிப்படுத்திவிட்டு, தன் லெட்டர்ஹெட்டிலேயே சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார். எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டன.

போரூர் மின்மயானத்திற்குப் போன் போட்டபோது, “ஆறரைக்குள்ள கொண்டு வந்தா வாங்க! இல்லாட்டி பெசன்ட் நகர் கொண்டு போயிடுங்க. இங்கே ஈவினிங் ஆறரை மணி வரைக்கும்தான் உடலை எரிக்கலாம்!” என்றார்கள். ஆனால், வீட்டில் சடங்குகள் முடியவே ஆறரை மணி ஆகிவிட்டது. உடனே அவசரமாக எடுத்துப் போனோம். அங்கே போய்ச் சேரும்போது மணி ஆறே முக்கால். வேறொரு பிணம் எரிந்துகொண்டு இருந்தது. காத்திருக்கச் சொன்னார்கள். அங்கே இருந்த அறிவிப்புப் பலகையில் ‘உடலை எரிக்கக் கட்டணம் ரூ.1,500/- அதற்கு மேல் ஒரு பைசா தர வேண்டாம். மீறி யாராவது கேட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவும். உங்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது!’ என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கட்டணத் தொகை போக, மூன்று ஊழியர்களுக்கும் தலா ரூ.500 கொடுத்த பிறகுதான் போன வேலை முடிந்தது.

அடுத்து சாஸ்திரிகள்! அவரும் தன் பங்குக்குத் தனக்கு அவசர ஜோலி இருப்பதாகவும், போய்விட்டு மறுநாள் வந்து மீதிக் காரியமான ‘சஞ்சயன’த்தை முடித்துத் தருவதாகவும் பரபரத்தார். “இங்கே மின்மயானத்துக்குக் கொண்டு வந்ததே கையோடு எல்லாக் காரியங்களையும் முடிச்சுடலாம்னுதானே! ஒரு அரை மணி இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுங்க” என்று கெஞ்சினோம். “ஆட்டோக்காரன் வெயிட்டிங்ல இருக்கான்...” - “இருக்கட்டும். நாங்க ஆட்டோ சார்ஜ் என்ன உண்டோ, அதைக் கொடுத்து உங்களை அனுப்பி வைக்கிறோம்!” - “அது சரி, அவன் 300 ரூபா கேப்பான். கொடுப்பீங்களா? ம்ஹூம், அதெல்லாம் சரியா வராது.” - “கொடுக்கிறோம். போதுமா? அவன் ஆயிரம் ரூபா கேட்டாக் கூட கொடுக்கிறோம். இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போங்க!” - “சரி, அப்படியே எனக்கும் என் அசிஸ்டெண்ட்டுக்கும் பேசினதுல தலா ஐந்நூறு சேர்த்துக் கொடுங்க!” என்று சொல்லிவிட்டுப் பையைத் திறந்தார் சாஸ்திரிகள். மீதிக் காரியத்துக்குத் தேவையான அப்பம், பொரி முதலானவை அதில் தயாராக இருந்தன!

ரண்டாவது நிகழ்வு - இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்கில் நிகழ்ந்தது. என் அப்பாவின் பென்ஷன் பணம் அங்கே உள்ள அவர் சேமிப்புக் கணக்கில்தான் சேரும். அவருக்கு வயது 80. பொதுவாகவே அங்குள்ள ஊழியர்கள் சரிவர பதில் சொல்வதில்லை என்று அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் அப்பா. லோன் வாங்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் பென்ஷன் புத்தகத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார். போன மாதம் லோன் முடிந்துவிட்டது. பென்ஷன் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். சரியென்று இந்த மாதம் முதல் வாரத்தில் போய்க் கேட்டிருக்கிறார். அவர்கள் ஒரு ஃபாரத்தைக் கொடுத்து, “இதைப் பூர்த்தி செய்து அடுத்த வாரம் கொண்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால், அதில் எந்த ஒரு தகவலையும் பூர்த்தியே செய்ய முடியாத மாதிரி, சம்பந்தமில்லாத கேள்விகள். ஏதேதோ ஜி.ஓ. எண்கள், ரிட்டையரான தேதி, முதல் முறை பெற்ற பென்ஷன், உயர்வு போட்ட வருடங்கள், அந்த உத்தரவு எண்கள் எனக் கேட்கப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, அந்த ஃபாரம் முதன்முறையாக பென்ஷன் புத்தகம் பெற விரும்புகிறவர்களுக்கானது என்றே தோன்றியது. கொடுத்த புத்தகத்தைத் திரும்பப் பெறுவதற்கானது அல்ல!

இரண்டு நாட்களுக்கு முன்னால், கொட்டும் மழையில் அதை எடுத்துக்கொண்டு பாங்குக்குப் போனார் அப்பா. “இந்த ஃபாரத்தைப் பூர்த்தி செய்யவே முடியவில்லை; உத்தரவு எண்கள் கேட்டுள்ளீர்கள். இதுவரை எனக்கு எந்த உத்தரவும் வந்ததே இல்லையே! பென்ஷன் பணம் வங்கி வைப்புக் கணக்கில் சேரும். அவ்வளவுதான்!” என்று திருப்பிக் கொடுத்துள்ளார். “இவங்கள்ளாம் பூர்த்தி பண்ணிட்டு வந்திருக்காங்களே, எப்படி? வாத்தியாரா இருந்திருக்கீங்க, நீங்களே தெரியலைன்னு சொன்னா நாங்க என்னத்தைப் பண்றது?” என்று கேலியும் கடுப்புமாகச் சொல்லியிருக்கிறார்கள். “அவங்க எப்படிப் பூர்த்தி பண்ணாங்கன்னு எனக்குத் தெரியாது. சம்பந்தமில்லாததையெல்லாம் கேட்டு பூர்த்தி பண்ணச் சொன்னா, எப்படிப் பண்றது?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அப்பா. “அதுசரி, பெயர்னு இருக்கிறதைக் கூட உங்களாலே பூர்த்தி பண்ண முடியாதா? உங்க பேர் கூட உங்களுக்குத் தெரியாதா? அதைக் கூட நாங்கதான் எழுதிக்கணுமா?” என்று கேட்டிருக்கிறார்கள். “அட, என் பேரு எனக்கு நல்லாவே தெரியும் சார்! இந்த ஃபாரமே சரியா இல்லைங்கிறப்போ, என் பேரை மட்டும் எழுதிட்டு வந்தா, ஃபாரத்தை வீணாக்கிட்டேன்னு சொல்ல மாட்டீங்களா?” என்றிருக்கிறார். இப்படியே வாக்குவாதம் முற்றி, அப்பாவுக்கு பிபி எகிறிவிட்டது. சத்தம் போட்டிருக்கிறார்.

“போய் அடுத்த வாரம் வாங்க!” என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிவிட்டார்கள். “இல்லை. என் புத்தகத்தை வாங்கிட்டுதான் போவேன். எண்பது வயசுக் கிழவனை இப்படியா அலைக்கழிப்பீங்க?” என்று கேட்டிருக்கிறார் அப்பா. அப்புறம் அங்கேயே வேறு ஒரு அலுவலரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் போனால், “உங்க பழைய பென்ஷன் புத்தகமா? அது எங்க கிட்டே எப்படி இருக்கும்? நீங்கதானே வெச்சிருக்கணும்?” என்றார் அவர். “இல்லை சார், சில வருஷத்துக்கு முன்னே லோன் வாங்கினேன். அப்போ பென்ஷன் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னீங்க. கொடுத்தேன்” என்றார் அப்பா. “இல்லையே! பென்ஷன் புத்தகத்தை வாங்கிக்கிட்டுதான் லோன் தரணும்னு புரொசீஜர் ஒண்ணும் இல்லையே! வீட்டுலேயே போய் நல்லா தேடிப் பாருங்க!” என்றிருக்கிறார் அவர்.

“அட என்ன சார், இது கூடவா எனக்குத் தெரியாது! போன மாசம் லோன் முடிஞ்சதுமே வந்து கேட்டேன். ‘அடுத்த லோன் போடறீங்களா? போட்டீங்கன்னா உடனே கிளெய்ம் பண்றோம்’னீங்க. வேணாம், புத்தகம்தான் வேணும்னு சொன்னேன். ‘சரி, அடுத்த மாசம் வா’ன்னீங்க. வயசானவனை ஏன் சார் இப்படி அலைக்கழிக்கிறீங்க?” என்று கொஞ்சம் காரமாகவே கேட்டிருக்கிறார் அப்பா.

“அப்படியா!” என்று மேஜை மேலேயே தன் வலது பக்கமாக இருந்த, பழைய காலத்து எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் போன்ற காலிகோ அட்டை போட்ட பென்ஷன் புத்தகக் கட்டை எடுத்து நடுவில் வைத்து அந்த அலுவலர் பிரிக்க, மேலேயே முதலாவதாக இருந்தது அப்பாவின் பென்ஷன் புத்தகம். எடுத்துக் கொடுத்தார் அவர். அப்பா வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

இரண்டு மேஜைகளுக்கு நடுவில் எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் மிகச் சுலபமாக முடிகிற காரியத்துக்கு ஈவு இரக்கமே இல்லாமல், 80 வயதாகும் பெரியவராயிற்றே என்றுகூடப் பார்க்காமல், இரண்டு மாதங்களாக அலைய விட்டிருக்கிறார்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள்.

மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொள்வதற்கு இவர்கள் பே-ஸ்லிப்பில் கையெழுத்துப் போடுவார்களா, அல்லது அதற்குக் கூடச் சோம்பல்பட்டுக்கொண்டு பேசாமலே இருந்துவிடுவார்களா என்று தெரியவில்லை.

‘அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடும் மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே’

என்று திருமூலர் சொல்லி வைத்த திருமந்திரம் ஏதோ மற்றவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் கொஞ்சமாவது அவன் உருப்பட வழியுண்டு! இல்லாவிட்டால் இங்கேயும் ஒவ்வொருத்தருக்குள்ளும் ராஜபக்‌ஷேக்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன, விகிதாசாரம் கொஞ்சம் வேறுபடும். அவ்வளவே!

வேறு என்னத்தைச் சொல்ல?

*****
எந்த உயிரினமும் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு ஜந்துவைக் கண்டு பொறாமைப்படுவதில்லை - மனிதனைத் தவிர!

அவரும் ஒரு தாயார்!

பெற்ற தாயைத் தவிர ஒரு மனிதனுக்கு வேறு சில தாயார்களும் உண்டு. குருவின் பத்தினியும் ஒரு தாய்தான்; அண்ணனின் மனைவியும் ஒரு தாய்தான்; மனைவியின் தாயாரும் (மாமியார்) இவனுக்கும் தாய்தான்.

அவனுக்கும் ‘he’, அவருக்கும் ‘he’ என பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாத, மரியாதை தெரியாத பாஷை ஆங்கிலம் என்று சொல்வதுண்டு. ஆனால், அந்த மொழியில்தான் மனைவி வழி உறவுகளும் கணவனுக்கும் சட்டப்படியான அதே உறவுகள்தான் என்கிறவிதமாக in-laws என்கிற இணைப்பைக் கொடுத்து, ஃபாதர்-இன்-லா, மதர்-இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லா என்று சிறப்பிக்கிறது.

என் மாமனார் திரு.சுந்தரம் ஒரு வயலின் கலைஞர். மைசூர் சௌடய்யாவிடம் பயின்று, அவரின் அன்புக்குப் பாத்திரமானவர். திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். அவருக்கு மூன்றும் பெண்கள். மகள்களின் திருமண வைபவங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல், 1982-ல், திருவையாறு உற்சவத்தில் கலந்துகொண்டு திரும்பிய கையோடு ஹார்ட் அட்டாக் வந்து, சட்டென்று மரணித்துவிட்டார். அவரின் மூத்த மகள் விஜயா ‘பெல்’ நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவர்தான் தன் கணவரின் பரிபூரண ஒத்துழைப்போடு, தன் தங்கைகள் இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் செய்து வைத்தார்.

அவரின் அடுத்த தங்கை உஷாவைத்தான் 17 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணம் முடிந்ததும், திருச்சியில் என் மாமியாரும் கடைசி பெண் ராதிகாவும் மட்டும் தனியாக இருக்க வேண்டாம் என்று, அவர்களையும் அடுத்த ஓராண்டுக்குள் சென்னைக்கு வரவழைத்து, எங்களோடு வைத்துக் கொண்டோம். சீக்கிரமே கடைசி பெண்ணுக்கும் ஒரு நல்ல வரன் பார்த்துத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார் அக்கா.

அக்காவின் குடும்பமும் சரி, தங்கை ராதிகா வாழ்க்கைப்பட்ட இடமும் சரி... பெரிய கூட்டுக் குடும்பம். அங்கேயெல்லாம் மாமியால் அதிக பட்சமாக ஒரு வாரம்கூடத் தங்க முடியாது. கடைசி பெண் திருமணம் முடிந்த கையோடு, தன்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு அக்காவை அவர் நச்சரித்துக் கொண்டு இருந்தார். “மாமி! உங்களைச் சென்னைக்கு அழைத்து வந்தது நான்தான். நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். என்னுடனேயே இருங்கள். உங்களுக்கு இதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். மகன் இல்லையே என்கிற குறையே வேண்டாம். நான் உங்களுக்கு ஒரு மகன் மாதிரிதான்!” என்று அவரைச் சமாதானப்படுத்தி எங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டோம்.

என் இரு குழந்தைகள் பிறந்தபோதும் அவர்தான் கூட இருந்து கவனித்துக் கொண்டார். வளர்த்து ஆளாக்கினார். பதினேழு வருடம் எங்களுடனேயே இருந்தார்.

நேற்று (நவம்பர் 17) அரவிந்த அன்னையின் சமாதித் திருநாள். அன்னையின் தீவிர பக்தையாகத் திகழ்ந்த, என் இன்னொரு தாயாரான மாமியார் எஸ்.ஞானாம்பாள், அன்னை முக்தியடைந்த தினத்திலேயே அன்னையுடன் ஐக்கியமாகிவிட்டார். தள்ளாமையின் காரணமாக அவரது உடல் நிலை சில ஆண்டுகளாகவே படுத்திக் கொண்டு இருந்தாலும், அவரின் மரணம் ஒரு தூக்கம் போல் நேற்று மதியம் ஒரு மணியளவில் அமைதியாக நிகழ்ந்தது.

தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தையும் விடாமல் பார்ப்பார். அது கதைச் சம்பவம் என்பதை மறந்து, அந்தக் கதாபாத்திரங்களோடு ஐக்கியமாகி, அதில் யாராவது கஷ்டப்பட்டால், அடி உதை வாங்கினால், ‘ஐயோ! பாவம்டீ...’ என்று மாலை மாலையாகக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிடுவார். அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் என் மனைவிக்குப் போதும் போதும் என்றாகிவிடும். சில சமயம் ஒரு படி மேலே போய், ‘அந்தக் குழந்தைக்கு உடம்பு குணமாகணும் பிள்ளையாரப்பா! உனக்கு சூறைத் தேங்காய் உடைக்கிறேன்’ என்றெல்லாம் தீவிரமாக வேண்டிக் கொள்வார். அடுத்தடுத்த எபிஸோடுகளில் குழந்தை குணமானதும், ‘பகவானுக்கு வேண்டிக்கிட்டிருக்கேன். பகவானை ஏமாத்தக் கூடாது. எனக்காக ஒரு தேங்காய் வாங்கி உடைச்சுடுடீ’ என்று என் மனைவியை நச்சரிப்பார். “சரிம்மா! உடைக்கிறேன். ஆனா, இதெல்லாம் கற்பனைக் கதை. சும்மா சும்மா இப்படியெல்லாம் வேண்டிக்கிட்டு என்னைப் படுத்தாதே!” என்று என் மனைவி கடுப்படித்தாலும், அப்போதைக்குச் சமாதானமாவாரே தவிர, மீண்டும் சீரியல் பார்த்தால், அதில் யாராவது கஷ்டப்பட்டால் கலங்கிப் போவார். சீரியல் பார்க்காதே என்றாலும் கேட்க மாட்டார். “சரிம்மா! வேண்டிக்கிட்டாலும் பெரிசா வேண்டிக்காதே. சிம்பிளா கற்பூரம் ஏத்தறேன்னு வேண்டிக்கோ போதும்” என்பாள் என் மனைவி. இவர்களின் போராட்டங்கள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் மகா வேடிக்கையாக இருக்கும்.

நேற்று மாலை ஆறு மணியளவில் சம்பிரதாய சடங்குகள் நிறைவேறின. காரியங்கள் நடந்தன. மாமியாரின் உடலை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போரூர் மின்மயானத்துக்குக் கொண்டு சென்றோம்.

முதன்முறையாக மின்மயானத்தைப் பார்க்கிறேன். பெரிய கல்யாண மண்டபம் போல இருந்தது. மொசைக் தரைகள். சுவர்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. சுத்தமாக இருந்தது. விரக்தியிலும் பயத்திலும் நம் மனத்தை ஆழ்த்தும் சாவின் அடையாளங்கள் ஏதுமின்றி, தெளிவாக இருந்தது. ‘மயான அமைதி’ என்கிற வார்த்தையே என்னை பயமுறுத்தும். அதுகூட இங்கே அர்த்தம் இழந்திருந்தது. சீருடை அணிந்த ஊழியர்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

மருத்துவரின் சான்றிதழைக் காட்டியதும் மளமளவென்று வேலைகள் நடந்தன. படிகளில் ஏறி, மேலே ஒரு ஹாலுக்கு மாமியின் உடலை எடுத்துப் போனோம். கிரில் கதவுக்கு அப்பால், பெரிய ஹால் நடுவே அலுமினிய கன செவ்வகக் கூடாரம் ஒன்று பெரிதாக இருந்தது. பெரிய புகைபோக்கி வானை நோக்கி உயர்ந்திருந்தது. ஹால் ஓரமாக கீழே இறங்கிச் செல்லவும் படிகள் இருந்தன. ஏதோ கரும்பாலைக்கு வந்த உணர்வு ஏற்பட்டது. அலுமினிய கூடாரத்துக்கு முன்புறத்தில் கறுப்புக் கதவு மூடியிருந்தது. அதன் முன்னே இருபதடி நீளத்துக்குத் தண்டவாளம் நீண்டிருந்தது. முனையில் ஒரு லீவர்.

கொண்டு போன மாமியின் உடலை அந்தத் தண்டவாளத்தின் மையத்தில் படுக்க வைத்தோம். ஊழியர் ஒருவர் லீவரைப் பிடித்து இழுக்க, தண்டவாளம் மேல் நோக்கி உயர்ந்தது. மற்றொரு ஊழியர் ஒரு ஸ்விட்சை இயக்க, கறுப்புக் கதவு உயரே நகர்ந்து, வழி விட்டது. அனல் வெளியே வரை அடிக்க, உள்ளே பார்த்தேன். நெருப்பின் வெறியாட்டம். தலையை ஸ்கேன் எடுக்க, நகரும் பலகையில் படுக்க வைத்து, எம்.டி. ஸ்கேன் இயந்திரத் துவாரத்துக்குள் செலுத்தப்படுவது போன்று, மாமியின் உடல் உள்ளே செலுத்தப்படும்போதே தீப்பிடித்துக் கொண்டது தெரிந்தது. கறுப்புக் கதவு இறங்கி மூடிக் கொண்டது. உயர்ந்த தண்டவாளம் தாழ்ந்து, நெருப்புப் படுக்கையில் மாமியின் உடலைக் கிடத்திவிட்டுச் சமர்த்தாக வெளியே வந்து, தன்னிடத்தில் பொருந்திக் கொண்டது.

அரை மணி நேரம்தான். ஒரு தகர டிரேயில் நெருப்பாகக் கொதிக்கும் எலும்புச் சில்லுகளும் சாம்பலுமாகக் கொண்டு வந்து நீட்டினார் ஊழியர். சாதாரண முறை தகனத்தில் மறுநாள்தான் சுடுகாட்டுக்குச் சென்று, ஒரு மண் சட்டியில் எலும்புகளைப் பொறுக்கிப் போட்டு, பால் ஊற்றி, ‘சஞ்சயனம்’ என்கிற சடங்கை நிகழ்த்த வேண்டியிருக்கும். மின்மயானத்தில் உடனடி தகனம். எனவே, கையோடே அந்தச் சடங்கையும் நிகழ்த்தி (சயனம் என்றால் உறக்கம்; சஞ்சயனம் என்றால், நிரந்தர உறக்கம் என்று பொருள்படும் என நினைக்கிறேன். ஜீவி என்றால் உயிரோடு இருப்பவன்; சஞ்சீவி என்றால், என்றும் அழியாமல் வாழ்ந்திருப்பவன்!) கடலில் அஸ்தியைக் கரைத்துவிட்டு, இரவு 9 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம்.

‘ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்
சூரியங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே!’ என்கிறார் திருமூலர்.

நினைப்பொழிய இன்னும் சில மாதங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு என் மனைவி மீதும், என் மீதும், என் குழந்தைகள் மீதும் பாசம் கொண்டிருந்தவர் என் மாமியார்.

அவர் வழக்கமாகப் படுத்திருக்கும் அறை மட்டுமல்ல; அனைவரின் இதயங்களும் வெறிச்சோடியிருக்கிறது.

சடுதியில் சாம்பலாகி, விநாடியில் கரைந்துவிட்டார் மாமியார். அவரின் நினைவுகள் அத்தனை எளிதில் சாம்பலாகிக் கரையும் என்று தோன்றவில்லை.

*****
இனிமையான உறவுகள் அமைவது, மற்றவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்கிறோமா என்பதில் இல்லை; தவறாகப் புரிந்து கொள்வதை எப்படித் தவிர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது!

மகரம் என்னும் மாமனிதர்!

சிலரின் அருமை, பெருமைகள் அவரோடு நாம் நெருங்கிப் பழகிக்கொண்டு இருக்கும் காலத்திலோ, அவர் உயிரோடு இருக்கும்போதோ நமக்குத் தெரிவதில்லை. அவரின் மறைவுக்குப் பின்பே தெரிய வருகின்றன. அப்படிச் சமீபத்தில் என் மதிப்பில் மிக உயர்ந்தவர் பழம்பெரும் எழுத்தாளர் ‘மகரம்’ அவர்கள்.

இவர் வேறு யாருமல்ல; என் மதிப்புக்குரிய நண்பர் மார்க்கபந்து அவர்களின் தந்தையார்தான்.

மார்க்கபந்துவுடன் நட்பு ஏற்பட்டுப் பழகத் தொடங்கிய பின்னர், பலப்பல முறை அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கிறேன். எனக்குப் பெண் பார்க்கச் சென்றபோது, எங்களோடு மார்க்கபந்துவையும் அவரின் தாயாரையும்கூட அழைத்துச் சென்றிருந்தோம். எங்கள் சார்பாகப் பெண் வீட்டாருக்கு என் சம்மதத்தைச் சொன்னவர் மார்க்கபந்துவின் தாயார்தான்.

நான் மார்க்கபந்துவின் வீட்டுக்குச் சென்றபோதெல்லாம் அதிகம் பேசியது அவரின் தகப்பனார் ‘மகரம்’ அவர்களுடன்தான். தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் கூடப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அவரும் சலிப்பில்லாமல் பழைய கதைகளையெல்லாம் சொல்வார். அந்தக் காலத்தில் சென்னை எப்படியிருந்தது (‘டவுட்டன் என்று சொல்வது சரியில்லை; டஃப்ட்டன் என்பதுதான் சரியான உச்சரிப்பு!’) என்பதிலிருந்து, ஏஜிஎஸ் ஆபீசில் வேலை செய்த அனுபவங்கள், எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் குணங்கள், ராஜாஜியைச் சந்தித்த அனுபவம் எனப் பலவற்றைச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே இருப்பார்; நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

அவர் பேசும்போது ஒரு விஷயத்தை நான் வேடிக்கையாகக் கவனிப்பது உண்டு. அதாவது, ஒரு விஷயத்தை ஆரம்பித்தார் என்றால், அதைத் தொட்டுத் தொட்டு வெவ்வேறு லின்க் பிடித்து, தாவித் தாவிச் சென்று, சொல்ல வந்த விஷயத்திலிருந்து திசை மாறி, ரொம்ப தூரம் தள்ளிப் போய்விடுவார். கடைசியில், “சரி, இப்போ இதை எதற்காகச் சொல்ல வந்தேன்?” என்று கேட்பார். சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டே இருப்பேனே தவிர, எனக்கும் எதற்காக அதைச் சொன்னார் என்று பேச்சின் ஆரம்ப நுனி தெரியாது. உதாரணமாக, ஒரு எழுத்தாளரைப் பற்றிய ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார் என்றால், அவரை எந்தத் தெருவில் முதன்முதலில் தாம் பார்த்தோம் என்பதை விவரித்து, ‘அப்போ அவர் வால்டாக்ஸ் ரோடில்தான் குடியிருந்தார்... வால்டாக்ஸ் ரோடுன்னு அதுக்கு ஏன் பேர் வந்தது தெரியுமா? அது ரொம்ப சுவாரசியமான கதை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல...’ என்று மாறி மாறிப் போய்க்கொண்டே இருப்பார். அவர் சொல்கிற விஷயங்கள் எல்லாமே சுவாரசியமாக இருக்கும் என்பதால், நானும் குறுக்கிடாமல் அவர் சொல்வதையெல்லாம் கேட்பேன்.

அவரோடு அத்தனை பழகியும், அவர் தன் எழுத்தைப் பற்றி என்னிடம் கடைசி வரையில் ஒரு வார்த்தை சொன்னதில்லை. ‘அப்பா அந்தக் காலத்தில் நிறைய எழுதியிருக்கார்’ என்று மார்க்கபந்து எப்போதோ ஒருமுறை சொன்னதோடு சரி. நான் மகரத்தைச் சந்தித்த சமயத்தில், அவர் குமுதம் பத்திரிகையின் பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளைப் படித்துப் பரிசீலித்துக் கொடுத்துக்கொண்டு இருந்தார். தவிர, மலேசியாவிலிருந்து வெளியாகும் செய்தித் தாள் (தமிழ்நேசன் என்று நினைக்கிறேன்) ஒன்றுக்குத் தமிழ்நாட்டுச் செய்திகளைத் தொகுத்து எழுதி அனுப்பிக்கொண்டு இருந்தார்.

சமீபத்தில் ஆனந்த விகடன் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1944-ம் ஆண்டு இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, ‘மகரம்’ எழுதிய பல நகைச்சுவைக் கட்டுரைகளைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். “ஐம்பதுகளில் அப்பா ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்” என்று மார்க்கபந்து சொல்லியிருக்கிறாரே தவிர, அப்பாவின் படைப்புகள் எதையும் இன்னின்ன தேதியில், இந்த இந்த இதழ்களில் வெளியானது என்று குறித்து வைத்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் கல்கி பத்திரிகையில் எழுதத் தொடங்கியவர் ‘மகரம்’. பின்புதான் விகடனிலும் எழுதத் தொடங்கினார். இவரது இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன். இவருக்கு ‘மகரம்’ என்று புனைபெயர் வைத்தவர் தேவன். மகரம் என்பது கே.ஆர்.கல்யாணராமனின் லக்னம்.

லா.ச.ரா., ரஸவாதி, தீபம் நா.பார்த்தசாரதி, எல்லார்வி, அநுத்தமா, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் போன்ற பல எழுத்தாளர்களோடு நெருங்கிய நட்பு கொண்டவர் மகரம். தான் பெரிய படைப்பாளியாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மற்ற பல எழுத்தாளர்களிடமிருந்து கதைகளைக் கேட்டு வாங்கிப் பல புத்தகத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். புகழ்பெற்ற 101 எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகள் கேட்டு வாங்கித் தொகுத்து, வானதி பதிப்பகத்தின் மூலம் நான்கு தொகுதிகளாக அவற்றை வெளியிட்டார்.

காந்திஜியின் கொள்கைகளை மையப்படுத்தி, கல்கி, ராஜாஜி, புதுமைப்பித்தன், அகிலன் என 50 எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து இவர் வெளியிட்ட ‘காந்தி வழிக் கதைகள்’ புத்தகத்துக்கு அந்தக் காலத்தில் பெரிய வரவேற்பு. அது சம்பந்தமாக ‘மகரம்’ முன்பு சொன்ன சுவாரசியமான சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.

‘காந்தி வழிக் கதைகள்’ புத்தகம் தயாரானதும், முதல் பிரதியை எடுத்துக்கொண்டு ராஜாஜியைப் பார்க்கச் சென்றிருந்தாராம் மகரம். ராஜாஜியிடம் புத்தகத்தைக் கொடுத்ததும், அவர் வாங்கி முதல் கதை யாருடையது என்று பார்த்திருக்கிறார். ‘கல்கி’யின் கதை. ‘சந்தோஷம்’ என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். “ஐயா! உங்கள் கதையும் இதில் இடம்பெற்றிருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்று கேட்டாராம் மகரம். “அப்படியா! பார்த்தேனே... இல்லையே? கல்கி எழுதிய கதைதானே வந்திருக்கிறது!” என்றாராம் ராஜாஜி. அதாவது, முதல் கதையாக தன் கதை இடம்பெறவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் அவர்.

மகரம் ‘காந்தி வழிக் கதைகளை’த் தொகுத்தபோது, அமரர் ஆனவர்களின் கதைகளை ஆரம்பத்தில் போட்டுவிட்டு, அதன்பின்னர் உயிரோடு உள்ளவர்களின் கதைகளை சீனியாரிட்டிப்படி தொகுத்திருக்கிறார். இதை ராஜாஜியிடம் விளக்கும் விதமாக, “ஐயா! அமரர் ஆனவர்களின் கதைகளை முதலில் வெளியிட்டுவிட்டேன். அடுத்ததாக உங்கள் கதையைத்தான் முதலாவதாக வெளியிட்டிருக்கிறேன்” என்றாராம். ராஜாஜி அர்த்தபுஷ்டியுடன் பார்க்க, மகரத்துக்குத் தான் சொன்னதில் உள்ள தவறு புரிந்ததாம். பெரியவர்களுடன் பேசும்போது நாம் எத்தனைக் கவனமாகப் பேச வேண்டும் என்பதை விளக்க மகரம் சொன்ன சம்பவம் இது.

தனக்கு அநாயாச மரணமே சம்பவிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருவார் மகரம். அநாயாச மரணம் என்றால், நோய், படுக்கை என்று இழுத்துப் பறித்துக்கொண்டு இராமல் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதமாக சட்டென்று ஆயுள் முடிந்துவிடுவது.

கேட்டவரம்பாளையம் என்று ஒரு ஊர். (இந்த ஊரை மையமாக வைத்து ‘கேட்டவரம்’ என்னும் தலைப்பிலேயே ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ‘அநுத்தமா’.) அங்கே ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமியை ஒட்டி நடைபெறும் சம்பிரதாய பஜனைக் கூட்டம் பிரசித்தி பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, 2001-ம் ஆண்டு, தமது மனைவியோடு காரில் புறப்பட்டுச் சென்றார் மகரம். போகிற வழியில் காரிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, திடீர் மரணம். மகரம் ‘கேட்ட வரம்’ கிடைத்துவிட்டது!

*****
யார் தன்னோடு இருக்கும்போது நம்மையும் பெரிய மனிதர் என்று உணரச் செய்கிறாரோ, அவரே பெரிய மனிதர்!

தேள் வந்து பாயுது காதினிலே..!

“மூட்டைப் பூச்சி கடித்ததற்கே இத்தனை அருமையான பதிவா? பாராட்டுக்கள். உங்களை அடுத்தடுத்து தேள், பாம்பு ஆகியவை கடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று எனது ‘ஒரு நூறு கொலை’ பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார் தோழி கிருபாநந்தினி.

நான் ஏழாம் வகுப்பு முடிக்கும் வரையில் கிராமத்தில் வசித்ததால் தேள், பாம்பு ஆகியவற்றுடன் பரிச்சயம் உண்டு. நாகப் பாம்பு, கட்டுவிரியன், பச்சைப் பாம்புகளை வயல்வெளிகளிலும், தண்ணீர்ப் பாம்புகளைக் கிணறுகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால், அவற்றிடம் ஒருபோதும் கடிபட்டதில்லை.

ஒருமுறை சங்கீதமங்கலம் கிராமத்தில் நடு ரோட்டில் ஒரு தவளையைக் கொம்பேறிமூக்கன் பாம்பு துரத்திக்கொண்டே ரொம்ப தூரம் சென்றதை, வெற்றி தோல்வி அறிய அவற்றின் பின்னாலேயே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். ஓரமாக மரம் செடி கொடிகளுக்கிடையில் ஓடித் தப்பித்துக் கொள்ளாமல், சீரியல் கதாநாயகி மாதிரி அந்தத் தவளை நடு ரோட்டிலேயே தாவித் தாவிச் சென்றுகொண்டு இருக்க, தரையில் பெரும்பான்மை உடல் படாமல் மிதக்கிற மாதிரி அந்தக் கொம்பேறிமூக்கன் பாம்பு சர்... சர்ரென்று துரத்திச் சென்ற காட்சி படு த்ரில்லாக இருந்தது. கிட்டத்தட்ட அரை பர்லாங் தூரம் துரத்திச் சென்று தவளையை லபக்கிவிட்டது அந்தப் பாம்பு.

பச்சைப் பாம்பு வகையைச் சேர்ந்தது கொம்பேறிமூக்கன். அது கடும் விஷமுள்ள பாம்பா, விஷமற்ற வகையைச் சேர்ந்ததா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், கொம்பேறி மூக்கனைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அது யாரையாவது கொத்திவிட்டுக் கிடுகிடுவென்று ஏதாவது ஒரு மரத்தின் உச்சியில் ஏறிக் கொள்ளுமாம். அங்கிருந்து சுடுகாடு இருக்கும் திசையை நோக்கிப் பார்க்குமாம் - தான் கொத்திய ஆளைக் கொண்டு வந்து எரிக்கிறார்களா என்று!

நாங்கள் குடியிருந்த வீடுகளுக்குள் பலமுறை பாம்புகள் வந்திருக்கின்றன. எங்கள் வீட்டு வாசலிலேயே எங்களின் வளர்ப்பு நாய் போல் எந்நேரமும் படுத்திருக்கும் தெரு நாய் ஒன்று, எங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட பாம்பை மிக சாமர்த்தியமாக ஒரு மணி நேரம் வேட்டையாடிக் கொன்ற காட்சி படு த்ரில்லானது. இன்றைய வசதி போல் அந்நாளில் டிஜிட்டல் வீடியோ கேமரா இருந்திருந்தால் அதைப் படமாக்கி யூ-டியூபில் சேர்த்திருப்பேன்.

நாங்கள் குடியிருந்த கிராமத்து வீடுகள் எல்லாவற்றிலுமே தேள் அனுபவம் கிடைத்திருக்கிறது.

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், பத்துப் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில், மெயின் ரோட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவு உள்ளடங்கி இருக்கும் அதனூர் என்கிற கிராமத்தில் நாங்கள் வசித்த குடிசை வீட்டில் தினம் தினம் தேள் வரும். ஒன்று இரண்டல்ல... எப்படியும் ஏழெட்டாவது தேறும்! படுத்திருக்கும்போது சுவரில் தேள் நகர்வது தெரியும்; கூரையில் தொற்றியிருப்பது தெரியும். சுவர் ஓரமாக ஓடுவது தெரியும். இப்போது நினைத்தால் திகிலாக இருக்கிறது; ஆனால், அந்நாளில் எப்படி நாங்கள் பயமில்லாமல் இருந்தோம் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒருமுறை, அம்மா காலையில் காபி போடுவதற்காக ஃபில்டரில் வழக்கம்போல் காபி பொடி போட்டு வெந்நீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோதும், டிகாக்‌ஷன் இறங்கவேயில்லை. பழைய பொடி கெட்டித்துப் போனால் அப்படியாவது வழக்கம்தான். அதற்கு ஒரு ட்ரிக் உண்டு. குடை போடுவது என்பார்கள். அதாவது ஃபில்டரில் சல்லடை மாதிரி இருக்கும் ஒரு உபகரணத்தைப் போட்டுவிட்டு, பின்பு அதற்கு மேலே காபிப் பொடியைக் கொட்டி, வெந்நீர் ஊற்ற வேண்டும். மின் வசதி கிடையாது. சிம்னி விளக்கில் ‘குடை’யைத் தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. எனவே, ஃபில்டரின் விளிம்பில் தட்டித் தட்டி டிகாக்‌ஷனை மெதுமெதுவாக இறங்கச் செய்தார்.

நாங்கள் விழித்துக்கொண்டு, பல் தேய்த்து ரெடியாவதற்குள் எல்லோருக்கும் காபி தயாராக இருந்தது. அப்பாவும், உடன்பிறந்தோர் நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு டம்ளர் காபி குடித்தோம். சுவையே இல்லை. “பழைய பொடி. சரியா டிகாக்‌ஷனே இறங்கலை. நாளைக்குப் புதுப் பொடி வாங்கிக் காபி போட்டுத் தரேன்” என்று சமாதானம் செய்தார் அம்மா.

பின்பு, காலை பத்து மணியளவில் பாத்திரங்களையெல்லாம் தேய்ப்பதற்காக ஃபில்டரைக் கொண்டு போய்த் தோட்டத்தில் உதறியபோது, காபிப் பொடியுடன் சேர்ந்து வந்து விழுந்தது வெந்நீரில் வெந்து போன ஒரு தேளின் உடம்பு.

உவ்வேக்! நாங்கள் குடித்த காபியெல்லாம் வெளியே வந்துவிடும்போல் வயிற்றைப் புரட்டியது. உடம்புக்கு ஏதாவது கெடுதி பண்ணுமோ என்று அப்பா அவசரமாக உள்ளூர் வைத்தியர் ஒருவரிடம் எங்களை அழைத்துச் சென்றார். “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! தேள் கொட்டினாத்தான் விஷம். தைரியமா போங்க” என்றார் வைத்தியர்.

தேள் என்றதும், எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தைக்குச் சரியாகத் தட்டாமல், உதறாமல் ஒரு ஷூவை மாட்டிப் பள்ளிக்கு அனுப்பி, அந்த ஷூவினுள் தேள் இருந்து, அது கொட்டிக் குழந்தை பரிதாபமாக இறந்து போன செய்திதான். இப்போது நினைத்தாலும் மனதில் வேதனை வரவழைக்கும் சம்பவம் அது.

ஒரு தேளை வீட்டுச் சுவரில், அல்லது கொல்லைப்புறத்தில் எங்கோ ஓரிடத்தில் பார்க்கிறோம் என்றால், அதை அங்கேயே துடைப்பக் கட்டையால் சட்னி செய்து போட்டாலும், மறுநாள் அதே நேரம், அதே இடத்தில் இன்னொரு புதிய தேள் இருப்பதைப் பார்க்கலாம். இது நியதியா என்று தெரியவில்லை. நாங்கள் அப்படிப் பலமுறை பார்த்திருக்கிறோம்.

தேளில் இன்னொரு பெரிய வகை உண்டு. நட்டுவாக்கிலி என்பார்கள். தேள் குட்டியாக, தேன் நிறத்தில் இருக்கும். நட்டுவாக்கிலி கறுப்பாக, கம்ப்யூட்டர் மவுஸ் சைஸுக்கு இருக்கும். அதுவும் எங்கள் வீட்டில் அடிக்கடி வந்திருக்கிறது. தேள் கொட்டினால் ஏற்படும் வலியைவிட, நட்டுவாக்கிலி கடித்தால் உண்டாகும் வலி நூறு மடங்கு! ஆனால், தேளைவிட நட்டுவாக்கிலியிடம் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஏனென்றால், தேள் மிக சுறுசுறுப்பு. நட்டுவாக்கிலி ரொம்பவே மந்தம்.

தேள் கொட்டிய கையோடு, நாம் வலியை உணர்வதற்குள் விறுவிறுவென்று ஓடி ஒளிந்துவிடும். கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நட்டுவாக்கிலி மெதுவாகத்தான் நகரும். இடுக்கி போன்ற தன் முன்னங் கைகளால் நம் காலை வாகாகப் பற்றிக் கொண்டு, கொட்டுவதற்கு ரொம்பவே நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்குள் நம் காலில் ஏதோ ஊர்வது தெரிந்து, உதறிவிடலாம்; அதை சம்ஹாரம் செய்து விடலாம்.

சற்றுப் பெரிய தேள்களைக் கொன்று, மண்ணில் குழி வெட்டிப் புதைப்பார்கள். சில நாட்களுக்குப் பின்பு அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால், தேளின் உடல் மண்ணோடு மண்ணாகியிருக்க, தேளின் வால் பகுதியில் உள்ள கணுக்கள் மட்டும் வளையம் வளையமாக விழுந்து கிடப்பது தெரியும். அதை எடுத்துக் கோத்து, குழந்தை கழுத்தில் மாலையாகப் போட்டால், குழந்தையை தேள், பாம்பு எதுவும் அண்டாது என்று கிராமங்களில் ஒரு நம்பிக்கை உண்டு.

‘...தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க...’ என்று கந்த சஷ்டி கவசம் சொல்வதுதான் அந்தக் காலத்தில் தேள், பாம்பு பயம் அகல எங்களுக்கு ஒரே வழி!

இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. தேள், நண்டு, பூரான் எல்லாவற்றையும் பாடம் பண்ணி, கண்ணாடிக்குள் பதித்து, நெக்லஸ் மாதிரி பெண்கள் போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்களாமே! அப்படி ஒரு நெக்லஸ் படம்தான் மேலே இருப்பது.

வாழ்க நாகரிகம்! வாழ்க பெண்கள்! வாழ்க தேள்!

***
தைரியம் என்பது வேறில்லை; தன் பயத்தை எதிராளிக்குத் தெரியாமல் மறைப்பது!

மூழ்கிய பஸ்ஸுக்குள் நான்!

ன்று அலுவலகத்திலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது, நல்ல மழை! துரைசாமி சப்-வேயில் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று வாகனங்களை வடக்கு உஸ்மான் சாலைப் பக்கம் திருப்பி விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அங்கேயும் வாகன நெரிசல். எனவே, எங்கள் 11-G பஸ் பனகல் பார்க்கை பிரதட்சணமாகச் சுற்றிக்கொண்டு, ஜி.என்.செட்டி சாலைக்கு வந்து, கண்ணதாசன் சிலை அருகில் இடப்பக்கம் திரும்பி, வெள்ள நீரில் ஊர்ந்து, சந்து பொந்துகளில் நுழைந்து, நேரே கோடம்பாக்கம் பாலம் வழியாக 17-D போகிற வழியில் லிபர்ட்டி, பவர் ஹவுஸ் என அசோக் பில்லருக்கு வந்து சேர்ந்தது.

மழை, வெள்ளம், சப்-வேயில் தண்ணீர் என்றதும், பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அப்படித்தான் ஒரு மழை நாளில் சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்-வேயில் பஸ்ஸினுள் மாட்டிக் கொண்ட பகீர் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அன்றைக்கும் (1996) இப்படித்தான் சென்னை வெள்ளக் காடாக மாறியிருந்தது. வழக்கமாக டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் 11-G பஸ்ஸில்தான் ஏறுவேன். ஆனால், அன்றைக்கு கே.கே.நகர் செல்லும் பஸ்கள் வரவேயில்லை. அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும், அத்தனையிலும் கூட்டம். எனவே, மேற்கு சைதாப்பேட்டை செல்லும் 18-K பஸ்ஸில் சென்று, சீனிவாசா தியேட்டருக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் (மேட்டுப்பாளையம்) இறங்கிக் கொண்டு, அசோக் நகருக்குப் பொடி நடையாக நடந்து போய்விடலாம் என்று கணக்குப் போட்டேன். அப்போது இரவு மணி 7 இருக்கும்.

அதன்படியே, அடுத்து கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்த 18-K பஸ்ஸில் ஏறினேன். தியாகி அரங்கநாதன் பாலம் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைத் தாண்டினால் சீனிவாசா தியேட்டர் வந்துவிடும். சப்-வேயை நெருங்கும்போதே பாலத்தின் அடியில் மழைத் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பது தெரிந்தது. பஸ் அந்தக் குளத்தை நீந்திக் கடக்குமா என்று சந்தேகமாக இருந்தது.

“டிரைவரு கொஞ்சம் துடியா இருந்தா பஸ்ஸு சல்லுனு போயிருங்க. இதுக்கு முந்தி வந்த பஸ்ஸு போயிருச்சே!”

தெருவில் நின்ற யாரோ யாரிடமோ பேசியது எங்கள் பஸ் டிரைவரின் காதுகளிலும் விழுந்து உசுப்பேற்றியிருக்க வேண்டும். தயங்கி, ஊர்ந்துகொண்டு இருந்த பஸ்ஸை சட்டென்று கியர் மாற்றி, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற துடிப்போடு, விசையுடன் செலுத்தத் தொடங்கினார்.

சுற்றிலும் இருந்த பயணிகளின் முகத்தைப் பார்த்தேன். ஒருவர் முகத்திலாவது கவலை ரேகை தெரிய வேண்டுமே? ம்ஹூம்! ஒரு சாதனை செய்யப் போகும் மகிழ்சசிதான் தெரிந்தது.

பஸ் தண்ணீருக்குள் இறங்க இறங்க, ‘ஹோ’வென்ற உற்சாகக் குரல்கள் எழுந்தன. பஸ் படிக்கட்டைத் தண்ணீர் தொட, பஸ்ஸின் வேகம் குறையத் தொடங்கியது. முக்கி, முனகி முன்னேறிற்று.

“யப்பா... போவாது! ரிவர்ஸ் எடு!” என்று அனுபவஸ்தர்கள் சிலர் குரல் கொடுக்க, “அட, நீ வேற! இம்மாந்தூரம் வந்துட்டோம். டிரைவர் சார், ஒரு தம் புடிச்சுக் கிளப்புங்க. போயிரலாம்!” என்று வேறு சிலர் உற்சாகமூட்டினர்.

பஸ் மேலும் முன்னேறியது. இப்போது பஸ்ஸுக்குள்ளேயே தண்ணீர் வந்து பயணிகளின் பாதங்களை நனைத்தது. அத்தனை பேரும் ‘ஹோவ்’ என்று குஷியாகக் கிறீச்சிட்டுக் கத்தினார்களே தவிர, நடக்கப் போகும் பயங்கரம் பற்றி அவர்கள் உணரவேயில்லை.

பாலத்தின் நேர் கீழாக வந்து நின்ற பஸ் மேலே நகர மறுத்துச் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. டிரைவர் தன்னால் ஆன வரை முயன்றார். அடிபட்ட புலி மாதிரி உர்ர்... உர்ர்... என்று உறுமியதே தவிர, பஸ் கொஞ்சமும் அசையக் காணோம்.

வெளியே நல்ல மழை. பஸ்ஸுக்குள் தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் இப்போது ஸீட்டுகளில் ஏறி நின்றுகொண்டு இருந்தோம். சிலர் சூரத்தனமாக ஜன்னல் வழியாக வெளியேறி, பஸ்ஸின் டாப்பில் ஏறிக் கொண்டனர். பொது நல விரும்பிகள் சிலர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, பஸ்ஸைத் தள்ள முயன்றனர். நடக்கவில்லை. அவர்கள் பாதி நடையும் பாதி நீச்சலுமாகப் போய்விட்டார்கள்.

எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அவர்களைப் போலவே நானும் குதித்து நீந்திப் போய்விடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். ‘சரி, என்னதான் ஆகிறது, பார்ப்போமே!’ என்று கொஞ்சம் பொறுமையாக இருந்தேன்.

வெள்ள நீர் மட்டம் உயர உயர, பஸ் பிடிப்பில்லாமல் மெதுவாக சாய்வது போல் இருந்தது. உள்ளே இருந்தவர்களுக்கு முதன்முறையாக மரண பயம் ஏற்பட்டது. இதற்குள் மேலும் சிலர் தண்ணீரில் இறங்கி நீந்திப் போகத் தொடங்கியிருந்தார்கள்.

“என்னாங்க டிரைவர்! ஆம்பளைங்கல்லாம் ஒவ்வொருத்தரா குதிச்சு, நீஞ்சிப் போயிக்கிட்டே இருக்காங்க. நாங்க என்ன பண்றது? இப்படியே ஜல சமாதி ஆயிட வேண்டியதுதானா?” என்று பெண்கள் கூட்டம் கத்தியது.

“பொறும்மா! ஃபயர் சர்வீஸுக்கு ஆள் போயிருக்கு. இப்ப வந்துடுவாங்க. ஒண்ணும் ஆகாது. பயப்படாதீங்க!” என்று தைரியம் சொன்னார் கண்டக்டர். இதற்கிடையில் வேறு சில ஆண்கள், பெண்களின் கையிலிருந்த குழந்தைகளையும், சிறுவர்களையும் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு நீந்திக் கரையில் கொண்டு சேர்த்தவண்ணம் இருந்தார்கள். நானும் ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு - அல்ல; கிட்டத்தட்ட தண்ணீரில் ஒரு மிதவை போல் அவனை இழுத்துக்கொண்டு கரையில் கொண்டு சேர்த்தேன். என் கைப்பையை அந்தப் பையனிடம் கொடுத்துவிட்டுத் திரும்ப பஸ்ஸுக்கு வந்தேன் - இன்னும் யாரையாவது கரைக்கு அழைத்துப் போக முடியுமா என்று பார்க்க.

இதற்குள் பஸ்ஸுக்குள் தண்ணீர் மட்டும் மேலும் உயர்ந்திருந்தது. அத்தனை பேர் முகங்களிலும் மரண பீதி. பெரும்பாலும் உள்ளே இருந்தவர்கள் பெண்களும், முதியவர்களும்தான்.

இதற்குள் ஃபயர் சர்வீஸ் வந்து சேர்ந்தது. ரயில் பாலத்தின் மீதேறி, அங்கிருந்து ஏணியை இறக்கி, பஸ்ஸின் டாப் மீது நிற்பவர்களை மீட்க முடியுமா என்று யோசித்தார்கள். அது வேலைக்காகவில்லை. காரணம், பாலத்தின் தண்டவாளப் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு, ஷாக் அடித்தது. எனவே, ஏணியின் ஒரு முனையை பஸ்ஸின் ஜன்னலிலும் மறுமுனையை பக்கவாட்டிலிருந்த நடைபாதையிலும் வைத்து, பயணிகளை ஜன்னல் வழியாக வெளியேறி ஏணி வழியே தவழ்ந்தும் ஊர்ந்தும் வரச் சொன்னார்கள். பெண்கள் உள்படப் பலர் அந்த வழியாக வெளியேறினர். முதியவர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாகிவிட்டது.

எப்படியோ... வெளியேறிய அத்தனை பேர் முகத்திலும் ‘கிளிஃப் ஹேங்கர்’ சாதனையைத் தானும் செய்துவிட்ட பரவசமும் சந்தோஷமும் கொப்பளித்தது!

நானும் சொட்டச் சொட்ட நனைந்த குருவி போல ஈரமும் நடுக்கமுமாக ராத்திரி 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

எல்லாம் சரி..! மறு நாள் செய்தித் தாளில் அந்தச் செய்தியைப் பார்த்தபோதுதான், தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

‘நேற்று இரவு சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலத்தின் அடியில் சிக்கியிருந்த 18-K பஸ்ஸை தீயணைப்புக் குழுவினர் வந்து மீட்டனர். அதில் உட்கார்ந்த நிலையில் ஒரு பெரியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார், என்ன என்கிற...’

***
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!

பத்து நாள் யுத்த டயரி!

போன சனிக்கிழமையிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை - கடந்த பத்து நாட்களாக - தூங்காமல் இருக்கிறேன். இது கின்னஸ் ரிக்கார்டாகக்கூட இருக்கலாம்; யார் கண்டது?! (தினமும் காலையில் ஐந்து மணி முதல் ஏழு அல்லது ஏழரை வரை தூங்குகிறேன். கின்னஸில் இதற்கு இடம் உண்டு. தொடர்ந்து நாள் கணக்கில் விடாமல் பேசுவதை கின்னஸில் பதிகிறவர்களுக்கும் இடையிடையே ஐந்து, பத்து நிமிடங்கள் ஓய்வாக இருப்பதை கின்னஸ் அனுமதிக்கிறதே; அது போல என் தினசரி ஒன்றரை மணி நேரத் தூக்கத்தை - ஹூம், அது ஒரு தூக்கமா! - எடுத்துக் கொள்ளுங்கள்.)

தூக்கம் போனதற்குக் காரணம், என் பதிவைத் தொடர்ந்து படித்து வரும் அன்புக்குரிய வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் - மூட்டைப் பூச்சி. இதற்கு முன் பல முறை மூட்டையிடம் கடிபட்டிருக்கிறேன் என்றாலும், இந்த முறை அவை ராஜபக்‌ஷேவின் காட்டுமிராண்டிப் படை இலங்கைத் தமிழர்கள் மீது நடத்திய இறுதி யுத்தம் போன்று என் மீது பாய்ந்து, கடித்துக் குதறிவிட்டது. ஒரு நாளல்ல, இரு நாளல்ல... தொடர்ந்து பத்தாவது நாளாக நேற்றைக்கும்!

நானோ எல்லோராலும் கைவிடப்பட்ட பிரபாகரன் நிலையில், எதிர்த்துப் போராடத் திணறிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்களிடமெல்லாம் என் மூட்டைப் புராணத்தை அவிழ்த்து, அதைப் போக்க ஏதேனும் உபாயம் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

என் பத்து நாள் யுத்த டயரி இதோ:

24-10-09: முதலில், மூட்டைகளை எதிர்த்து சற்றே சாத்விக யுத்தம்தான் நடத்தினேன். வெறும் கெரசினைத் துணியில் நனைத்து, இண்டு இடுக்குகளில் பூசினேன். அதிலேயே எதிரி ஒழிந்தான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். இரவு எட்டு, ஒன்பது மணி அளவில் கெரஸினைத் தளும்பத் தளும்பப் பூசியிருந்தாலும், அவை இரவு பதினோரு மணிக்குள் ஆவியாகி, பன்னிரண்டு மணிக்கு மூட்டைப் படை என்னைத் தாக்கியது. கெரஸின் வாடைக்கு மூட்டை வராது என்று சொல்கிறார்களே, அது பச்சைப் பொய்!

25-10-09: ஞாயிறு. கடைகளுக்குச் சென்று மூட்டை பற்றிப் பிரஸ்தாபித்து, மூக்குடை பட்டேன். “அட, அது மூட்டையாய் இருக்காதுங்க. இந்தக் காலத்துல ஏதுங்க மூட்டை? அதையெல்லாம் எப்பவோ ஒழிச்சுக் கட்டியாச்சே! நீங்க பார்த்தது கறையானா இருக்கும். அல்லது, அந்துப் பூச்சியா இருக்கும். அது கடிச்சாலும் மூட்டைக் கடி மாதிரிதான் இருக்கும். அதே போலத்தான் தடிக்கும்” என்றார்கள். என்னவோ பெரியம்மையை ஒழித்துவிட்ட ரேஞ்சுக்கு மூட்டைப் பூச்சியை ஒழித்துவிட்ட மாதிரி பேசினார்கள். அவர்களிடம் மேலும் விவாதிக்க விரும்பாமல், “சரி, ஏதோ ஒரு பூச்சி! அதை ஒழிக்க ஏதாச்சும் மருந்து இருந்தா கொடுங்க!” என்றேன். “வேறென்ன, ஹிட்டுதான்! வாங்கிட்டுப் போய் அடிங்க! கரப்பு கிரப்பு, கொசு கிசு, பல்லி கில்லி எல்லாம் செத்துப் போயிரும்” என்று உத்தரவாதமாய்ச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை நம்ம்ம்ம்பி வாங்கிட்டுப் போய் என் அறைக்கு மட்டும் அந்த எண்பது ரூபாய் ஹிட் மொத்தத்தையும் கமறக் கமற அடித்தேன். அடித்த நெடியில் எனக்கே சற்று கேரிங்காக இருக்கவும், முழு நம்பிக்கை பிறந்து, சன் டி.வி. ஞாயிறு காலை ராமாயண சீரியல் ராவணன் போல “கெக்கெக்கெக்கெக்...”கென்று சிரித்து, “ஒழிந்தார்கள் அந்த மதி கெட்ட மூட்டையர்கள். ஆடிவிட்டேன் அவர்களை நான் வேட்டை!” என்று கெக்கலி கொட்டிச் சிரித்தேன். அன்றைக்கு இரவு, மூட்டைப் படை வீறு கொண்டு எழுந்து, என் மீது கிளஸ்டர் குண்டுகளைப் போட்டது மாதிரி உடம்பு பூராவும் பிடுங்கி எடுத்தது. “முட்டாளே! ஹிட்டாமில்ல ஹிட்டு! இப்ப நாங்கதான் கண்ணு ஹிட்டு!” என்று அவை என்னைக் கேலி செய்தன.

26-10-09: திங்களன்று அலுவலகத்தில் தூக்கம் கெட்ட மயக்க நிலையில் அமர்ந்துதான் வேலை பார்த்தேன். இன்றைக்கு இரவு மூட்டையை எப்படியாவது ஒழித்துவிடுவது என்று என் தோள்கள் தினவெடுக்க (அல்லது, நேற்றைய மூட்டைக் கடியின் அரிப்போ?) சீக்கிரமே வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்காரரையே போய்க் கேட்டேன். “ஒண்ணுமில்லீங்க, எறும்புப் பொடியை வாங்கித் தூவுங்க. உடனே போயிடும்” என்றார் சிம்பிளாக. “கொடுங்க ஒரு அரை கிலோ” என்று வாங்கிக் கொண்டு வந்து, அறை ஓரங்களில் எறும்புப் பொடியை - யாராவது அமைச்சர் விஜயம் செய்தால் அந்தத் தெருவில் இரண்டு பக்கமும் பிளீச்சிங் பவுடரால் பார்டர் கட்டுவார்களே, அந்த ரேஞ்சுக்கு - தூவி வைத்தேன். ‘இப்ப எப்படி வருவே? இப்ப எப்படி வருவே?’ என்று நடுவாகப் படுத்தேன். பதினோரு மணி இருக்கும். தோள்பட்டையில் முதல் கடி; அடுத்துக் கொஞ்ச நேரத்தில் இடுப்புப் பக்கம் ஒரு கடி; பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன்; கால் ஆடு சதையில் மூன்றாவது கடி! எம்.ஜி.ஆர்.கூட மூன்று அடிகளைத்தானே பொறுப்பார்! அடுத்த அடி அடிக்க ஓங்குகிற வில்லனின் கையை அப்படியே பிடித்து முறுக்கி, எதிர்த் தாக்குதல் தொடங்கிவிடுவார் அல்லவா? நானும் எதிர்ப்பது என்று முடிவு கட்டிவிட்டேன். டியூப் லைட்டைப் போட்டுப் பார்த்தேன். ஏழெட்டு மூட்டைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தன. அத்தனையும் ஒன்று விடாமல் இழுத்து வைத்து ஆத்திரம் தீர நசுக்கினேன். இன்னும் ஏதாவது எதிரிப் படை ஒளிந்து இருக்கிறதா என்று பாய், தலையணைகளை உதறிப் பார்த்தேன். இல்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தேன். ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது. மீண்டும் கடிகள். எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தால் மேலும் பத்துப் பன்னிரண்டு மூட்டைகள். ‘விடாதே! நசுக்கு!’ இப்படியே அன்றைய பொழுதும் சுபமாக விடிந்தது.

27-10-09: செவ்வாய். புழுதிவாக்கத்திலிருந்த என் தங்கைக்குப் போன் செய்து மூட்டைக் கடி பற்றி ஒரு குரல் அழுதேன். “இங்கேயும் எக்கச்சக்கமா மூட்டைப்பூச்சி இருந்துதுண்ணா! நாங்களும் எறும்பு மருந்து, ஹிட்டுன்னு என்னென்னவோ பண்ணிப் பார்த்தோம். போகலை! அப்புறம் தெரிஞ்ச மாமி ஒருத்தங்க ஒரு யோசனை சொன்னாங்க. படிகாரத்தை வாங்கிப் பொடி பண்ணிப் போட்டு வெச்சா, அந்த வாசனை மூட்டைப் பூச்சிக்குப் பிடிக்காது. உடனே ஓடிப் போயிடும்னு சொன்னாங்க. அது மாதிரியே பண்ணினேன். இப்போ இங்கே ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லே. நீயும் அது மாதிரி பண்ணு!” என்றாள். இதே யோசனையைத்தான், என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் கிருபாநந்தினி என்கிற வாசகியும் பின்னூட்டம் இட்டிருந்தார். எனவே, இந்த முறை மூட்டையார் தப்ப முடியாது என்ற பெரு நம்பிக்கையோடு அரை கிலோ படிகாரம் வாங்கி வந்து பொடி செய்து, நெடி அடிக்க, சுவர் ஓரர்களில் தூவி வைத்தேன். எறும்பு மருந்துக்கே பெப்பே சொல்கிற எங்கள் வீட்டு மூட்டையார் படிகாரத்துக்கு பை...பை... சொல்லமாட்டாரா என்ன? அன்றைக்கும் தூக்கம் போச்சு!

28-10-09: அலுவலகம் பூராவும் என் பரிதாப நிலை பரவிவிட்டது. “ஹிட் அடிச்சுப் பார்த்தீங்களா?” என்றார் ஆர்ட்டிஸ்ட் ராஜா. “பார்த்தேன். அதுக்கெல்லாம் அது அசைஞ்சு கொடுக்கலை. ஹிட்டுங்கிறது வெறும் கரப்புக்கு மட்டும்தானே? மூட்டைப் பூச்சி எப்படி ஒழியும்?” என்றேன். “இல்லையே! கரப்புக்குன்னு போடுவானே தவிர, மூட்டைப் பூச்சியும் சாகணுமே?” என்றார். “இந்த நியாயம் உங்களுக்குத் தெரியுது. அந்தப் பாழாப் போன மூட்டைப் பூச்சிக்குத் தெரியலையே?” என்றேன். “வேற வழியில்லை. நான் ஒரு நம்பர் தரேன். பெஸ்ட் கண்ட்ரோல்காரங்க நம்பர். அதுக்கு போன் பண்ணீங்கன்னா, உடனே வீட்டுக்கு வந்து மூட்டைப் பூச்சியை ஒழிச்சுக் கொடுத்துட்டுப் போவாங்க. ஒரு நாள் மட்டும் வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்க வேண்டியிருக்கும். வேற எங்கேயாவது போய் இருந்துக்குங்க” என்றார். அங்கேதான் இடித்தது. இரவு எறும்பு மருந்தை கெரஸினில் கரைத்து என் அறை முழுக்கப் பூசினேன். (வேடிக்கை என்னவென்றால், என் அறையில் மட்டும்தான் மூட்டைகளின் அராஜக, அடாவடித்தனம். மற்ற அறைகளில் இல்லை. அங்கே படுக்கலாமே என்பீர்கள். முடியாது. எல்லா அறைகளும் ஹவுஸ்ஃபுல்!) கெரஸின்+எறும்பு மருந்து என இரட்டைத் தாக்குதல் நடத்தியும் பலனில்லை. தூக்கம் கெட்டது கெட்டதுதான்!

29-10-09: என் பையனுக்கு ஒரு புத்தகம் வாங்குவதற்காக எம்.ஜி.ஆர். நகருக்குச் சென்றபோது, அங்கே அந்தப் புத்தகக் கடைக்காரரிடம் மூட்டைக்கு மருந்து உண்டா என்று கேட்டேன். மண்ணெண்ணெய் பூசி மண்டை காய்ந்ததாய், ஹிட் அடித்துத் தோல்வியுற்றதாய், எறும்பு மருந்து போட்டு ஏமாந்ததாய், படிகாரம் தூவிப் பல்லிளித்ததாய் முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிட்டேன். “அடடா! சரியானதை விட்டுட்டு நீங்க வேற எதை எதையோ செஞ்சிருக்கீங்களே சர்ர்! பேகான் ஸ்ப்ரே வாங்கி அடிங்க. பட்டுனு போயிடும்” என்றார். “அது கரப்புக்குதானே? மூட்டைப் பூச்சி போகுமா?” என்றேன். “அதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு அவ்வளவு தூரம் தெரியாது சார். நீங்க வாங்கி அடிங்க. போச்சா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க” என்றார். வாங்கி வந்து அடித்தேன். மூட்டையாரிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

30-10-09: ஆர்ட்டிஸ்ட் ராஜாவின் நண்பர் ஒருவர் நெட்டில் மூட்டைப் பூச்சிக்கு மருந்து தேடினார். அரண்மனைக்காரன் தெருவில், அங்கப்ப நாயக்கன் தெருவில், குறளகம் எதிரில் இங்கெல்லாம் மூட்டைப் பூச்சி மருந்துகள் கிடைப்பதாகச் சொன்னார். உடனே போனேன். அந்தக் கடைக்காரர்களும் முதலில் ஹிட்டை எடுத்து நீட்டினார்கள். “இதெல்லாம் பத்தாது! டிக்-20 மாதிரி பவர்ஃபுல்லா ஏதாச்சும் இருந்தா கொடுங்க” என்றேன். “முந்தியெல்லாம் வந்தது சார்! அத்தக் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு இப்ப அதைத் தடை பண்ணிட்டாங்க. சரி, இதை அடிச்சுப் பாருங்க” என்று ஹிட் மாதிரியே ஒன்றை எடுத்துக் காண்பித்தார். NO-P என்பது அதன் பெயர். அதாவது No Pest-ஆம்! பெஸ்ட் என்றால் கறையான் அல்லவோ? மூட்டை போகுமா என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன். கடைக்காரர் அந்த டப்பா மீது ‘பெட் பக்ஸ்’ உள்பட செத்து ஒழியும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காண்பித்தார். அப்பாடா! முதன்முறையாக மூட்டைப் பூச்சி ஒழிவதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! சந்தோஷமாக அதை வாங்கி வந்து இரவு, “இன்னியோட செத்தீங்கடா மூட்டைங்களா!” என்று அடித்தேன். நெடி தூக்கலாக இருந்தது. ஒழிந்துவிடும் என்று நினைத்தேன். ஒழியவில்லையே! மருந்தின் நெடியிலும், மூட்டைக் கடியிலும் எனக்கு அன்றைக்கும் தூக்கம் கெட்டது.

அதென்னவோ, படுக்கை விரிக்கிற வரைக்கும் ஒரு மூட்டைப் பூச்சியும் கண்களுக்குத் தென்படுவதில்லை. விளக்கை அணைத்துப் படுத்தால், எந்தப் பக்கத்திலிருந்து வந்தன என்றே தெரியாமல் போர்வையின் கீழே எல்லாம் மூட்டைப் பூச்சிகள்! இன்றைக்கு எத்தனை மூட்டைப் பூச்சிகள் என்னைக் கடித்தன என்று கணக்கிடும் ஆசை வந்தது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கெரஸினைக் கொட்டிக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, மூட்டை கடிக்கக் கடிக்க, சட்டென்று எழுந்து விளக்கைப் போடுவதும், பரபரத்து ஓடும் மூட்டைகளைப் பிடித்துக் கெரஸின் கிண்ணத்தில் போடுவதுமாய் இருந்தேன். விடியும்போது கிண்ணத்தில் பாதி அளவு மூட்டை நிரம்பியிருந்தது. ஒரு தடவைக்குக் குறைந்தபட்சம் பத்து மூட்டைகளை எடுத்துப் போட்டேன் என்றால், விடிவதற்குள் முப்பது முறையாவது போட்டிருப்பேன். ஆக, ஏறத்தாழ முன்னூறு மூட்டைகள்!

31-10-09: வேப்பெண்ணெய் பூசினால் அந்த வாசனைக்கு மூட்டை போய்விடும் என்று யாரோ சொன்னார்கள். நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, யார் எதைச் சொன்னாலும் கேட்டு அதன்படி செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன ஒன்று... ஏதேனும் புதிய ஐடியாவாக இருக்க வேண்டும்! சொன்னதையே சொல்லப்படாது! வேப்பெண்ணெய் பூசி வைத்ததில், எங்கள் தொண்டையெல்லாம் கசப்பு வழிந்தது. மூட்டைக்குத் தொண்டை என்று ஒன்று இருந்தால்தானே?

1-11-09: ஞாயிறு. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து பழைய தலையணைகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, புதிய தலையணைகள், புதிய தலையணை உறைகள் வாங்குவோமென்று எம்.ஜி.ஆர். நகர் போனேன். அந்தக் கடைக்காரரிடம் மூட்டைப் பூச்சி ஒழிய ஒரு உபாயம் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் சுவாரஸ்யமாக இன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டார். “குடிக்கிற தண்ணி நல்லா இருக்கா சார் முதல்ல? அந்தக் காலத்துல மாம்பழம் இயற்கையா பழுக்கும். தின்னிருக்கோம். இல்லேன்னா வைக்கோலைச் சுத்தி, அரிசி டின்ல போட்டு பழுக்க வெச்சுத் தின்னுவோம். இன்னிக்குக் கல்லைப் போட்டுப் பழுக்க வைக்கிறாங்களாம். உடம்பு நாசமாத்தான் போவும். கத்திரிக்காய்ல கூட மரபணுக் கத்திரிக்காய் கண்டுபிடிச்சுருக்காங்களாமே... இன்னும் மனுஷனத்தான் செய்யலே! கூடிய சீக்கிரம் அதையும் செஞ்சுருவாங்க. அப்புறம் அவனைச் சாகடிக்க முடியாது. அவன் நம்மையெல்லாம் சாகடிச்சுட்டுப் போயிடுவான்” என்று, சிக்கினாண்டா சீமாச்சு என ஒரு மணி நேரத்துக்குப் பிளேடு போட்டுவிட்டுக் கடைசியில் உருப்படியாக ஒன்றைச் சொன்னார்... “பக்கத்துல ஹார்டுவேர் கடைங்க இருக்குது. அங்கே போங்க. செல் ஆயில்னு கேளுங்க. தருவாங்க. எடுத்துட்டுப் போயி, முகமூடி கட்டிக்கிட்டு, ஒரு பிரஷ்ஷால சுவர்ல அந்த ஆயிலை அடிங்க. நெடி பயங்கரமா அடிக்கும். மூட்டை நூறு பர்செண்ட் செத்துரும். சந்தேகமே வேணாம்” என்றார்.

நிறைய பொது அறிவு விஷயங்களாகப் பேசினாரே, அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஹார்ட்வேர் கடையில் போய் செல் ஆயில் கேட்டேன். குட்டியூண்டு கேன் 48 ரூபாய். ஸ்வைன் ஃப்ளூ முகமூடி ஒன்று பத்து ரூபாய். ஒரு பிரஷ் 30 ரூபாய். அவர் சொன்னது போல செல் ஆயிலின் நெடி உங்க வீட்டு நெடி எங்க வீட்டு நெடி இல்லை. நேரே தொண்டைக் குழிக்குள் காரமாக இறங்கியது அந்த நெடி. இருமல் வந்தது. இரவு எட்டு மணிக்கு செல் ஆயில் அடித்தபோது இருந்த நெடியை விட நேரமாக ஆக, நெடியின் வீர்யம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. அறைக் கதவைச் சாத்திவிட்டு வேறொரு அறையில் படுத்தும் எனக்குத் தூக்கம் இல்லை. இரவு மூன்று மணிக்குக் கதவைத் திறந்து பார்த்தால், குபீரென்று கார நெடி முகத்தைத் தாக்கிற்று. சாத்திவிட்டுப் படுத்துக்கொண்டேன். ‘நிச்சயம் இந்த மருந்து சூப்பர் பவர்தான். மூட்டைகள் ஒழிந்தால், அந்தத் தலையணைக் கடைக்காரருக்கு சாக்லேட் வாங்கிப் போய்த் தரவேண்டும்’ என்று யோசித்தபடியே படுத்திருந்தேன்.

2-11-09: மறு நாள் காலை எழுந்து, அலுவலகம் கிளம்புகிற வரைக்கும் செல் ஆயிலின் நெடி இருந்தது. மாலை வீட்டுக்கு வந்தபோதும் லேசான நெடி இருந்தது. நேற்றைக்கு முழு நம்பிக்கையோடு படுத்தேன். என் நம்பிக்கை மொத்தமும் வீணானது. செல் ஆயிலை செல்லாத ஆயிலாக்கிவிட்டு, மூட்டைப் பூச்சிகள் என் மீது ஊர்ந்தன. கொலை வெறியோடு ஒவ்வொன்றாகப் பிடித்துக் கட்டை விரலுக்கும் நடு விரலுக்கும் இடையே வைத்துத் திரித்து நசுக்கினேன். ஒரு வித்தியாசம் கவனித்தேன். இதற்கு முன் மூட்டையை நசுக்கினால், புளிச்சென்று ரத்தம் பீய்ச்சியடிக்கும். இப்போதோ, ஏதோ அழுக்கைத் தேய்ப்பது போல் மூட்டை கசங்கியதே தவிர, ரத்தம் வரக் காணோம். செல் ஆயில் வீர்யத்தால் அதன் ரத்தம் சுண்டிவிட்டதா என்று தெரியவில்லை. அப்படியும் கடிக்கிறதே!

3-11-09: இன்றே கடைசி! மூட்டைக்கெதிரான என் யுத்தத்தை முடித்துக்கொண்டு சரண் அடைந்துவிடலாம் என்றிருக்கிறேன். காலையில் அருகில் உள்ள ஹார்ட்வேர் கடைக்குப் போய் செல் ஆயில் இருக்குமா என்று கேட்டேன். எதுக்குங்க என்றார். சொன்னேன். “மூட்டைப் பூச்சிக்குன்னு டெர்மைட்ஸ்னு ஒரு ஆயில் இருக்குது. இதப் போடுங்க. நெடி அதிகம் இருக்காது. ஆனா, மூட்டை போயிடும்” என்று சொல்லிக் கொடுத்தார். என் அறை, என் அறையைத் தொட்டுக்கொண்டு இருக்கும் மற்ற இரண்டு அறைகள் முழுக்க லைசோல் தெளித்து, ஹார்ப்பிக் போட்டுச் சுத்தமாகக் கழுவித் தள்ளினேன். துணியால் துடைத்துக் காய வைத்தேன். டெர்மிட்ஸ் ஆயிலை அங்கிங்கெனாதபடி பூசினேன். போர்வைகளை, பாய்களை, தலையணைகளை வெளியே கொண்டு போய் உதறினேன். ஒவ்வொரு இழையாகப் பார்த்துக் கண்ணுக்குத் தென்பட்ட ஓரிரண்டு மூட்டைப் பூச்சிகளையும் எடுத்து வாசல் கேட்டிலேயே வைத்து நசுக்கினேன். சுத்தமாக உதறி ஒவ்வொன்றையும் உள்ளே எடுத்து வந்தேன். மூட்டைகளின் வசிப்பிடம், பிறப்பிடம் என்று நான் சந்தேகித்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை அதனுள்ளிருந்த வஸ்துக்களோடு கொண்டு போய் அப்படியே நீல் மெட்டல் பனால்கா குப்பைத் தொட்டியில் கடாசினேன். போர்வை விளிம்புகளில் கெரஸின் தடவி வைத்தேன். தரை முழுக்க கெரஸின் பூசி வைத்தேன்.

‘மூட்டைப் பூச்சியை நசுக்குவது மாதிரி உன்னை நசுக்கிடுவேன்’ என்று வில்லன்கள் சுலபமாகச் சவால் விட்டுவிடுகிறார்கள். மூட்டைப் பூச்சியை நசுக்குவது எத்தனைப் பெரிய பாடு என்று அவர்களுக்குத் தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. சொல்ல முடியாது. அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு ராஜபக்‌ஷே, மூட்டைப் பூச்சிகளைவிடக் கேவலமாக ஒரு மனித இனத்தையே பூண்டற்று நசுக்கிவிட்டாரே!

***
முயற்சியைக் கைவிடும்வரை தோல்வி என்பதே இல்லை!