பாராட்டுகிறார் பாக்கியம் ராமசாமி!

திப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர், பத்திரிகையாளர், நண்பர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடமிருந்து வந்துள்ள கடிதம்...

ன்பார்ந்த நண்பர் திரு.ரவிபிரகாஷுக்கு,

ஆசிகள்.
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு பிரமுகருக்கு விருது அளித்து கௌரவித்து வருவது உங்களுக்குத் தெரியும். இந்த ஆண்டு, கூடுதலாக ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறு அன்புப் பரிசு வழங்குவதென்று தீர்மானித்தோம்.

சென்ற ஆண்டு பத்திரிகைகளில் அதிகம் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிய ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ரூ.
250 பரிசு வழங்குவதென்று முடிவு செய்தோம். ஆனால், இப்படி ஐந்து பேரைத் தேர்ந்தெடுக்கும் பணி மலைப்புக்குரியதாகி, எங்கள் வலைத் தளம் கவலைத் தளமாக ஆகிவிட்டது. தக்க சமயத்தில் தங்கள் வலைப்பூ வாசகர்கள் மூலம் எங்கள் அறக்கட்டளையின் பிரச்னையை அறவே தீர்த்து வைத்தீர்கள்.

போட்டிக்குரிய
30 நகைச்சுவைத் துணுக்குகளை உங்கள் ‘என் டயரி’ வலைப்பூவில் பிரசுரித்தீர்கள். அவற்றைப் படித்து ஆராய்ந்து, சிறந்த ஐந்தை உங்கள் வலைப்பூ வாசகர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். இந்த நகைச்சுவைப் பணிக்காக உங்களின் ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்களுக்கு எங்கள் அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை மகிழ்ச்சியையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

வெற்றி பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களுக்குரிய பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த ஆண்டு, ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, நகைச்சுவை விருது அளிப்பதென்று அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பியுள்ளேன். நீங்களும், உங்கள் வலைப்பூ வாசகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,

பாக்கியம் ராமசாமி,
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை.

மேற்படி விழாவில் பரிசு பெறும் ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கலந்துகொண்டு, தங்கள் ரசனைக்கேற்ப முதல் ஐந்து பேரை வரிசைப்படுத்திப் பின்னூட்டம் அனுப்பிய வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி விழா அழைப்பிதழை இங்கே பதிவிட்டுள்ளேன். என் வலைப்பூ வாசகர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன்.

இந்தப் போட்டியில், முதல் ஐந்து பேரை அதிகமான எண்ணிக்கையில் சரியாகக் குறிப்பிட்டு, முதலாவதாகப் பின்னூட்டம் அனுப்பியவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ராஜசேகரன். அவர் உடனே என்னை இ-மெயிலில் தொடர்பு கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து, புகைப்படமும் முகவரியும் அனுப்பியிருந்தார். அவருக்கான புத்தகப் பரிசு (முயற்சி திருவினையாக்கும்) அப்போதே, உடனேயே அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.ராஜசேகரனின் விருப்பத்தின் பேரில் அவரது புகைப்படத்தையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.

அதேபோல், சமீபத்தில் நடத்திய போட்டி, ‘ஏ.எம்.ரவிவர்மா’ என்ற பெயரில் உள்ள சிறப்பு என்ன என்பதாகும். ஆங்கிலத்தில் அந்தப் பெயரை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்தால் பெயர் மாறாமல் இருக்கும் பாலிண்ட்ரோம் வகையைச் சேர்ந்த பெயர் அது என்பதே அதன் சிறப்பு. இதைச் சரியாகவும் முதலாவதாகவும் எழுதிய ‘அன்புடன் அருணா’விடமிருந்து நேற்றைய சனிக்கிழமையன்று அவரது முகவரியைத் தெரிவித்து இ-மெயில் கிடைத்தது. அவருக்குரிய புத்தகப் பரிசான ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பதிவை முடிக்கும் முன், ஒரு புதிர்...

ஒரு அடுக்கில் பத்து பொற்காசுகள் வீதம், வரிசையாக பத்து அடுக்குகள் உள்ளன. மொத்தம் 100 பொற்காசுகள்.

ஒரே ஒரு அடுக்கைத் தவிர, மற்ற ஒன்பது அடுக்குகளில் உள்ள எல்லா பொற்காசுகளுமே தலா 10 கிராம் எடை கொண்டவை. அந்த ஒரே ஒரு அடுக்கில் உள்ள பத்து பொற்காசுகள் மட்டும் தலா 11 கிராம் எடை கொண்டவை.

நீங்கள் தராசை உபயோகித்து ஒரே ஒரு முறைதான் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அதிகமான எடை கொண்ட பொற்காசுகள் உள்ள அடுக்கு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சவாலுக்குத் தயாரா?

உடனே உங்கள் விடைகளைப் பின்னூட்டமாக அனுப்புங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு எனது ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

***
உன்னிப்பாகக் கவனியுங்கள்... வாய்ப்பு எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்!

அசகாய சுட்டிகள்!

புத்தகப் பரிசு வழங்கி ரொம்ப நாளாகிறது.

‘கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! பதிவு எழுதியே ரொம்ப நாளாகுது!’ என்கிறீர்களா? அதுவும் சர்த்தான்! அலுவலக வேலைப் பளு, நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம் போன்ற விசேஷங்களுக்காக அடிக்கடி வெளியூர் போகவேண்டி வந்தது போன்ற காரணங்களால் பதிவு எழுத முடியவில்லை. மற்றவர்களின் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை.

திருமண நிகழ்ச்சிகளுக்காக மட்டுமின்றி, சில நாட்களுக்கு முன்னால் ‘சுட்டி விகடன்’ நிகழ்ச்சிக்காகவும் ஒருமுறை திருச்சி சென்று வந்தேன். சுட்டி விகடனில் மாணவ நிருபர்களாகத் தேர்வானவர்களுக்குச் சிறுகதை எழுதும் சூட்சுமம் பற்றி அந்த விழாவில் நான் பேசினேன். ஆண்டுக்கு ஒருமுறை சென்னையிலும் திருச்சியிலுமாக நடைபெறும் இந்த சுட்டி விழாவில் நான் கலந்துகொண்டு பேசுவது இது மூன்றாவது முறை.

முந்தின இரண்டு ஆண்டுகளைவிட, இந்த முறை சுட்டிகள் என்னை ரொம்பவே மிரட்டிவிட்டார்கள். அடேங்கப்பா..! எத்தனைப் புத்திசாலித்தனம்... எவ்வளவு கற்பனை... எத்தனை ஆற்றல்! இளம் தலைமுறையினரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு நாம் எதுவும் புதிதாகக் கற்றுத் தரவேண்டிய அவசியமில்லை. உண்மையில், அவர்களின் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என்பதே உண்மை. அவர்களின் போக்கில் குறுக்கிடாமல், அவர்களின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடாமல், சரியான பாதையில் அவர்களைத் திசை திருப்பிவிடுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உபகாரம். சுட்டி விழாவில் நான் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை இது!

ஓர் உதாரணம் சொல்கிறேன். “நம்மைச் சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும், அதைக்கொண்டு ஒரு சிறுகதை எழுதிவிடலாம். உதாரணமாக, வீட்டில் நம் அம்மா காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு, பால் கவர் வாங்கி வந்து காபி போட்டு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பி... என நாள் முழுக்க அம்மா செய்கிற காரியங்களை வரிசையாக எழுதிவிட்டு, அன்றைக்குக் காலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி வந்து வீட்டில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் அப்பாவிடம் விசாரிக்கும்போது, ‘உங்க வொய்ஃப் வேலைக்குப் போறாங்களா?’ என்று கேட்கையில், ‘இல்ல... வேலை செய்யல! சும்மாதான் இருக்கா. ஹவுஸ் வொய்ஃப்!’ என்று சொல்வதாகக் கதையை முடிக்கலாம்” என்று பேசியபோது, அதில் உள்ள மெஸேஜைப் புரிந்துகொண்டு பலமாகக் கையொலி எழுப்பிக் குதூகலித்தார்கள் குழந்தைகள்.

இன்னொன்று... நம் பாடங்களில் படித்ததைக் கொண்டும் சிறுகதை எழுதமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு கதை சொன்னேன். ஒரு நிறுவனத்தில் நடக்கும் இன்டர்வியூவில் கலந்துகொள்ளும் ஒருவன், அவர்கள் கேட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கெல்லாம் டாண் டாணென்று பதில் சொல்லி அசத்துகிறான். அவன் வீட்டில் இருக்கும்போது, ஒரு கூரியர் ஆசாமி வந்து, அந்த ஃப்ளாட்டில் உள்ள ஒருவரைப் பற்றி விசாரிக்க, தெரியவில்லை என விழிக்கிறான் என்பதாக ஒரு கதை எழுதலாம் என்று சொன்னேன். உடனே ஒரு மாணவன் எழுந்து, “அதாவது சார், ஊர் உலக விஷயமெல்லாம் தெரிஞ்சிருக்கிற ஒருத்தனுக்குத் தன்னைச் சுற்றி நடக்குறது தெரியலே என்கிற மெசேஜ் இதுல இருக்கு, இல்லியா சார்?” என்று கேட்டான். “பக்கத்து ஃப்ளாட்டுல இருக்கிறவங்களைக்கூட தெரிஞ்சுக்க முடியாம, அடுத்தவங்களைப் பத்தின அக்கறையோ அனுசரணையோ இல்லாம, ஒவ்வொரு மனிதனும் தனித் தனித் தீவாயிட்டான்கிற கருத்து இதுல இருக்கு சார்!” என்றான் இன்னொரு மாணவன்.

இதையெல்லாம்விட என்னை அசத்தியது அவர்களின் கல்வியறிவு. மேற்படி கதையில், இன்டர்வியூவில் கேள்விகள் கேட்கிற இடத்தில் நானே சில கேள்விகளை எழுப்பினேன். ‘ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் யார்?’, ‘முதல் உலகப் போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் யார்?’ என்று இன்டர்வியூவில் கேள்விகள் கேட்கப்படுவதாகக் கதை சொன்னபோதே, அந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்குச் சுட்டிகள் டாண் டாணென்று சரியான பதில்களைச் சொல்லி அசத்திவிட்டார்கள். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீன் மூன்; முதல் உலகப் போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன். சுட்டிகளிடம் பேசுவதற்காக நான் இந்தக் கேள்வி பதில்களைத் தயார் செய்துகொண்டு போயிருந்தேன். ஆனால், நான் கேட்ட அத்தனைப் பொது அறிவுக் கேள்விகளுக்கும் அந்தக் குழந்தைகள் சரியான பதில்களைச் சொன்னதும் நான் ஆடிப் போனேன். பிரமிப்பின் உச்சியைத் தொட்டேன்.

இன்றைய குழந்தைகள் மகா புத்திசாலிகள்! அவர்களைச் சரியான முறையில் வழிநடத்துவது மட்டும்தான் நம் வேலை!

பொதுவாகவே, ஏதேனும் வித்தியாசமாக ஒரு விஷயத்தைப் பார்த்தால், உடனே அதில் உள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா என்று என் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டுவது என் வழக்கம்.

சமீபத்தில், என் பெயருக்கு ‘முதன்மைப் பொறுப்பாசிரியர், சக்திவிகடன்’ என முகவரியிட்டு ஒரு கவர் வந்தது. வேறொன்றுமில்லை; அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் இருந்து வந்திருந்த விபூதி, குங்குமப் பிரசாதம்தான் அது! அந்த உள்ளடக்கப் பொருளையும் கவரையும் பார்த்ததும், எனக்கு அதன் முரண்பாடு சுவாரசியமூட்டியது. அந்த கவரை வீட்டுக்குக் கொண்டு வந்து, என் குழந்தைகளிடம் காட்டி (காலேஜ் போகிற என் மகளும், ப்ளஸ் ஒன் படிக்கிற என் மகனும் இன்னும் எனக்குக் குழந்தைகளாகவே தெரிகிறார்கள். என்ன செய்ய?) “இதைப் பார்த்ததும் சட்டுனு உங்களுக்கு என்ன தோணுது?” என்று கேட்டேன். சற்றே யோசித்துவிட்டுப் பின்பு புரிந்துகொண்டு சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. கவரின் மேல் ஒட்டப்பட்டிருந்தது பெரியார் ஸ்டாம்ப்.

அதேபோல, நேற்றைக்கு என் வீட்டு வாசலில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் முகபடாமில் (முகபடாம் என்பது யானையின் நெற்றியில் படர்ந்திருக்கும் அலங்காரப் பட்டை. திருச்சூர் ஆடிப்பூர விழாவில் கலந்துகொள்ளும் யானைகளுக்கு முகபடாம் இருப்பதைப் பார்த்திருக்கலாம். சில பைக்குகளுக்கும் ஹெட்லைட்டுக்கு மேலே முகபடாம் இருப்பதுண்டு.) அந்த வண்டிக்குச் சொந்தக்காரனான இளைஞனின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஏ.எம்.ரவிவர்மா என்கிற அந்தப் பெயரைப் பார்த்ததுமே, அதில் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருப்பதாக என் மனசுக்குத் தோன்றியது. கொஞ்சம் உன்னித்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ‘அட!’ என்று வியந்துபோனேன்.

உடனே, என் மகளை அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்து அதைக் காண்பித்து, “அந்தப் பெயரில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று தெரிகிறதா?” என்று கேட்டேன். சில நிமிடங்கள் அதைப் பார்த்து யோசித்தவள், ‘அட! ஆமா..!’ என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டாள். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

‘அதெல்லாம் சரி! புத்தகப் பரிசு வழங்கி ரொம்ப நாளாகிறது என்று ஆரம்பித்த ஜோரைப் பார்த்தால், புதிதாக ஏதாவது போட்டி வைத்துப் பரிசு கொடுக்கப் போகிறீர்களோ என்று நினைத்தோம். அதைப் பற்றிப் பேச்சே எடுக்காமல், எங்கோ போய்விட்டீர்களே?’ என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது.

இதோ போட்டி... பைக்கில் எழுதப்பட்டிருந்த ஏ.எம்.ரவிவர்மா என்ற பெயரில் அப்படி என்ன சிறப்பு? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? உடனே உங்கள் பதில்களை எனக்குப் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான பதிலுக்கு எனது ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுதியைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களை வருகிற திங்கள் கிழமை 12-ம் தேதியன்று இரவில்தான் பதிவிடப்போகிறேன் என்பதால், அதுவரை உங்கள் விடைகளை அனுப்பிக்கொண்டு இருக்கலாம்.

செவ்வாய்க்கிழமை காலையில் பின்னூட்டங்களைப் பார்த்து, சரியான விடையை முதலில் எழுதியவர் யாரோ, அவர் தன் இந்திய அஞ்சல் முகவரியை உடனடியாக என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பிவைத்தால், அடுத்த இரண்டே நாளில் ‘ஏடாகூடக் கதைகள்’ புத்தகம் அவர் கைக்குக் கிடைக்கும்.

***

ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை; ஒவ்வொரு மேதையும் ஒரு குழந்தை!