கல்கியின் மருமகள்!

சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, ஒரு சில நாட்கள் வெட்டியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த சமயம் (1988-ல்)... என்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி, கல்கி ஆசிரியரிடமிருந்து கடிதம் வந்தது. அதில் ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்கள் சார்பாகக் கையெழுத்திட்டு, அலுவலக உதவியாளர் ஒருவர் மூலம நேரில் கொடுத்து அனுப்பியிருந்தார் கி.ரா-வின் மகள் சீதாரவி.

உற்சாகமாகி, உடனே கிளம்பிப் போனேன். அப்போது கி.ராஜேந்திரன் அவர்களின் வீடு, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்துக்குப் பக்கத்தில் ஏரிக்கரைச் சாலையில் இருந்தது.

நான் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். கீழே ஹாலில், முதிய பெண்மணி ஒருவர் சோபாவில் அமர்ந்து, டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். நான் போனதும், வாசலில் நிழலாடியதைக் கண்டு, கண்களை இடுக்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தவர், "யார்ரா... பேப்பர் போடுற பைய‌னா?" என்றார்.

"இல்லை பாட்டி! நேர்ல வந்து பார்க்கச் சொல்லி ஐயா லெட்டர் அனுப்பியிருந்தார்" என்று, சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து, அவர் முன்பாகக் காட்டினேன்.

"என்னத்துக்கு வரச் சொன்னானோ... தெனம் நூறு பேர் வரா!" என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டார்.

நான் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், வாசலில் நின்றபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஏதோ சினிமா பாடல் காட்சி. பாட்டிக்கு அதில் மனம் லயிக்கவில்லை போலும்! சிறிது நேரத்துக்குப் பின்பு, "டீ... இது என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு ஆடறதுகள். வந்து கிரிக்கெட்டையானும் போடு! இது ஒண்ணும் நன்னால்லை" என்று குரல் கொடுத்தார்.

"தோ வரேம்மா" என்று குரல் கேட்டது.

நான் காத்திருந்தேன். அதற்குள் அந்த ஹாலை நோட்டம் விட்டேன். ஆடம்பரமோ படாடோபமோ இல்லை. சுவாதீனமாய் சமையல்கட்டு வரைக்கும் போய், "ஒரு தோசை கொடுங்க, மாமி" என்று உரிமையாய்க் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் போன்ற தோரணையில் இருந்தது அந்த ஹால். சுவரில், கடல் அலை வெளேரென சீறி அடிக்கும் ஒரு சிறு பாறை மீது, நமக்கு முதுகு காட்டியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் ஆயில் பெயின்ட்டிங் ஒன்று காணப்பட்டது. வேட்டி அணிந்திருந்தார். கையில் தம்புரா வைத்திருந்தாரோ என்று ஞாபகம். சரியாக நினைவில்லை.

அந்தப் படத்தை வரைந்தவர் ஓவியர் மணியம். படத்தில் இருந்தவர் பேராசிரியர் கல்கி.

உள்ளிருந்து 'தோ வரேம்மா' என்று குரல் கொடுத்தவர் கல்கியின் மருமகள். அதாவது, கி.ராஜேந்திரனின் மனைவி.

ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி, கல்கியின் மனைவி. வாசலில், இவர்களின் அருமை பெருமை தெரியாத நான்.

"ஏண்டாப்பா! உனக்கு கிரிக்கெட் போடத் தெரியுமா?" என்று என்னிடம் ரிமோட்டை நீட்டினார் பாட்டி. நான் பகபகவென முழித்தேன். ஷோ-ரூம்களின் வெளியே நின்ற‌படி கிரிக்கெட் பார்க்கும் கும்பலில் ஒருத்தனாகக்கூட டி.வி. பார்த்தறியாதவன் நான். ரிமோட் என்கிற விஷயமே எனக்குப் புதுசு.

"இல்லை பாட்டி! எனக்குத் தெரியாது" என்றேன்.

"என்ன பிள்ளை நீ! நான்தான் வயசானவோ! தெரியாது. நீ இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமோ? போகட்டும், கிரிக்கெட்டாவது பார்ப்பியோ, மாட்டியோ?" என்றார் பாட்டி.

அதற்கும் நான் அசடு வழிய ஒரு பதிலைச் சொல்வதற்குள், உள்ளிருந்து கி.ராஜேந்திரனின் மனைவி வந்து, டி.வியில் கிரிக்கெட்டைப் போட்டுவிட்டு, பின்பு நான் நிற்பதைக் கவனித்தார்.

"சாரைப் பார்க்கணுமா? மேலே மாடிக்குப் போங்கோ. அவர் சாப்பிட்டுட்டு மாடிக்குப் போயிட்டார்னா அப்புறம் சாயந்திரம் நியூஸ் போடறச்சதான் இறங்கி வருவார். அங்கேயே போய்ப் பாருங்கோ!" என்றார்.

வாசல் ரேழியிலேயே மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் இருந்தன. மேலே ஏறிப் போனேன்.

கி.ரா. அமர்ந்திருந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கடிதத்தைக் காட்டினேன்.

"உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாவியிலே நீங்க பிரமாதமா வொர்க் பண்றதா சாரே சொல்லியிருக்கார். ஏன் வேலையை விட்டீங்கன்னு கேக்கப் போறதில்லே. கல்கியிலே சேர விருப்பமா?" என்றார்.

"விருப்பம்" என்றேன்.

"எடுத்த எடுப்பிலே உங்களை பர்மனென்ட் ஸ்டாஃபா சேர்க்க முடியாது. அதுக்கு எனக்கு ரைட்ஸ் கிடையாது. நிர்வாகக் குழு இருக்கு. எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும். என் பொண்ணையேகூட சட்டுனு இதுல சேர்த்துடலே நான்! படிப்படியாத்தான் வந்தா. அதனால, முதல்லே நீங்க வந்து போயிண்டிருங்கோ. மேட்டர் பண்ணுங்கோ. ஒரு ஆறு மாசம் போகட்டும். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு அப்பத்தான் எங்களுக்கும் தெரியும். அப்புறமா உங்களை அப்பாயின்ட் பண்ணிக்கறோம்!" என்றார் கி.ரா.

"நன்றி!" என விடைபெற்று எழுந்தேன்.

கல்கியில் சேர வேண்டும் என நான் விண்ணப்பம் போடவில்லை. சாவியிலிருந்து நான் விலகியது தெரிந்து, அவர்களேதான் அழைப்பு அனுப்பினார்கள். அப்படியிருக்கையில், திரு.கி.ராஜேந்திரன் பேசியது எனக்கு உடன்பாடாக இல்லை.

கீழே வந்தேன்.

"பார்த்தாச்சா? கிளம்பிட்டேளா?" என்றார் விஜயாம்மா. கி.ரா-வின் மனைவி.

எதற்காக வந்தேன், வந்த காரியம் நிறைவேறியதா என்று கேட்கவில்லை.

"வேகாத வெயில்ல வந்திருக்கேள். கொஞ்சம் மோரானா சாப்பிட்டுட்டுப் போங்கோ!" என்று உள்ளே போய், ஒரு டம்ளர் நிறைய, கறிவேப்பிலையிட்ட மோருடன் வந்தார்.

குடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினேன். அந்தச் சில நிமிடங்கள்தான் அவரைப் பார்த்தது. அவர் முகம்கூட மனதில் பதியவில்லை.

எனவேதான்...

நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று என்னால் முகத்தைப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

ஆமாம், நேற்று காலமாகிவிட்டார், காலத்தால் அழியாத அமர காவியங்களைப் படைத்த பேராசிரியர் கல்கியின் அருமை மாட்டுப் பெண்.

நான் போயிருந்தபோது மின் மயானத்தில் மந்திரம் ஓதும் சாஸ்திரிகள், மயான ஊழியர்கள் ஒரு சிலரைத் தவிர‌ யாருமே இல்லை. ஐந்து நிமிடம் கழித்து, தளர்ந்த நடையுடன் வந்தார் கி.ராஜேந்திரன். அவரோடு பத்துப் பதினைந்து பேர் வந்தார்கள். அவர்களில் பத்திரிகையாளர் சந்திரமௌலியைத் தவிர, எனக்குப் பரிச்சயமான முகம் வேறில்லை.

உடலுக்கு எரியூட்டும் வரை இருந்தேன். பின்னர், அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்த கி.ராஜேந்திரனிடம் சென்று, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

"எதிர்பார்க்காத மரணம் இது. நல்லாத்தான் சிரிச்சுப் பேசிண்டிருந்தா. திடீர்னு மாஸிவ் அட்டாக். போயிட்டா. நினைக்கவே இல்லே இவ போயிடுவான்னு!" என்றார்.

விடைபெறாமல் கிளம்பினேன்.

திருமதி விஜயா ராஜேந்திரனின் முகம் இப்போதும் என் நினைவில் இல்லை; அன்று அவர் தந்த மோரின் மணமும் சுவையும் மட்டும் ஞாபகம் இருக்கிறது!

***
பார்த்ததும் கேட்டதும் மறந்துவிடலாம்; உணர்வுகள் மறக்காது!

முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி!

மிகச் சிறந்த வைஷ்ணவ அறிஞரும் உபன்யாசகருமான வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி எனக்குத் தெரிய வந்தது, மிகச் சமீபத்தில்தான். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், கலைஞர் மு.கருணாநிதியின் 'போர்வாளும் பூவிதழும்' நாட்டிய‌ நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட‌ அந்த விழாவில், அதே மேடையில், ஆச்சர்யப்படும் விதமாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான திருச்சி கல்யாணராமனும், வேளுக்குடி கிருஷ்ணனும் கலந்துகொண்டு பேசியதை நாளேடுகளில் படித்தேன்.

கம்பராமாயணத்தில் வரும் 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்கிற பாடலைப் பாடிய திருச்சி கல்யாணராமன், அந்தப் பாடலின் இறுதி வரியான 'அன்னவர்க்கே சரண் நாங்களே' என்பதை, கலைஞரைக் கைகாட்டி, அவருக்குச் சரண் நாங்கள் என்று ஜாடையாகக் குறிப்பிடும் விதமாகச் சொல்லி முடித்தார். அத்தோடு விட்டாரா? ஜால்ராவின் உச்சத்துக்கே போய், 'பிள்ளைக்குட்டி இல்லாதவர்களையெல்லாம் அம்மா என்று சொல்கிறார்கள்' என்று ஜெயலலிதாவையும் வம்புக்கு இழுத்தார்.

அடுத்துப் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணன், இதற்கு நேர்மாறாக, தனி மனித புகழ்ச்சியோ, அரசியல் கலப்போ இன்றி, வைஷ்ணவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை மட்டும் அழகாகப் பேசி முடித்தார். மேடையிலேயே கலைஞர் அதை 'தேனினும் இனிய தமிழ்' என்று பாராட்டினாலும்கூட, தன்னை அவர் பாராட்டிப் புகழ்ந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே என்கிற ஆதங்கம் தாங்கவில்லை அவருக்கு. அதனால், "இந்த மேடையில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால் யார் யாரைச் சந்திக்க நேரிடுமோ என்கிற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கிறார்" என்று பூடகமாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசினார் கலைஞர்.

இந்த நிகழ்வுதான் எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆரம்பப் புள்ளி. சக்தி விகடனில் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்' எனும் தலைப்பில் அவரது சொற்பொழிவுகளைக் கட்டுரைத் தொடராகப் பிரசுரிக்கலாம என்கிற பேச்சு வந்தபோது, இணையத்தில் வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றிய தகவல்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.

சக்தி விகடனுக்குப் பொறுப்பேற்றிருக்கிறேனே தவிர, நான் ஆன்மிகவாதி அல்ல! திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்கள் தவிர, வேறு யாருடைய சொற்பொழிவுகளையும் நான் கேட்டது இல்லை. ஆன்மிகக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு பேசுவதற்காகக் கம்பராமாயணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்பாவை, திருவெம்பாவை, வள்ளலார் பாடல்கள் போன்று ஒரு சில‌ ஆன்மிக இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். கடவுள்- அதாவது நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்கிற அளவில் நம்பிக்கை கொண்டவன். அந்தக் கடவுளை நம‌க்குப் பிடித்த மாதிரி ரூபத்தில் வணங்குவதற்கான சுதந்திரத்தையும், தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதியாகப் பல்வேறு வித கடவுளர் வடிவங்களையும் நமக்கு அளித்திருக்கிறது இந்து மதம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிவன், கிருஷ்ணன், முக்கியமாகப் பிள்ளையார் ஆகிய வடிவங்களை இறைச் சக்தியின் குறியீடுகள‌கக் கொண்டு வணங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்த‌ ஆன்மிகம் அவ்வளவுதான்! மிகச் சிறு வட்டம்.

வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும், விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதைப் பின்னர் அறிந்து, நானும் சில நாட்கள் கேட்டேன். 'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக இருப்பதையும், மிகப் பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருப்பதையும் அறிந்தேன். வெளிநாடுகளுக்கும் பறந்து பறந்து சொற்பொழிவாற்றி, உலகமெலாம் தமிழின் இனிமையைப் பரப்பி வருகிறார் வேளுக்குடி.

இவரின் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேசவேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது. திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.

நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!

இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60. சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!

***
கடவுள் இல்லாமல் உங்களால் செயல்பட முடியாது; நீங்கள் இல்லாமல் கடவுள் செயல்பட மாட்டார்!