நான் என் போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டிருந்ததுபோல் ஒருவரே தங்களின் பதில்களை இரண்டு, மூன்று பின்னூட்டங்களின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் குறைந்த எண்ணிக்கையில் சரியான விடையைக் கொண்டிருக்கும் பின்னூட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுத்துப் புத்தகம் அனுப்புவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் போட்டிக்கான வலைப் பதிவைப் படித்துவிட்டு, ‘ரசிகன்’ தொடரின் இயக்குநர் மணிவண்ணன் மிகுந்த சந்தோஷமும் உற்சாகமுமாக எனக்கு போன் செய்திருந்தார். அந்தப் பதிவில், ‘ஒருவேளை மேற்படி நிகழ்ச்சி அடுத்த வாரம் தள்ளிப் போனாலும், பின்னூட்ட பதில்களுக்கான இறுதித் தேதி மாற்றியமைக்கப்பட மாட்டாது’ என்கிற வரியைக் குறிப்பிட்டுவிட்டு, “சார், உண்மையிலேயே அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 7-ம் தேதி ஞாயிறன்று காலையில் மணியம்செல்வன் ஓவியங்கள் தொடர்பான நிகழ்ச்சி இடம்பெறும். இந்தத் தகவலை முடிந்தால் உங்கள் வலைப்பூ நேயர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார்.
குறிப்பிட்ட இந்த ‘ரசிகன்’ நிகழ்ச்சி பற்றி தினத்தந்தி நாளேட்டிலும், வேறொரு வார இதழிலும் பெரிய அளவில் வெளியாகவிருப்பதாலேயே இந்தத் தேதி மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, போட்டிக்கான விடைகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் ‘என் டயரி’ வலைப்பூ நேயர்களைத் தவிர்க்க முடியாமல் மேலும் ஒரு வாரம் காத்திருக்க வைக்க வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியான விடைகள் (நான்கு படங்களுக்குமான பாடல்கள்) எனக்குத் தெரியும் என்றாலும், அவற்றை இங்கே சொல்லிப் பரிசு பெற்றோர் விவரத்தை வெளியிடுவது முறையாகாது. அது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் குலைத்துவிடக்கூடும் என்பதால், பரிசு விவரப் பதிவை நானும் அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளி வைக்கிறேன்.
எனினும், ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். பின்னூட்டமாக வந்த பதில்களில் பெரும்பாலானவை சரியான விடைகளைக் கொண்டிருந்தன. ஒருவர் நான்கு விடைகள் எழுதியிருந்தால், அவற்றில் நிச்சயம் ஒரு விடையாவது சரியாகவே இருப்பதைக் கண்டேன். எனவே, அடுத்த வாரம் வரை காத்திருக்காமல், ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே உடனடியாக தங்கள் அஞ்சல் முகவரிகளை (பின்கோடு உள்பட முழுமையாக) என் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால், மேற்படி நிகழ்ச்சி ஒளிபரப்பான கையோடு புத்தகப் பரிசுகளை அனுப்பி வைக்க எனக்கு உதவியாக இருக்கும்.
போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஓரிருவர் மட்டும் தவறான விடைகளைத் தந்திருப்பதால், அவர்கள் புத்தகப் பரிசு பெறாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனினும், சோர்ந்துவிட வேண்டாம். முன்பே சொன்னதுபோல், இந்த ஆண்டு முழுக்கவே அவ்வப்போது நான் இப்படியான போட்டிகளை அறிவித்துப் புத்தகப் பரிசளிக்க இருக்கிறேன்.
மற்றபடி ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெற்றி பெறப் போகிறவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
இரண்டு செய்திகள்:
1. ‘புதுமொழி 500’ புத்தகம் அட்டை உள்பட அனைத்தும் அச்சாகி, பைண்டிங் நிலையில் உள்ளது. இத்தனை நேரம் தயாராகி இருக்க வேண்டும். எனினும், வேறு சில வேலைகள், புத்தகத் தயாரிப்புகள் (உதாரணமாக, துணை முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிப் பத்திரிகையாளர் சோலை எழுதிய புத்தகம்) காரணமாக, இந்த பைண்டிங் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மற்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த வாரம் ‘புதுமொழி 500’ புத்தகம் தயாராகிவிடும். தயாரானதும்தான், ஆனந்த விகடன் அறிவிப்புகள் மூலமாக உங்களுக்கே தெரிய வருமே! முன்பே சொன்னபடி, மேற்படி புத்தகம் கைக்கு வந்ததும், உரியவர்களுக்கு அவற்றை உடனடியாக அனுப்பி வைக்கிறேன்.
2. நான் தற்சமயம் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இல்லை. (விகடனில் பலராலும் விரும்பி ரசிக்கப்படும் ‘பொக்கிஷம்’ பகுதியை மட்டும் வழக்கம்போல் தொகுத்துத் தருகிறேன்.) அதற்குப் பதிலாக ‘சக்தி விகடன்’ ஆன்மிகப் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கடந்த சில நாட்களாகவே ஒரு மாற்றத்தை என் மனம் மானசீகமாகத் தேடிக்கொண்டு இருந்தது. அதற்கெனப் பிரத்யேகமாக நான் வேண்டிக்கொள்ளாதபோதும், மகாஸ்ரீ அன்னை அந்த மாற்றத்தை நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே சிறப்பாக எனக்குத் தேடித் தந்துவிட்டார் என்றே கருதுகிறேன்.
***
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!