தொகுதிக்கு வேணும் ஒரு தகுதி!

ண்பர் வேணுகோபால் எனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியிருந்தார் (எனக்கு இ-மெயில் அனுப்புறவங்க எல்லாருமே நண்பர்கள்தான்!). அதில்...

‘உங்க ஏடாகூட கதைகள் புத்தகம் வாங்கிப் படிச்சேன். அதுல, கிட்டத்தட்ட 300 சிறுகதைகள் எழுதியிருக்கிறதா உங்களைப் பற்றிய குறிப்பு சொல்லுது. இத்தனைக் கதைகள் எழுதியிருக்கிறவர் சிறுகதைத் தொகுதி எதுவும் வெளியிட்ட மாதிரி தெரியலையே! ஏன் வெளியிடலை? அல்லது, வெளியிட்டு எனக்குத்தான் தெரியலையா? அப்படியிருந்தா அடியேனை மன்னிக்கவும்!’ என்று எழுதியிருந்தார்.

மன்னிக்கவாவது..! சிறுகதைத் தொகுதி ஏன் வெளியிடலைன்னு ஒருத்தர் உரிமையோட கேக்கறதே சந்தோஷமான விஷயமாச்சே!

நண்பர் வேணு (ரொம்ப நெருங்கிட்டார்) சொல்வது நிஜம்தான். சிறுகதைத் தொகுதி எதுவும் நான் வெளியிடவில்லை. ஏன்?

முதல் காரணம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் மாதிரியெல்லாம் எழுத்தாளன்னு கம்பீரமா சொல்லிக்கிற அளவுக்குச் சமுதாயத்தைப் புரட்டிப் போடற மாதிரி எதையும் நான் எழுதிடலை.

இரண்டாவதாக சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, அனுராதா ரமணன் மாதிரியெல்லாம் எனக்கென்று வாசகர் வட்டம் எதுவும் உருவாகவில்லை. சாவியில் நான் பணியாற்றிய எட்டு வருடங்களில் வாரத்துக்கு மூன்று, நான்கு கதைகள் வெளியானால் அதில் ஒரு கதை என்னுடையதாக இருக்கும். நானே பொறுப்பாசிரியராக இருந்துகொண்டு நானே என் கதையை எப்படிப் பிரசுரித்துக்கொள்வது என்கிற கூச்சம் காரணமாகவும், நேர்மை(!) காரணமாகவும் வெவ்வெவ்வெவ்வேறு புனைபெயர்களில் எழுதித் தள்ளினேன். சூர்யகலா, சந்திரகலா, வைஷ்ணவி, ராஜ்திலக், உஷாபாலு, உஷாரவி, ஆர்.ஷைலஜா, ரஜ்னீஷ், சீதாநரசிம்மன், ஜெயஸ்ரீநாராயணன், ராஜா மகள், என்னார், ஐஸ்... எனத் தொடரும் அந்தப் புனைபெயர் பட்டியல் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்த சர்வஜித் வரையில் வெகு நீளமானது. சகுந்தலா நடராஜன், கோபி, ஜெய்குமாரி, ரேவதி ராஜேந்தர் என அந்தந்த வாரம் மனசுக்கு என்ன பெயர் தோன்றுகிறதோ அந்தப் பெயரில் என் கதையை வெளியிட்டுவிடுவேன். வாசகர் வட்டம் உருவாகாததற்கு இது முக்கியக் காரணம்.

ஆனால், அது பற்றி நான் இன்றைக்கும் வருத்தப்படவில்லை. ‘ஆமா, பெரிய அமரகாவியமா படைத்துவிட்டோம்!’

மூன்றாவது, சிறுகதைத் தொகுதி போட்டால் யாருக்காவது பயன் இருக்க வேண்டும். சமுதாயத்துக்கு அதனால் ஒரு பயனும் இல்லை என்பது தெளிவு. சரி, எனக்காவது ஏதாவது பயன் உண்டா என்றால், அதுவும் இல்லை. ‘நானும் நாலு சிறுகதைத் தொகுதி வெளியிட்டிருக்கிறேனாக்கும்’ என்று அறிந்தவர் தெரிந்தவரிடமெல்லாம் ஜம்பமடித்துக்கொள்ளத்தான் உதவும். நானே அவற்றைக் காசு கொடுத்து வாங்கி, ஆட்டோகிராப் போட்டு, யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வந்தால், பணத்துக்குப் பதிலாக இதைக் கொண்டு போய் அவர்கள் தலையில் கட்டிவிட்டு வரலாம். வேறு ஒரு பிரயோஜனமும் இல்லை.

நான்காவதாக, ‘என் சிறுகதைத் தொகுதியை நீங்கள் வெளியிடுகிறீர்களா?’ என்று எந்தப் பதிப்பகத்தாரிடமும் போய் பல்லிளித்து நிற்க நான் தயாராக இல்லை.

அப்படியும் தானாகவே ஒரு பதிப்பகம் என் சிறுகதைத் தொகுதியை வெளியிட முன்வந்தது. ‘ஒரு இருபது மணியான கதைகளைப் பொறுக்கிக் கொடுங்கள். இந்த புக் ஃபேருக்குக் கொண்டு வந்துவிடலாம்’ என்று பரபரத்தது. ‘எனக்கு எவ்வளவு தருவே?’ என்று நான் கேட்கவில்லை. ‘ஏதோ அவர்களாக ஆர்வப்பட்டுப் புத்தகம் போடுகிறேன் என்கிறார்களே! அதற்கு நம்மால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுப்போம்’ என்று என் கதைகளைத் தேடி எடுத்து (உபயம்: என் அப்பா) அவர்களிடம் கொடுத்தேன்.

அது மட்டுமல்ல, சாவி அவர்களிடம் அணிந்துரை வாங்கினேன். தவிர, ஒவ்வொரு சிறுகதைக்கும் தனித்தனியாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், மணியம் செல்வன், ஜெயராஜ், கிரேஸி மோகன், திலகவதி ஐ.பி.எஸ்., எனப் பலதரப்பட்ட வி.ஐ.பிக்களிடம் சுருக்கமான விமர்சனம் வாங்கினேன். எல்லாவற்றையும் அந்தப் பதிப்பகத்தாரிடம் கொடுத்து, ஃபைனல் புரூஃப் வரைக்கும் பார்த்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு அதை நானும் மறந்துவிட்டேன். அவர்களும் மறந்துவிட்டார்கள். புக் ஃபேர் மட்டும் மறக்காமல் வந்து போயிற்று.

புக் ஃபேருக்கு முன்னதாக நான் ரொம்ப நம்பிக்கையாக, “என்ன, புத்தகமெல்லாம் ரெடியாயிடுச்சா?” என்று கேட்டேன். “அது வந்து சார்... இந்த முறை கொண்டு வர முடியலை. கொஞ்சம் பண நெருக்கடி. ஜூன்ல கண்டிப்பா கொண்டு வந்துடலாம்” என்றார் குழலூதும் அந்தப் பதிப்பக உரிமையாளர்.

“இருக்கலாம். பண நெருக்கடியாகவே இருக்கலாம். ஜனவரியில் கொண்டு வர முடியாமல் இருக்கலாம். ஜூன்ல கண்டிப்பா கொண்டு வரவும் செய்யலாம். ஆனா, இதையெல்லாம் நானா போன் போட்டுக் கேட்டப்புறம்தான் சொல்றதா? வேண்டாம். நீங்க என் கதைகள் எதையும் புத்தகமா போட வேண்டாம். புத்தகமா போடுங்கன்னு நான் உங்க கிட்டே வந்து அழலை! இப்பவே வரேன். நான் கொடுத்த அத்தனையையும் என் கிட்டே திருப்பிக் கொடுத்துடுங்க” என்றேன்.

சொன்னபடியே போனேன். திரும்பப் பெற்றேன். வீட்டுக்கு வந்து பரண் மீது எங்கேயோ அந்தச் சிறு மூட்டையைத் தூக்கிப் போட்டேன். தலைமுழுகி விட்டேன்.

புத்தகம் என்னாயிற்று என்று கேட்பதற்கு சாவி சார் இல்லை. அடுத்த சில மாதங்களில் அமரராகிவிட்டார். அவர் ஆவலோடும் அபிமானத்தோடும் எழுதிக் கொடுத்த அணிந்துரையைப் புத்தகத்தில் அவருக்கு நான் காட்டி மகிழக்கூடிய பாக்கியம் எனக்கு வாய்க்கவேயில்லை.

அதன்பிறகு, சிறுகதைத் தொகுதி வெளியிட வேண்டும் என்ற யோசனையே எனக்கு வரவில்லை. அப்படியே யாராவது புத்தகம் போடுகிறேன் என்று வந்தாலும், திருவிளையாடல் தருமி மாதிரி, ‘ஐயோ! அவன் இல்லை... வரமாட்டான்... நம்பாதே!’ என்று எகிறிக்குதித்து ஓடிவிடுவேன். ஓவியர் மணியம் செல்வன் என் சிறுகதைத் தொகுதி வராமல் நின்று போனதை அறிந்து, “வானதி பதிப்பகத்தாரிடம் சொல்லிப் போடச் சொல்கிறேன். அதை அப்படியே கொண்டு வாருங்கள்” என்றார். “ஆஹா! பேஷாகச் செய்கிறேன்” என்று சொன்னதோடு சரி! இன்றுவரை கொண்டு போகவில்லை.

ஆக, நமக்கு ‘சிறுகதைத் தொகுதிப் புத்தகம் பிராப்தி அஸ்து!’

*****
ஒன்றைச் செய்து முடிக்கக் கடைசி நேரம் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், அது கடைசி வரை செய்து முடிக்கப்படாமலே போய்விடும்!

2 comments:

A-kay said...

I didn't know you used amma's name as a pen name (punai paer) - I am thrilled to hear that! I don't know if amma knew about this, but I do know that she was mighty proud of you. Thanks ravi-anna!

Let me also take this opportunity to let you know that I have been reading your blog very regularly, ever since you sent your new blog url through email. I really enjoy reading your blog - this is one of the few places where I get to read in tamil regularly :) I did get the online subscription for Aa-vi, Ju-vi etc but never got around to reading it regularly, for wahtever reason. Also, the online version is not the same as reading from the book... well, anyway I digress. You are doing a great job in this blog and I hope you continue to write regularly.

butterfly Surya said...

ரவி சார். அதையெல்லாம் விட்டு தள்ளுங்கள்.

முடிந்தால் ஒவ்வொரு கதையாக இங்காவது வலையேற்றுங்கள்.

நாங்க பொறுமையாக வாசிக்க காத்திருக்கிறோம்.

நன்றி.