குட் பை ஹேமா!

‘உண்மையான உறவுகளை ஒரு நிமிடம் கண்களை மூடி நினைக்கும்போது பிரிவின் ஏக்கம் விழி ஓரம் கசிகின்ற கண்ணீர்த் துளிகளில் தெரியும்... நான் தற்காலிகமாக விடைபெறும் நேரம் வந்துவிட்டது. வாழ்த்தி வழியனுப்புங்கள். ஃப்ரைடே மார்னிங் எனக்கு ஃப்ளைட். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம். வரட்டா! - ஹேமாஜி.’

புதன்கிழமை மதியம், தவறுதலாக என் செல் எண்ணுக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் இது. ஆங்கில ட்ரான்ஸ்லிடரேஷன் செய்யப்பட்டிருந்தது.

யார் அந்த ஹேமாஜி? தெரியவில்லை. யாருக்கு இந்த மெசேஜை அனுப்ப நினைத்தார்? தெரியவில்லை. எங்கே ஃப்ளைட் பிடிக்கப்போகிறார், சென்னையிலா, பெங்களூரிலா, மும்பையிலா? கவிதை போன்ற அழகான தமிழ் வார்த்தைகள் என்பதால், அநேகமாகச் சென்னையிலிருந்துதான் புறப்படுவார் என்று ஒரு யூகம்!

அதற்கு ரிப்ளை கொடுத்துப் பார்த்தேன்... ‘Message sending failed'. தொடர்புகொள்ள முயன்றேன்... ‘தாங்கள் தொடர்புகொள்ளும் நபர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்...’

புதன், வியாழன் இந்த இரண்டு நாட்களுமே மேற்படி எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஹேமாவைத் தொடர்புகொள்ள முயன்று தோற்றுப்போனேன். என் கவலை, அவர் தவறான எண்ணுக்குத் தகவல் அனுப்பியதை அறியாமல், சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து வாழ்த்து வரவில்லையே என்று அவர் மீது கோபப்படப் போகிறாரே என்பதுதான். விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்தால் அந்த நபர் ஹேமாவை விமான நிலையத்துக்கே கூட வந்து வழியனுப்பி வைத்திருக்கக் கூடும்.

என் கணக்கு அவர் ஓர் ஆணாகத்தான் இருக்கவேண்டும். அதுவும், அவரின் காதலனாக இருக்கலாம். அவர் அவரின் குடும்பத்துக்குத் தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்களின் காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்கள் சம்மதத்தோடு இருவரின் திருமணமும் அடுத்த ஆண்டு செய்யப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண் வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும். லீவுக்கு வந்த இடத்தில் காதலனோடு சில நாட்கள் பழகிவிட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிகிற வேளையில் உருக்கமாக இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கக் கூடும். தான் தவறான எண்ணுக்கு அனுப்பியது தெரிந்து அந்தப் பெண் மீண்டும் அவனைத் தொடர்பு கொண்டு பேசியிருப்பாள். பேசியிருக்க வேண்டும். அப்படித்தான் நம்ப விரும்புகிறேன்.

எந்த வகையிலோ என்னோடு தொடர்பு கொண்ட அந்தப் பெண் பத்திரமாக ஊர் போய்ச் சேரவேண்டுமே என்கிற பதைப்பு என்னுள் எழுந்தது. 'Good bye Hema! I wish you a happy journey!' என்று காலையில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைத்தேன். வழக்கம்போல் அதுவும் போகாமல் தோற்றுப் போனது. நேற்றுக் காலை புறப்பட்ட எந்த விமானமும் விபத்துக்குள்ளாகவில்லை என்கிற தகவல் என்னைக் கொஞ்சம் நிம்மதியுறச் செய்தது.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, எனக்கொரு எஸ்.எம்.எஸ். வந்தது... 'Father serious. Start immediately!' பதறிப்போனது எனக்கு. என் அப்பா என்னோடு பத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். என் பதற்றம் அது இல்லை. யாரோ ஒரு மகனுக்கு அவனுடைய அப்பா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியாமல் போய்விடப் போகிறதே என்கிற கவலைதான். உடனே ரிப்ளை கொடுத்துவிட்டேன்... ‘உடனடியாக தொலைபேசி எண்ணைச் சரிபார்த்து, சரியான எண்ணுக்கு இந்தத் தகவலை அனுப்பவும்.’

என் பதில் சரியாகவே போய்ச் சேர்ந்துவிட்டது.

செல்போன் என்பது இன்றைய உலக வாழ்க்கையில் ஓர் வரம்தான். முன்பெல்லாம் தந்தி கொடுத்தால்கூட மறு நாள் காலையில்தான் கிடைக்கும். டெல்லிக்குப் பேசவேண்டுமென்றாலும், தபாலாபீஸில் ஒரு விண்ணப்பம் வாங்கி எழுதிக்கொடுத்து ட்ரங்க்கால் புக் செய்து மணிக்கணக்கில், ஏன் நாள் கணக்கில்கூட அங்கேயே வாசலில் தேவுடு காத்திருக்க வேண்டும். வெளிநாட்டுக்குப் பேச வேண்டும் என்றால், ஒரு ராஜ சூய யாகமே நடத்தின மாதிரி!

இன்றைக்கு விநாடிகளில் யாரும் யாரையும் தொடர்புகொண்டுவிட முடிகிறது. ஆனால், மனங்கள்தான் தொடர்புகொள்ள முடியாமல் ஒன்றுக்கொன்று வெகு தூரம் விலகிவிட்டன.

*****
பாதி உலகம் அறியாமையால் துன்புறுகிறது; மீதி உலகம் புத்திசாலித்தனத்தால்!

3 comments:

butterfly Surya said...

உங்கள் அக்கறையும் ஆதங்கமும் வியக்க வைக்கிறது.

பதிவிற்கு நன்றி.

Anonymous said...

குட் பை ஹேமா படித்தேன். துவக்கம் அழகான சிறுகதை. நவீன தொடர்பு சாதன சாதக பாதகங்களை சின்னதாய் கோடி காட்டிய என் பழைய பதிவு அறுந்த இழைகள் இங்கே : http://inru.wordpress.com/2007/09/06/emailcontacts/
[சத்யராஜ்குமார்]

முகில் said...

வழி தவறிய வலி சுமந்த குறுஞ்செய்திகள். ஏதோ ஈரானிய படம் பார்ப்பதுபோல இருக்கிறது.