ஸ்யாம்ராஜ்யம்!

ன் இனிய நண்பர்களில் ஒருவர் ஓவியர் ஸ்யாம்.

சிலரைப் பாராட்ட எனக்கு அலுப்பதே இல்லை. காரணம், அவர்களின் தனித் திறமை என்னை அந்த அளவுக்குப் பிரமிக்கச் செய்கிறது. அப்படி நான் எப்போதும் மதித்துப் போற்றும் ஒரு திறமைசாலி - ஓவியர் ஸ்யாம்.

இவரை எனக்கு சாவி காலத்திலிருந்தே தெரியும். அப்போது குமுதம் பத்திரிகையில் இவர் வரையும் படங்களைப் பார்த்துப் பிரமித்து, சாவி இதழுக்கும் ஓரிரு படங்கள் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். பின்னர் அவர் குமுதம் பத்திரிகையிலேயே வேலைக்குச் சேர்ந்திருந்தார்; வெளிப் பத்திரிகைக்கு வரைய அனுமதி இல்லை என்பதாலோ அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை... தொடர்பு விட்டுப் போயிற்று.

விகடனில் வேலைக்குச் சேர்ந்த பின்னர், இவரை எப்படியாவது இந்த இதழுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அப்போதெல்லாம் விகடனுக்குள் ஒரு புதிய ஓவியர் சட்டென்று புகுந்துவிட முடியாது. ஆனாலும், இவர் திறமையை எப்படியாவது் பயன்படுத்திக்கொண்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

நான் விரும்பியது ஒரு சில வருடங்களில் நிறைவேறியது. என் விருப்பப்படி ஓவியர் ஸ்யாமிடம் படம் வாங்கிப் போட ஒப்புதல் கிடைத்தது. அதன்பின் ஸ்யாமிடம் பேசினேன். “நீங்கள் குமுதத்துக்கு மட்டும்தான் போடுவீர்களா? விகடனுக்குப் போட மாட்டீர்களா?” என்று கேட்டேன். “இல்லை சார், நிறைய தடவை முயற்சி பண்ணேன். விகடனில் சான்ஸ் கிடைக்கலை. சரி, நமக்கு அதிர்ஷ்டமில்லை போலன்னு நினைச்சு விட்டுட்டேன்” என்றார்.

“இல்லை. நீங்க விகடனுக்கு வரையறீங்க. உடனே ஒரு சிறுகதை அனுப்பறேன். வரைஞ்சு கொடுங்க” என்று அன்றைக்கே அவருக்கு ஒரு சிறுகதை அனுப்பினேன். வரைந்து கொடுத்திருந்தார். அது விகடனில் பிரசுரமாயிற்று. ஆரம்பத்தில் நான்கைந்து இதழ்களுக்கு ஒரு முறை விகடனில் அவர் வரைந்த படம் வரும். அது பின்னர் இரண்டு இதழ்களுக்கு ஒரு முறை என்றாகி, இப்போது விகடனில் ஸ்யாம்ராஜ்யம்தான்!

அவர் வரையும் பெண்கள், பார்த்ததுமே காதலிக்கத் தோன்றும்படி அத்தனை அழகாக இருப்பார்கள். அடுத்து, அவர் வரையும் கோணங்கள். ஒரு சினிமா ஒளிப்பதிவாளர் காமிரா ஆங்கிள் வைக்கிற மாதிரி, அவர் வரையும் படங்கள் புதுசு புதுசான கோணங்களில் பார்க்கவே ரசனையாக இருக்கும். அவர் வரையும் பாணியும் படத்துக்குப் படம் வித்தியாசப்படும். ஒரு முறை நூல் நூலாக இழுத்த மாதிரி ஒரு படம் வரைந்து தந்திருந்தார். அத்தனை நூல் கோடுகளை எப்படித்தான் போட்டாரோ என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியாதிருந்தது. அவரிடமே கேட்டுவிட்டேன். “சிவப்பா காசித்துண்டுன்னு சொல்வோமில்லையா, அதன் நூல் நுனிகளைக் கலர்ல தோய்ச்சு அப்படியே இழுத்து இழுத்துப் போட்டேன்” என்று விளக்கினார். வல்லவனுக்கு நூலும் ஆயுதம்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஓவியர் ஸ்யாமின் பரம ரசிகர். அடிக்கடி போன் செய்து ஸ்யாமின் ஓவியங்களைப் பாராட்டிச் சொல்வார். ஒரு முறை அவரிடம் படக் கதை ஒன்று கேட்டிருந்தேன். “ஸ்யாம் படம் வரைவதாக இருந்தால் படக் கதை தருகிறேன். காரணம், அந்தக் கதைக்கு ஸ்யாமால்தான் படம் போட முடியும்” என்றார். அதன்பின், அந்தப் படக் கதையின் கேரக்டர்களை அவரே ஓவியரிடம் நேரில் விளக்கிச் சொல்லட்டும் என்று ஸ்யாமை சுஜாதாவிடம் அழைத்துப் போயிருந்தேன். ஸ்யாமின் படங்களை அவர் எத்தனை ரசித்திருக்கிறார் என்பதை அன்றுதான் அறிந்தேன்.

இத்தனை திறமையுள்ள ஓவியர் ஸ்யாம் ஏன் திரைத்துறைக்குப் போகவில்லை என்பது என் ஆதங்கம். அவரிடமே கேட்டேன். அதில் அவருக்கு அத்தனைப் பிடித்தமில்லை. சுதந்திரமாகத் தன் விருப்பப்படி வேலை செய்ய முடியவில்லை என்பதுதான் காரணம் என்றார். சினிமா என்பது ஒரு டீம் வொர்க். அதில் தன் தனித்தன்மை அடிபட்டுப் போகிறது என்று நினைக்கிறார். தவிர, அது ஒரு டென்ஷனான வொர்க். ஸ்யாம் சற்று ஜாலியான ஆசாமி. தன் போக்கில் இயங்க வேண்டும் என்று விரும்புகிறவர். அதற்கு அங்கே குந்தகம் ஏற்பட, வேண்டாம் என்று விலகிவிட்டதாகச் சொன்னார். ஆக, திரைத் துறைக்குப் பெரிய நஷ்டம்.

ஸ்யாம் ஃபேஷன் ஷோக்களில்தான் இப்போது ஆர்வம் செலுத்தி வருகிறார். நகைக்கான ஃபேஷன் ஷோ, உடைக்கான ஃபேஷன் ஷோ மாதிரி ஓவியங்களுக்கான ஃபேஷன் ஷோக்களும் நடக்கின்றன. அதில் கேட்வாக் செய்யும் பெண்கள் தங்கள் உடலில் விசித்திரமான, புதுமையான ஓவியங்கள் வரைந்துகொண்டு ஒளிவெள்ளத்தில் நடந்து வரும்போது, மிக அற்புதமாக இருக்கும். அதற்கான இசை, அலங்காரம், நடைப் பயிற்சி, கலந்துகொண்ட மாடல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பரிசுகள் உண்டு; விருதுகள் உண்டு.

மாடல்கள் தங்கள் உடம்பில் வரைந்துகொள்ளும் ஓவியங்களும் மிகப் புதுமையாக இருக்கும். உதாரணமாக, ஒரு மாடல் நடந்து வரும்போது, மார்புகள் லேசாகக் குலுங்குமல்லவா... ஓவியர் அவள் மார்புகள் மீது புறாக்கள் போல் வரைந்திருந்தால், அவள் ஒளி வெள்ளத்தில் நடந்து வரும்போது புறாக்கள் சிறகடிப்பது போன்று தோற்றம் கொடுக்கும். ஸ்யாம் இப்படியான புதுமை ஓவியங்கள் வரைவதில் கில்லாடி. ஒருமுறை அவர் ஒரு மாடல் உடம்பில் ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்குவது போல, உள் எலும்புகள் தெரிவது போலத் தத்ரூபமாகப் படம் வரைந்து அனுப்பினாராம். அந்த மாடல் ஒளிவெள்ளத்தில் கேட்வாக்கி வரும்போது அந்த அசைவில், தொங்கிய சதை ஆடுவது போல, கையே பிய்ந்து கீழே விழுந்துவிடும் போல, உள் எலும்புகள் அசைவது போல ஒரு மாயத்தோற்றம் கிடைக்க, பார்வையாளர்களிடமிருந்து பலத்த கை தட்டல் எழுந்ததாகச் சொன்னார்.

என்றாலும், அத்தகைய ஓவியங்களுக்கென தான் பிரத்யேக ஓவியப் பயிற்சி பெறவில்லை, சான்றிதழ் இல்லை என்பதால், என்னதான் கை தட்டல் வாங்கினாலும் இவரை மேடையேற்றிக் கௌரவிப்பதோ, விருது கொடுப்பதோ கிடையாதாம். ஆனால், இவர் ஓவியம் வரைந்த மாடல், போட்டியில் வென்று பரிசு பெறுவார். அந்த ஃபேஷன் ஷோவை நடத்தும் ஏஜெண்ட்டிடமிருந்து கமிஷன் போக ஓவியர் ஸ்யாமுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கிடைக்குமாம். கோவா, மும்பை என எங்கே ஃபேஷன் ஷோ நடந்தாலும் அதை நடத்தும் ஏஜெண்ட்டிடமிருந்து, அல்லது அதில் பங்கேற்கும் மாடலிடமிருந்து ஸ்யாமுக்குப் போன் வந்துவிடுமாம். இவரும் அந்தச் சமயத்தில் அங்கே சென்று, ஃபேஷன் ஷோ நடக்கும் அரங்கத்துக்கு சில பர்லாங்குகள் தள்ளி ஓர் அறை எடுத்துக்கொண்டு தங்கி, தன்னை அழைத்த குறிப்பிட்ட அந்த மாடல் உடம்பில் படம் வரைந்து தந்துவிட்டு, ஷோவை பார்வையாளர்களில் ஒருவராகப் பார்த்து ரசித்துவிட்டு வந்துவிடுவாராம்.

உடம்பில் வரையும் பெயிண்ட் பிரத்யேகமானதா என்று கேட்டேன். “ஆமாம். அது சாக்லெட் க்ரீம் போன்றது. வழித்துச் சாப்பிட்டுவிடலாம்” என்றார்.

“மாடல்கள் நம்மளை மதிச்சுக் கூப்பிடறாங்க, சார்! நல்ல வருமானமும் கிடைக்குது. எந்த டென்ஷனும் இல்லை. நான் சுதந்திரமா, சந்தோஷமா இதைப் பண்ணிட்டிருக்கேன்” என்றார் திருப்தியான குரலில்.

ஒரு மனிதனுக்குத் தேவையானது திருப்தியும் சந்தோஷமும் நிம்மதியும்தான்! அந்த மூன்றும் ஸ்யாமிடம் இருக்கின்றன.

வாழ்க ஸ்யாம்!

*****

செய்யும் தொழிலில் ஆர்வமும் சந்தோஷமும் இருந்தால், திறனும் கச்சிதமும் தாமே வரும்!

6 comments:

butterfly Surya said...

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வைத்திருப்பார்கள்.

நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

ஸ்யாம் விகடனில் ஏன் படம் வரைவதில்லை என்று குழம்பிய ரசிகர்களில் நானும் ஒருவன் - திடீரென்று ஒருமுறை அவருடைய படத்தை விகடனில் முதன்முறையாகப் பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனது நினைவிருக்கிறது, அதன் பின்னணியை இப்போது உங்களிடம் தெரிந்துகொண்டது மகிழ்ச்சி!

அப்போது சசி என்று ஒருவர்தான் விகடனில் நிறைய வரைந்துகொண்டிருந்தார் என்று நினைவு

- என். சொக்கன்,
பெங்களூர்.

Nathanjagk said...

இந்த வார விகடனில் (19-ஏப்ரல்) ​வெளியான ஸ்யாம் பேட்டி சுவாரஸியம். அமெச்சூராக தொடங்கி இப்போது அமர்க்களம் பண்ணுகிறார்.
ஸ்யாம் மாடல்களுக்கு body painting ​செய்வது புதுத்தகவல்.
ஓவியமாக உடல்களை வரைவது ​போக, உடலில் ஓவியங்களையும் வரைகிறாரே!

Nathanjagk said...

:))

suresh seenu said...

concur!!

suresh seenu said...

Concur! amazing artist he is!