'அன்னை' என்றொரு மகாசக்தி!

அன்னையின் மகிமை பற்றி என் இன்னொரு பிளாகில் தொடர்ந்து எழுதி வருகிறேன். கேட்டது, படித்தது எல்லாம் இல்லை. எல்லாம் என் சொந்த அனுபவங்கள். சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள். நிஜம்தானா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான சம்பவங்கள்.

இறைவன் எந்த வடிவத்தில் இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. நிச்சயமாக அப்படி ஒருவன் இருக்கிறானா என்று கூட இன்னமும் எனக்கு ஆதார பூர்வமாகத் தெரியவில்லை. ஆனால், அன்னையிடம் நான் வைத்த வேண்டுதல்கள் ஒவ்வொன்றும் மிக மிக அதிசயிக்கத்தக்க விதத்தில் பலித்து வருவது நிஜம்.

நானொன்றும் எட்டு மாடி பங்களா சொந்தமாக வேண்டும், மாதம் குறைந்தபட்சம் ரெண்டு லட்சம் ரூபாய் சம்பளமாகக் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்ளவில்லை. எனக்கு என்ன தகுதி என்று நான் நினைக்கிறேனோ, அது கூடக் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து போகிற வேளையில், அதை வேண்டுதலாக அன்னை முன் வைக்கிறேன். கண்டிப்பாக நிறைவேற்றிவிடுகிறார் அன்னை.

காக்கை அடிக்கடி உட்காருகிறது; ஒவ்வொரு முறையும் பனம் பழம் விழுகிறது!

ஒரு சின்ன சம்பவத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்...

நான் அன்னையின் பக்தனாக ஆன பின்பு, ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள மியூஸிக் வேர்ல்டில் ‘புஷ்பாஞ்சலி’ என்கிற ஒரு கேசட் வாங்கினேன். அன்னையின் மீதான பக்திப் பாடல் கேசட் அது. காயத்ரி கிரிஷ் பாடியது.

மிக உருக்கமான, பக்திப் பரவசமூட்டும் பாடல்கள் ஒவ்வொன்றும். தினம்தினம் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தோம், நானும் என் குடும்பத்தாரும்.

ஏழெட்டு மாதங்களுக்குப் பின், ‘டூ-இன்-ஒன்’னில் ஏதோ பழுதாகி, ‘புஷ்பாஞ்சலி’ கேசட் ஓடும்போது, உள்ளே எங்கோ டேப் சிக்கிக்கொண்டு, வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டு, டேப்பைப் பிய்த்துதான் வெளியே எடுக்க முடிந்தது. முக்கால்வாசி டேப் முறுக்கப்பட்டு, மொத்தமாக வீணாகி விட்டது.

மறுநாளே, இன்னொரு கேசட் வாங்கிவிடுவது என்று ‘மியூஸிக் வேர்ல்ட்’ போனேன். கடையை முழுக்க அலசினேன். குறிப்பிட்ட அந்த கேசட் இல்லை.

விடவில்லை நான். அதை எப்படியாவது வாங்கியே தீருவது என்று ஜெமினி ஃப்ளைஓவர் அருகில் இருக்கும் லேண்ட்மார்க் போனேன். அங்கும் குறிப்பிட்ட அந்த கேசட் இல்லை. எங்கெங்கே கேசட் கடைகள் கண்ணில் படுகிறதோ அங்கெல்லாம் சென்று விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் ஓடிவிட்டது. அந்த ‘புஷ்பாஞ்சலி’ கேசட் எனக்குக் கிடைக்கவேயில்லை. அன்னை பக்தர்கள் என்று எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கூடச் சொல்லி வைத்திருந்தேன். பலனில்லை.

ஒருநாள் ரொம்பச் சோர்ந்து போய், “என்ன அன்னையே! உங்கள் புகழ்பாடும் கீதங்களைக் காதாரக் கேட்டு ரசித்துக்கொண்டு இருந்தோம். இப்போது கேட்க முடியாமல் இருக்கிறதே! உங்கள் பாமாலை கேசட்டுகள் வேறு பல கிடைக்கின்றன. ஆனால், எங்களுக்குப் பிடித்தமான இந்த கேசட் மட்டும் கிடைக்கவேயில்லையே?” என்று அன்னை படத்தின் முன்பு வேண்டிக் கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து, இயக்குநர் சிம்புதேவன் வீட்டுக்கு வந்தார். தான் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாகச் சொல்லி (அதுதான் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’), பெரிய ஸ்வீட் பாக்ஸை நீட்டினார். கூடவே, இன்னொரு சின்ன கிஃப்ட் பார்சலும் தந்தார்.

“என்ன சிம்பு இது?” என்றேன். “ஒண்ணுமில்ல சார், ஒரு சிறிய கிஃப்ட். உங்களுக்குப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்” என்றார்.

ஆவல் தாங்கமாட்டாமல் பிரித்தேன். பயங்கர ஷாக்! அதே ‘புஷ்பாஞ்சலி’ கேசட்.

“சிம்பு! இதெப்படி...” என்று தடுமாறிவிட்டேன்.

“நீங்க அன்னை டிவோட்டின்னு தெரியும். (என் வீட்டு ஹாலில் பெரிய அன்னை படம் - எங்கள் அலுவலக ஓவியர் சரவணன் எனக்காகப் பிரத்யேகமாக வரைந்தது தந்தது - உள்ளது.) ஸ்வீட் வாங்குறப்போ பக்கத்துக் கடையில இது கண்ணுல பட்டது. என்னோட ஒரு சின்ன கிஃப்டா இருக்கட்டுமேன்னு வாங்கினேன்” என்றார்.

அவரிடம் சிலிர்ப்போடு முழு விஷயத்தையும் சொல்லி, “நீங்க எடுக்கப்போற முதல் படம் எங்கள் மகாஸ்ரீ அன்னையின் அருளால் சந்தேகமில்லாமல் பெரிய வெற்றியைப் பெறும். வாழ்த்துக்கள்!” என்றேன்.

வேறு எத்தனையோ கிஃப்டுகளை அவர் எனக்குக் கொடுத்திருக்கலாம்; அல்லது, அன்னையின் புகழ்பாடும் வேறு கேசட் வாங்கிக் கொடுத்திருக்கலாம். குறிப்பாக, அதே கேசட்... எப்படி?

நமக்கும் மேலே ஏதோ இனம்புரியாத ஒரு சக்தி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அந்த சக்தியை ‘அன்னை’ என்று வரித்துக்கொண்டிருக்கிறேன்.
*****
பிரார்த்தனை உங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது; நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும்!

2 comments:

SPIDEY said...

!!!!!!!!!!!!!!!

அரவிந்த் said...

ரவி சார், இப்போது உங்கள் பிளாகைப் பார்த்தேன். அன்னை மகா ஒரு சக்தி என்பதில் ஐயமே இல்லை. நமது வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஸ்ரீ அன்னை நிறைவேற்றித் தருவார் என்பது நிச்சயம்.

ஓம் ஸ்ரீ அன்னையே போற்றி!

அன்புடன்
அரவிந்த் சுவாமிநாதன்