34‍-வது புத்தகக் காட்சி!

நான், பொன்ஸீ, ஆரூர்தாஸ், அவரின் அண்ணன் மகன்
ரு வழியாக, 34-வது புத்தகக் காட்சியை நேற்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

சங்கீத கச்சேரிக்குப் போகிறவர்கள், அங்கே கான்ட்டீனில் ஒரு வடையையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வரவில்லையென்றால், கச்சேரிக்குப் போய் வந்த புண்ணியமே அவர்களுக்குக் கிட்டாது என்பதுபோல ஆகிவிட்டது புத்தகக் காட்சியும்! உள்ளே ஸ்டால்களுக்கு நிகரான கூட்டம் கான்ட்டீனிலும் அம்மியிருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு, நான் என் மகனோடு புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். முதலில், விகடன் ஸ்டாலைத் தேடிக் கண்டுபிடித்து, 'காலப் பெட்டகம்' தொகுப்புப் புத்தகம் ரெடியாகி விற்பனைக்கு வந்துவிட்டதா என விசாரித்தேன். 'இன்னும் இல்லை; இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும்' என்றார்கள். வெளியே ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருந்ததால், பலர் வந்து மேற்படி புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிப் போனதாகத் தகவல்.

'சரி, வருகிறபோது வரட்டும்' என்று, நான் என் மகனுடன் மொத்த ஸ்டால்களையும் ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

பொங்கல் போனஸ் கையில் இருக்கிற நேரமாகப் பார்த்து புத்தகக் காட்சியை நடத்தலாம் என்று முதன்முதலில் ஐடியா கொடுத்த புண்ணியவான் யாராக இருந்தாலும், இதோ, அவர் வாயில் ஒரு பிடி சர்க்கரை! என் கையிலும் கணிசமாகக் காசிருந்தது. அதற்கேற்ப என்னென்ன வாங்கவேண்டும் என்று என் மகனின் மனதிலும் ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது.

எந்த ஸ்டாலையும் விட்டுவிடக்கூடாது என்கிற உத்தேசத்தில், முதலில் இடது கோடியிலிருந்து தொடங்கி, 'எஸ்' மாதிரி 'யு' டர்ன் அடித்து, வளைந்து வளைந்து வந்தோம். வழியில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் ஸ்டால் என் மகனை ஈர்த்துவிட்டால், 'அப்பா! ஒரு நிமிஷம்' என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் ஜோதியில் கலந்துவிடுவான். அவன் வரும் வரையில் நான் பாதையில் நின்றுகொண்டு, அறிந்தவர் தெரிந்தவர் யாரேனும் தென்படுகிறாரா என்று பார்ப்பேன்.

உள்ளே போனவன், பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்து, 'அப்பா! உள்ளே ரெண்டு புக்ஸ் செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன். 240 ரூபாயாம். டிஸ்கவுன்ட் போக 200 ரூபாய்க்குள்ளதான் ஆகும். காசு கொடு!' என்பான். என்ன வாங்கி வருகிறான் என்று பார்த்தால், ஏதாவது கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகமாக இருக்கும்.

பிறகொரு ஸ்டாலில் புகுந்து, மாஜிக் செய்வது எப்படி, ஐம்பது வகை டிரிக்ஸ், சீட்டுக்கட்டில் தந்திர விளையாட்டு, ஓரிகாமி மற்றும் டிராயிங் சம்பந்தமான புத்தகங்களை அள்ளி வந்தான். அமர்சித்ரா காமிக்ஸுகள் அடுக்கி வைத்திருந்த ஸ்டாலில் புகுந்து பஞ்சதந்திரக் கதைகள், பீர்பால் ந‌கைச்சுவைக் கதைகள், ஹனுமான், நாரதர், சகுந்தலை போன்று காமிக்ஸ் புத்தகங்களாக ஒரு பத்துப் பன்னிரண்டு தேற்றிவிட்டான்.

'நீ ஒண்ணுமே வாங்கலையாப்பா?' என்று கரிசனமாகக் கேள்வி வேறு! அவன் கேட்டானே என்று ரோஷம் வந்து, கண்ணதாசன் பதிப்பகத்தில் புகுந்து, 'அர்த்தமுள்ள இந்து மதம்' ஒரு செட் அப்படியே மொத்தமாக வாங்கினேன். அதை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாசித்திருக்கிறேனே தவிர, முழுமையாகப் படித்ததில்லை. வெறுமே லைப்ரரிக்குச் சேர்ப்பதற்காக என்றில்லாமல், படித்தே தீருவது என்று வாங்கினேன்.

'அர்த்தமுள்ள இந்து மதம்' என்கிற தலைப்பு சாவி சார் தந்தது. தினமணிகதிரில் அவர் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது, கவியரசு கண்ணதாசனிடம் ஆன்மிக விஷயங்களைத் தொடராக எழுதும்படி கேட்டுக்கொண்டாராம். உடனே கண்ணதாசன் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு, "நல்ல ஆளைப் பிடிச்சீங்க சார், ஆன்மிக விஷயம் எழுதுறதுக்கு! நான் சினிமாக்காரன். தவிர, போதைக்கு அடிமையானவன்னு உலகத்துக்கே தெரியும். நான் எழுதினா எவனாவது மதிப்பானா?" என்று மறுத்தாராம். "இல்லை. நீங்க எழுதினாதான் இளைஞர்கள் படிப்பாங்க. உங்க பர்சனல் வாழ்க்கையையும், எழுத்தையும் இணைச்சுப் பார்க்க மாட்டாங்க. விஷயம்தான் முக்கியம். யார் எழுதறாங்கன்றது முக்கியம் இல்லே. கொள்ளைக்காரனா இருந்த வால்மீகிதானே ராமாயணம் எழுதினாரு?" என்று வற்புறுத்தினாராம் சாவி.

"இந்து மதத்தின் சிறப்புகளை நீங்க உங்க அனுபவத்தோடு உதாரணங்கள் சொல்லி எழுதுங்க. நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்!" என்று சொன்ன சாவி, 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் தலைப்பைச் சொல்லி, அறிவிப்பையும் வெளியிட்டாராம்.

பத்திரிகையுலக ஜாம்பவானின் வாக்கு பொய்க்குமா என்ன? அந்தத் தொடர் வெளியான காலத்தில் அத்தனைப் பரபரப்பாக இருந்தது. நேற்றைக்கும் நான் பார்த்த வரையில் கண்ணதாசன் பதிப்பகத்தில் 'அர்த்தமுள்ள இந்து மதம்' புத்தக விற்பனைதான் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.

பிள்ளையார், சரஸ்வதி, சிவன், ஷீர்டி சாயிபாபா என 3டி கடவுள் படங்களை ஓரிடத்தில் விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னால், தி.நகர் பிளாட்பாரத்தில் இதே போல் 3டி இயற்கைக் காட்சிப் படங்களை ஒன்று 150 ரூபாய் என்கிற வீதத்தில், நாலைந்து படங்கள் வாங்கினேன். இங்கே சாமி படங்கள் விலை மலிவாக, பிரேமிட்டது 90 ரூபாய், வெறும் படம் 60 ரூபாய் எனக் கிடைத்தது. அதிலும் ஒரு நாலைந்து வாங்கிப் போட்டேன்.

பியானோ சாஃப்ட்வேர், கிட்டார் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் கேம்ஸ் என ஒரு ஸ்டாலில் புகுந்து புறப்பட்டு 600 ரூபாய்க்கு வேட்டு வைத்தான் மகன். 'கண்ணா! அவ்ளோதான். கொண்டு வந்த 2,500 ரூபாயும் காலி. பையில பத்து ரூபா தாள் கொஞ்சமும், ஐம்பது ரூபாய் ஒண்ணோ ரெண்டோ கிடக்கும்னு நினைக்கிறேன். அதனால, ஷாப்பிங் முடிஞ்சுது. கிளம்பறோம்!' என்றேன்.

இதற்குள் அத்தனை ஸ்டால்களையும் நாங்கள் ஒரு ரவுண்டு வந்துவிட்டிருந்தோம். மீண்டும் கூட்டத்தில் நீந்தி விகடன் ஸ்டாலுக்குப் போகிற வழியில் விகடன் பிரசுர பொறுப்பாசிரியர் பொன்ஸீயிடமிருந்து போன்... 'வாங்க! பொட்டி வந்துடுச்சு!'

'காலப் பெட்டகம்' புத்தகம் தயாராகி வந்துவிட்ட‌து என்பதையே அவர் அப்படிச் சொன்னார்.

விகடன் ஸ்டாலுக்குப் போனோம். அங்கே என் பெருமதிப்புக்குரிய கதை வசனகர்த்தா, என் மீது மிகவும் அன்புகொண்ட பெரியவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் வந்திருந்தார். 'காலப் பெட்டகம்' புத்தக‌த்தின் முதல் பிரதியை அவரிடம் வழங்கினார் பொன்ஸீ.

மாலை 6 மணி போல், ஆரூர்தாஸ் அவர்களை அழைத்துச் சென்று, கான்டீனில் காபி வாங்கித் தந்தோம். டிபன் எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் ஆரூர்தாஸ். தனக்கு சதாபிஷேகம் விரைவில் வரவிருக்கிறது என்றும், தன் மீது அன்புகொண்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி அதை கிராண்டாக நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார் என்றும், அவசியம் நான் குடும்பத்தோடு அந்த விழாவுக்குக் கட்டாயம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் ஆரூர்தாஸ். ‌"இன்னும் அதற்குச் சில மாதங்கள் இருக்கு. அழைப்பு அனுப்பறேன் ரவி! கட்டாயம் வரணும். நீங்க என் குடும்பத்துல ஒருத்தர்!" என்றார். பெரிய ஆளாக வரவேண்டும் என என் மகனின் தலையில் கை வைத்து, மனமார ஆசிர்வதித்தார் அந்தப் பெரியவர்.

காஞ்சிப் பெரியவர் உள்பட, மகான்கள் யாரையும் நான் சந்தித்ததோ, ஆசி பெற்றதோ கிடையாது. எனக்குக் கிடைத்ததெல்லாம் சாவி சார், பாலு சார், டி.எம்.எஸ்., பாக்கியம் ராமசாமி, ஆரூர்தாஸ் போன்ற பெரியவர்களின் ஆசிகள்தான். என் மகனுக்கும் அவர்களின் ஆசி கிடைத்திருப்பதில் பூரண மன நிறைவு எனக்கு.

மணி மாலை 6:30.

புதிர்ப் போட்டி வைத்து, அதில் வென்ற பதிவுலக நண்பர்கள் திரு.சொக்கன், திரு.அதிஷா இருவருக்கும் 'காலப் பெட்டகம்' புத்தகம் பரிசளிப்பதாகவும், புத்தகக் காட்சிக்கு வந்தால் நேரிலேயே வழங்குவதாகவும் சொல்லியிருந்தேன். திரு.சொக்கன், தன்னால் செவ்வாய் அன்றுதான் சென்னை வரமுடியும் என்றும், அதிஷாவிடம் தனக்கான புத்தகத்தைக் கொடுத்துவிட்டால் பெற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால், அதிஷாவும் நேற்று புத்தகக் காட்சிக்கு வரவில்லை. எனவே, மகனுடன் கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் போன் செய்துவிட்டு, விகடன் அலுவலகம் வந்திருந்தார் அதிஷா. அவருடன் யுவகிருஷ்ணாவும் வந்திருந்தார். அவர்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். துடிப்பும் உற்சாகமும் நிரம்பிய இளைஞர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற எனர்ஜி டானிக் வேறு எதுவும் இல்லை.

சொன்னபடி திரு.சொக்கனுக்கும் சேர்த்து அதிஷாவிடம் 'காலப் பெட்டகம்' புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டேன்.

அதிஷா என்பது ஒரு பெண்ணின் பெயர் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இல்லையாம். அது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குருவின் பெயராம். ஓஷோ ரஜ்னீஷுக்கும் குரு போன்றவராம் அதிஷா. ரஜ்னீஷின் புத்தகம் ஒன்றில் இந்தப் பெயரைப் பார்த்ததும் ஈர்க்கப்பட்டுத் தன் புனைபெயராக வைத்துக்கொண்டதாகச் சொன்னார் அதிஷா.

குரு அதிஷாவை ரஜ்னீஷ் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அதிஷாவை என் மகன் ரஜ்னீஷ் சந்திக்கும் வாய்ப்பு நேற்று இருந்தது.‌

அதிஷா வராததால், நேற்று ஒரு மகத்தான குரு சிஷ்ய சந்திப்பு நிகழாமல் போய்விட்டது!

***
ஒரு பொருளின் விலை என்பது அந்த‌ச் சரக்குக்குதானே தவிர, அது வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கோ புட்டிக்கோ அல்ல; ஆனால், ஒரு புத்தகத்தின் விலை என்பது அட்டைக்கும், அச்சுக்கும், தாளுக்கும்தானே தவிர, அதில் உள்ள சரக்குக்கு அல்ல!

8 comments:

அன்புடன் அருணா said...

புத்தகக் காட்சி! வரமுடியாத எங்களுக்கெல்லாம் சுற்றி வந்தது போலிருக்கு!

பழமைபேசி said...

புத்தகக் காட்சி எனச் சரியாக தலைப்பிட்டுக் கவர்ந்தீர்கள்... பகிர்வுக்கு நன்றி!

பணிவுடன்,
பழமைபேசி.

Chitra said...

அருமையாக இருக்குதுங்க...

கிருபாநந்தினி said...

போன வருஷ ’புத்தகக் காட்சி’க்கே வரணும்னு நெனைச்சேன். முடியலை. இந்த முறை பொங்கலின்போது கண்டிப்பா வரலாம்னு இருக்கேன். பதிவுக்கு நன்றி!

கே. பி. ஜனா... said...

உங்களோடு சேர்ந்து நானும் புத்தகக் காட்சியை சுற்றினேன். நன்றி!

கணேஷ் ராஜா said...

சார், நானும் நேற்று புத்தகக் காட்சிக்கு வந்திருந்தேன், உங்களைச் சந்திக்கும் பொருட்டு. விகடன் ஸ்டாலில் விசாரித்ததில், நீங்கள் கிளம்பிப் போய்விட்டதாகச் சொன்னார்கள். ‘காலப் பெட்டகம்’ புத்தகம் ஒன்று வாங்கிக்கொண்டு போனேன். படித்துவிட்டு, அது பற்றிய என் அபிப்ராயத்தைப் பிறகு எழுதுகிறேன்.

Athisha said...

நேற்று உங்களை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ந்து போனோம்.

butterfly Surya said...

எங்க சுற்றினாலும் உங்க குரு நாதர் சாவி சாரை பதிவில் விடமாட்டீங்க.. அருமை சார்.

தொடர் அலைச்சலால் உடல் நலமில்லை.

நாளை வருகிறேன்.

தம்பி அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்.