பத்து நாள் யுத்த டயரி!

போன சனிக்கிழமையிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை - கடந்த பத்து நாட்களாக - தூங்காமல் இருக்கிறேன். இது கின்னஸ் ரிக்கார்டாகக்கூட இருக்கலாம்; யார் கண்டது?! (தினமும் காலையில் ஐந்து மணி முதல் ஏழு அல்லது ஏழரை வரை தூங்குகிறேன். கின்னஸில் இதற்கு இடம் உண்டு. தொடர்ந்து நாள் கணக்கில் விடாமல் பேசுவதை கின்னஸில் பதிகிறவர்களுக்கும் இடையிடையே ஐந்து, பத்து நிமிடங்கள் ஓய்வாக இருப்பதை கின்னஸ் அனுமதிக்கிறதே; அது போல என் தினசரி ஒன்றரை மணி நேரத் தூக்கத்தை - ஹூம், அது ஒரு தூக்கமா! - எடுத்துக் கொள்ளுங்கள்.)

தூக்கம் போனதற்குக் காரணம், என் பதிவைத் தொடர்ந்து படித்து வரும் அன்புக்குரிய வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் - மூட்டைப் பூச்சி. இதற்கு முன் பல முறை மூட்டையிடம் கடிபட்டிருக்கிறேன் என்றாலும், இந்த முறை அவை ராஜபக்‌ஷேவின் காட்டுமிராண்டிப் படை இலங்கைத் தமிழர்கள் மீது நடத்திய இறுதி யுத்தம் போன்று என் மீது பாய்ந்து, கடித்துக் குதறிவிட்டது. ஒரு நாளல்ல, இரு நாளல்ல... தொடர்ந்து பத்தாவது நாளாக நேற்றைக்கும்!

நானோ எல்லோராலும் கைவிடப்பட்ட பிரபாகரன் நிலையில், எதிர்த்துப் போராடத் திணறிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்களிடமெல்லாம் என் மூட்டைப் புராணத்தை அவிழ்த்து, அதைப் போக்க ஏதேனும் உபாயம் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

என் பத்து நாள் யுத்த டயரி இதோ:

24-10-09: முதலில், மூட்டைகளை எதிர்த்து சற்றே சாத்விக யுத்தம்தான் நடத்தினேன். வெறும் கெரசினைத் துணியில் நனைத்து, இண்டு இடுக்குகளில் பூசினேன். அதிலேயே எதிரி ஒழிந்தான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். இரவு எட்டு, ஒன்பது மணி அளவில் கெரஸினைத் தளும்பத் தளும்பப் பூசியிருந்தாலும், அவை இரவு பதினோரு மணிக்குள் ஆவியாகி, பன்னிரண்டு மணிக்கு மூட்டைப் படை என்னைத் தாக்கியது. கெரஸின் வாடைக்கு மூட்டை வராது என்று சொல்கிறார்களே, அது பச்சைப் பொய்!

25-10-09: ஞாயிறு. கடைகளுக்குச் சென்று மூட்டை பற்றிப் பிரஸ்தாபித்து, மூக்குடை பட்டேன். “அட, அது மூட்டையாய் இருக்காதுங்க. இந்தக் காலத்துல ஏதுங்க மூட்டை? அதையெல்லாம் எப்பவோ ஒழிச்சுக் கட்டியாச்சே! நீங்க பார்த்தது கறையானா இருக்கும். அல்லது, அந்துப் பூச்சியா இருக்கும். அது கடிச்சாலும் மூட்டைக் கடி மாதிரிதான் இருக்கும். அதே போலத்தான் தடிக்கும்” என்றார்கள். என்னவோ பெரியம்மையை ஒழித்துவிட்ட ரேஞ்சுக்கு மூட்டைப் பூச்சியை ஒழித்துவிட்ட மாதிரி பேசினார்கள். அவர்களிடம் மேலும் விவாதிக்க விரும்பாமல், “சரி, ஏதோ ஒரு பூச்சி! அதை ஒழிக்க ஏதாச்சும் மருந்து இருந்தா கொடுங்க!” என்றேன். “வேறென்ன, ஹிட்டுதான்! வாங்கிட்டுப் போய் அடிங்க! கரப்பு கிரப்பு, கொசு கிசு, பல்லி கில்லி எல்லாம் செத்துப் போயிரும்” என்று உத்தரவாதமாய்ச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை நம்ம்ம்ம்பி வாங்கிட்டுப் போய் என் அறைக்கு மட்டும் அந்த எண்பது ரூபாய் ஹிட் மொத்தத்தையும் கமறக் கமற அடித்தேன். அடித்த நெடியில் எனக்கே சற்று கேரிங்காக இருக்கவும், முழு நம்பிக்கை பிறந்து, சன் டி.வி. ஞாயிறு காலை ராமாயண சீரியல் ராவணன் போல “கெக்கெக்கெக்கெக்...”கென்று சிரித்து, “ஒழிந்தார்கள் அந்த மதி கெட்ட மூட்டையர்கள். ஆடிவிட்டேன் அவர்களை நான் வேட்டை!” என்று கெக்கலி கொட்டிச் சிரித்தேன். அன்றைக்கு இரவு, மூட்டைப் படை வீறு கொண்டு எழுந்து, என் மீது கிளஸ்டர் குண்டுகளைப் போட்டது மாதிரி உடம்பு பூராவும் பிடுங்கி எடுத்தது. “முட்டாளே! ஹிட்டாமில்ல ஹிட்டு! இப்ப நாங்கதான் கண்ணு ஹிட்டு!” என்று அவை என்னைக் கேலி செய்தன.

26-10-09: திங்களன்று அலுவலகத்தில் தூக்கம் கெட்ட மயக்க நிலையில் அமர்ந்துதான் வேலை பார்த்தேன். இன்றைக்கு இரவு மூட்டையை எப்படியாவது ஒழித்துவிடுவது என்று என் தோள்கள் தினவெடுக்க (அல்லது, நேற்றைய மூட்டைக் கடியின் அரிப்போ?) சீக்கிரமே வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்காரரையே போய்க் கேட்டேன். “ஒண்ணுமில்லீங்க, எறும்புப் பொடியை வாங்கித் தூவுங்க. உடனே போயிடும்” என்றார் சிம்பிளாக. “கொடுங்க ஒரு அரை கிலோ” என்று வாங்கிக் கொண்டு வந்து, அறை ஓரங்களில் எறும்புப் பொடியை - யாராவது அமைச்சர் விஜயம் செய்தால் அந்தத் தெருவில் இரண்டு பக்கமும் பிளீச்சிங் பவுடரால் பார்டர் கட்டுவார்களே, அந்த ரேஞ்சுக்கு - தூவி வைத்தேன். ‘இப்ப எப்படி வருவே? இப்ப எப்படி வருவே?’ என்று நடுவாகப் படுத்தேன். பதினோரு மணி இருக்கும். தோள்பட்டையில் முதல் கடி; அடுத்துக் கொஞ்ச நேரத்தில் இடுப்புப் பக்கம் ஒரு கடி; பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன்; கால் ஆடு சதையில் மூன்றாவது கடி! எம்.ஜி.ஆர்.கூட மூன்று அடிகளைத்தானே பொறுப்பார்! அடுத்த அடி அடிக்க ஓங்குகிற வில்லனின் கையை அப்படியே பிடித்து முறுக்கி, எதிர்த் தாக்குதல் தொடங்கிவிடுவார் அல்லவா? நானும் எதிர்ப்பது என்று முடிவு கட்டிவிட்டேன். டியூப் லைட்டைப் போட்டுப் பார்த்தேன். ஏழெட்டு மூட்டைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தன. அத்தனையும் ஒன்று விடாமல் இழுத்து வைத்து ஆத்திரம் தீர நசுக்கினேன். இன்னும் ஏதாவது எதிரிப் படை ஒளிந்து இருக்கிறதா என்று பாய், தலையணைகளை உதறிப் பார்த்தேன். இல்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தேன். ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது. மீண்டும் கடிகள். எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தால் மேலும் பத்துப் பன்னிரண்டு மூட்டைகள். ‘விடாதே! நசுக்கு!’ இப்படியே அன்றைய பொழுதும் சுபமாக விடிந்தது.

27-10-09: செவ்வாய். புழுதிவாக்கத்திலிருந்த என் தங்கைக்குப் போன் செய்து மூட்டைக் கடி பற்றி ஒரு குரல் அழுதேன். “இங்கேயும் எக்கச்சக்கமா மூட்டைப்பூச்சி இருந்துதுண்ணா! நாங்களும் எறும்பு மருந்து, ஹிட்டுன்னு என்னென்னவோ பண்ணிப் பார்த்தோம். போகலை! அப்புறம் தெரிஞ்ச மாமி ஒருத்தங்க ஒரு யோசனை சொன்னாங்க. படிகாரத்தை வாங்கிப் பொடி பண்ணிப் போட்டு வெச்சா, அந்த வாசனை மூட்டைப் பூச்சிக்குப் பிடிக்காது. உடனே ஓடிப் போயிடும்னு சொன்னாங்க. அது மாதிரியே பண்ணினேன். இப்போ இங்கே ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லே. நீயும் அது மாதிரி பண்ணு!” என்றாள். இதே யோசனையைத்தான், என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் கிருபாநந்தினி என்கிற வாசகியும் பின்னூட்டம் இட்டிருந்தார். எனவே, இந்த முறை மூட்டையார் தப்ப முடியாது என்ற பெரு நம்பிக்கையோடு அரை கிலோ படிகாரம் வாங்கி வந்து பொடி செய்து, நெடி அடிக்க, சுவர் ஓரர்களில் தூவி வைத்தேன். எறும்பு மருந்துக்கே பெப்பே சொல்கிற எங்கள் வீட்டு மூட்டையார் படிகாரத்துக்கு பை...பை... சொல்லமாட்டாரா என்ன? அன்றைக்கும் தூக்கம் போச்சு!

28-10-09: அலுவலகம் பூராவும் என் பரிதாப நிலை பரவிவிட்டது. “ஹிட் அடிச்சுப் பார்த்தீங்களா?” என்றார் ஆர்ட்டிஸ்ட் ராஜா. “பார்த்தேன். அதுக்கெல்லாம் அது அசைஞ்சு கொடுக்கலை. ஹிட்டுங்கிறது வெறும் கரப்புக்கு மட்டும்தானே? மூட்டைப் பூச்சி எப்படி ஒழியும்?” என்றேன். “இல்லையே! கரப்புக்குன்னு போடுவானே தவிர, மூட்டைப் பூச்சியும் சாகணுமே?” என்றார். “இந்த நியாயம் உங்களுக்குத் தெரியுது. அந்தப் பாழாப் போன மூட்டைப் பூச்சிக்குத் தெரியலையே?” என்றேன். “வேற வழியில்லை. நான் ஒரு நம்பர் தரேன். பெஸ்ட் கண்ட்ரோல்காரங்க நம்பர். அதுக்கு போன் பண்ணீங்கன்னா, உடனே வீட்டுக்கு வந்து மூட்டைப் பூச்சியை ஒழிச்சுக் கொடுத்துட்டுப் போவாங்க. ஒரு நாள் மட்டும் வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்க வேண்டியிருக்கும். வேற எங்கேயாவது போய் இருந்துக்குங்க” என்றார். அங்கேதான் இடித்தது. இரவு எறும்பு மருந்தை கெரஸினில் கரைத்து என் அறை முழுக்கப் பூசினேன். (வேடிக்கை என்னவென்றால், என் அறையில் மட்டும்தான் மூட்டைகளின் அராஜக, அடாவடித்தனம். மற்ற அறைகளில் இல்லை. அங்கே படுக்கலாமே என்பீர்கள். முடியாது. எல்லா அறைகளும் ஹவுஸ்ஃபுல்!) கெரஸின்+எறும்பு மருந்து என இரட்டைத் தாக்குதல் நடத்தியும் பலனில்லை. தூக்கம் கெட்டது கெட்டதுதான்!

29-10-09: என் பையனுக்கு ஒரு புத்தகம் வாங்குவதற்காக எம்.ஜி.ஆர். நகருக்குச் சென்றபோது, அங்கே அந்தப் புத்தகக் கடைக்காரரிடம் மூட்டைக்கு மருந்து உண்டா என்று கேட்டேன். மண்ணெண்ணெய் பூசி மண்டை காய்ந்ததாய், ஹிட் அடித்துத் தோல்வியுற்றதாய், எறும்பு மருந்து போட்டு ஏமாந்ததாய், படிகாரம் தூவிப் பல்லிளித்ததாய் முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிட்டேன். “அடடா! சரியானதை விட்டுட்டு நீங்க வேற எதை எதையோ செஞ்சிருக்கீங்களே சர்ர்! பேகான் ஸ்ப்ரே வாங்கி அடிங்க. பட்டுனு போயிடும்” என்றார். “அது கரப்புக்குதானே? மூட்டைப் பூச்சி போகுமா?” என்றேன். “அதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு அவ்வளவு தூரம் தெரியாது சார். நீங்க வாங்கி அடிங்க. போச்சா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க” என்றார். வாங்கி வந்து அடித்தேன். மூட்டையாரிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

30-10-09: ஆர்ட்டிஸ்ட் ராஜாவின் நண்பர் ஒருவர் நெட்டில் மூட்டைப் பூச்சிக்கு மருந்து தேடினார். அரண்மனைக்காரன் தெருவில், அங்கப்ப நாயக்கன் தெருவில், குறளகம் எதிரில் இங்கெல்லாம் மூட்டைப் பூச்சி மருந்துகள் கிடைப்பதாகச் சொன்னார். உடனே போனேன். அந்தக் கடைக்காரர்களும் முதலில் ஹிட்டை எடுத்து நீட்டினார்கள். “இதெல்லாம் பத்தாது! டிக்-20 மாதிரி பவர்ஃபுல்லா ஏதாச்சும் இருந்தா கொடுங்க” என்றேன். “முந்தியெல்லாம் வந்தது சார்! அத்தக் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு இப்ப அதைத் தடை பண்ணிட்டாங்க. சரி, இதை அடிச்சுப் பாருங்க” என்று ஹிட் மாதிரியே ஒன்றை எடுத்துக் காண்பித்தார். NO-P என்பது அதன் பெயர். அதாவது No Pest-ஆம்! பெஸ்ட் என்றால் கறையான் அல்லவோ? மூட்டை போகுமா என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன். கடைக்காரர் அந்த டப்பா மீது ‘பெட் பக்ஸ்’ உள்பட செத்து ஒழியும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காண்பித்தார். அப்பாடா! முதன்முறையாக மூட்டைப் பூச்சி ஒழிவதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! சந்தோஷமாக அதை வாங்கி வந்து இரவு, “இன்னியோட செத்தீங்கடா மூட்டைங்களா!” என்று அடித்தேன். நெடி தூக்கலாக இருந்தது. ஒழிந்துவிடும் என்று நினைத்தேன். ஒழியவில்லையே! மருந்தின் நெடியிலும், மூட்டைக் கடியிலும் எனக்கு அன்றைக்கும் தூக்கம் கெட்டது.

அதென்னவோ, படுக்கை விரிக்கிற வரைக்கும் ஒரு மூட்டைப் பூச்சியும் கண்களுக்குத் தென்படுவதில்லை. விளக்கை அணைத்துப் படுத்தால், எந்தப் பக்கத்திலிருந்து வந்தன என்றே தெரியாமல் போர்வையின் கீழே எல்லாம் மூட்டைப் பூச்சிகள்! இன்றைக்கு எத்தனை மூட்டைப் பூச்சிகள் என்னைக் கடித்தன என்று கணக்கிடும் ஆசை வந்தது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கெரஸினைக் கொட்டிக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, மூட்டை கடிக்கக் கடிக்க, சட்டென்று எழுந்து விளக்கைப் போடுவதும், பரபரத்து ஓடும் மூட்டைகளைப் பிடித்துக் கெரஸின் கிண்ணத்தில் போடுவதுமாய் இருந்தேன். விடியும்போது கிண்ணத்தில் பாதி அளவு மூட்டை நிரம்பியிருந்தது. ஒரு தடவைக்குக் குறைந்தபட்சம் பத்து மூட்டைகளை எடுத்துப் போட்டேன் என்றால், விடிவதற்குள் முப்பது முறையாவது போட்டிருப்பேன். ஆக, ஏறத்தாழ முன்னூறு மூட்டைகள்!

31-10-09: வேப்பெண்ணெய் பூசினால் அந்த வாசனைக்கு மூட்டை போய்விடும் என்று யாரோ சொன்னார்கள். நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, யார் எதைச் சொன்னாலும் கேட்டு அதன்படி செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன ஒன்று... ஏதேனும் புதிய ஐடியாவாக இருக்க வேண்டும்! சொன்னதையே சொல்லப்படாது! வேப்பெண்ணெய் பூசி வைத்ததில், எங்கள் தொண்டையெல்லாம் கசப்பு வழிந்தது. மூட்டைக்குத் தொண்டை என்று ஒன்று இருந்தால்தானே?

1-11-09: ஞாயிறு. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து பழைய தலையணைகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, புதிய தலையணைகள், புதிய தலையணை உறைகள் வாங்குவோமென்று எம்.ஜி.ஆர். நகர் போனேன். அந்தக் கடைக்காரரிடம் மூட்டைப் பூச்சி ஒழிய ஒரு உபாயம் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் சுவாரஸ்யமாக இன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டார். “குடிக்கிற தண்ணி நல்லா இருக்கா சார் முதல்ல? அந்தக் காலத்துல மாம்பழம் இயற்கையா பழுக்கும். தின்னிருக்கோம். இல்லேன்னா வைக்கோலைச் சுத்தி, அரிசி டின்ல போட்டு பழுக்க வெச்சுத் தின்னுவோம். இன்னிக்குக் கல்லைப் போட்டுப் பழுக்க வைக்கிறாங்களாம். உடம்பு நாசமாத்தான் போவும். கத்திரிக்காய்ல கூட மரபணுக் கத்திரிக்காய் கண்டுபிடிச்சுருக்காங்களாமே... இன்னும் மனுஷனத்தான் செய்யலே! கூடிய சீக்கிரம் அதையும் செஞ்சுருவாங்க. அப்புறம் அவனைச் சாகடிக்க முடியாது. அவன் நம்மையெல்லாம் சாகடிச்சுட்டுப் போயிடுவான்” என்று, சிக்கினாண்டா சீமாச்சு என ஒரு மணி நேரத்துக்குப் பிளேடு போட்டுவிட்டுக் கடைசியில் உருப்படியாக ஒன்றைச் சொன்னார்... “பக்கத்துல ஹார்டுவேர் கடைங்க இருக்குது. அங்கே போங்க. செல் ஆயில்னு கேளுங்க. தருவாங்க. எடுத்துட்டுப் போயி, முகமூடி கட்டிக்கிட்டு, ஒரு பிரஷ்ஷால சுவர்ல அந்த ஆயிலை அடிங்க. நெடி பயங்கரமா அடிக்கும். மூட்டை நூறு பர்செண்ட் செத்துரும். சந்தேகமே வேணாம்” என்றார்.

நிறைய பொது அறிவு விஷயங்களாகப் பேசினாரே, அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஹார்ட்வேர் கடையில் போய் செல் ஆயில் கேட்டேன். குட்டியூண்டு கேன் 48 ரூபாய். ஸ்வைன் ஃப்ளூ முகமூடி ஒன்று பத்து ரூபாய். ஒரு பிரஷ் 30 ரூபாய். அவர் சொன்னது போல செல் ஆயிலின் நெடி உங்க வீட்டு நெடி எங்க வீட்டு நெடி இல்லை. நேரே தொண்டைக் குழிக்குள் காரமாக இறங்கியது அந்த நெடி. இருமல் வந்தது. இரவு எட்டு மணிக்கு செல் ஆயில் அடித்தபோது இருந்த நெடியை விட நேரமாக ஆக, நெடியின் வீர்யம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. அறைக் கதவைச் சாத்திவிட்டு வேறொரு அறையில் படுத்தும் எனக்குத் தூக்கம் இல்லை. இரவு மூன்று மணிக்குக் கதவைத் திறந்து பார்த்தால், குபீரென்று கார நெடி முகத்தைத் தாக்கிற்று. சாத்திவிட்டுப் படுத்துக்கொண்டேன். ‘நிச்சயம் இந்த மருந்து சூப்பர் பவர்தான். மூட்டைகள் ஒழிந்தால், அந்தத் தலையணைக் கடைக்காரருக்கு சாக்லேட் வாங்கிப் போய்த் தரவேண்டும்’ என்று யோசித்தபடியே படுத்திருந்தேன்.

2-11-09: மறு நாள் காலை எழுந்து, அலுவலகம் கிளம்புகிற வரைக்கும் செல் ஆயிலின் நெடி இருந்தது. மாலை வீட்டுக்கு வந்தபோதும் லேசான நெடி இருந்தது. நேற்றைக்கு முழு நம்பிக்கையோடு படுத்தேன். என் நம்பிக்கை மொத்தமும் வீணானது. செல் ஆயிலை செல்லாத ஆயிலாக்கிவிட்டு, மூட்டைப் பூச்சிகள் என் மீது ஊர்ந்தன. கொலை வெறியோடு ஒவ்வொன்றாகப் பிடித்துக் கட்டை விரலுக்கும் நடு விரலுக்கும் இடையே வைத்துத் திரித்து நசுக்கினேன். ஒரு வித்தியாசம் கவனித்தேன். இதற்கு முன் மூட்டையை நசுக்கினால், புளிச்சென்று ரத்தம் பீய்ச்சியடிக்கும். இப்போதோ, ஏதோ அழுக்கைத் தேய்ப்பது போல் மூட்டை கசங்கியதே தவிர, ரத்தம் வரக் காணோம். செல் ஆயில் வீர்யத்தால் அதன் ரத்தம் சுண்டிவிட்டதா என்று தெரியவில்லை. அப்படியும் கடிக்கிறதே!

3-11-09: இன்றே கடைசி! மூட்டைக்கெதிரான என் யுத்தத்தை முடித்துக்கொண்டு சரண் அடைந்துவிடலாம் என்றிருக்கிறேன். காலையில் அருகில் உள்ள ஹார்ட்வேர் கடைக்குப் போய் செல் ஆயில் இருக்குமா என்று கேட்டேன். எதுக்குங்க என்றார். சொன்னேன். “மூட்டைப் பூச்சிக்குன்னு டெர்மைட்ஸ்னு ஒரு ஆயில் இருக்குது. இதப் போடுங்க. நெடி அதிகம் இருக்காது. ஆனா, மூட்டை போயிடும்” என்று சொல்லிக் கொடுத்தார். என் அறை, என் அறையைத் தொட்டுக்கொண்டு இருக்கும் மற்ற இரண்டு அறைகள் முழுக்க லைசோல் தெளித்து, ஹார்ப்பிக் போட்டுச் சுத்தமாகக் கழுவித் தள்ளினேன். துணியால் துடைத்துக் காய வைத்தேன். டெர்மிட்ஸ் ஆயிலை அங்கிங்கெனாதபடி பூசினேன். போர்வைகளை, பாய்களை, தலையணைகளை வெளியே கொண்டு போய் உதறினேன். ஒவ்வொரு இழையாகப் பார்த்துக் கண்ணுக்குத் தென்பட்ட ஓரிரண்டு மூட்டைப் பூச்சிகளையும் எடுத்து வாசல் கேட்டிலேயே வைத்து நசுக்கினேன். சுத்தமாக உதறி ஒவ்வொன்றையும் உள்ளே எடுத்து வந்தேன். மூட்டைகளின் வசிப்பிடம், பிறப்பிடம் என்று நான் சந்தேகித்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை அதனுள்ளிருந்த வஸ்துக்களோடு கொண்டு போய் அப்படியே நீல் மெட்டல் பனால்கா குப்பைத் தொட்டியில் கடாசினேன். போர்வை விளிம்புகளில் கெரஸின் தடவி வைத்தேன். தரை முழுக்க கெரஸின் பூசி வைத்தேன்.

‘மூட்டைப் பூச்சியை நசுக்குவது மாதிரி உன்னை நசுக்கிடுவேன்’ என்று வில்லன்கள் சுலபமாகச் சவால் விட்டுவிடுகிறார்கள். மூட்டைப் பூச்சியை நசுக்குவது எத்தனைப் பெரிய பாடு என்று அவர்களுக்குத் தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. சொல்ல முடியாது. அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு ராஜபக்‌ஷே, மூட்டைப் பூச்சிகளைவிடக் கேவலமாக ஒரு மனித இனத்தையே பூண்டற்று நசுக்கிவிட்டாரே!

***
முயற்சியைக் கைவிடும்வரை தோல்வி என்பதே இல்லை!

11 comments:

Rekha raghavan said...

பத்து நாள் மூட்டைகளுடன் கடும் யுத்தம் புரிந்தும் இன்னும் போர் முடியவில்லையே! அவர்களாக மனந்திருந்தி பக்கத்து நாட்டுக்கு (வீட்டுக்கு) படை எடுத்தால்தான் உண்டு போலிருக்கு. விரைவில் போர் முடிய பிரார்த்திக்கிறேன்.

ரேகா ராகவன்.

கிருபாநந்தினி said...

என் படிகார யோசனை பலிக்காதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவை bed bugs இல்லை; bad bugs!

க ரா said...

I thing this can be described as a third world war....

நிலாமதி said...

எல்லோரும் எல்லாம் சொல்லியாச்சு நான் சொல்ல என்ன ்இருக்கிறது....வெற்றிக்கதை கேட்க ஆசையாய் இருக்கு. சீக்கிரம் சொல்லுங்கோ. மூட்டை பூச்சியை வென்ற கதை

கே. பி. ஜனா... said...

டினோசரைத் தூக்கிச் சாப்பிடட்டும் போல இருக்கே! -- கே. பி. ஜனா

கே. பி. ஜனா... said...

திருத்தம்: டினோசரைத் தூக்கிச் சாப்பிட்டுடும் போல இருக்கே! -- கே. பி. ஜனா

ungalrasigan.blogspot.com said...

# ஒரு வழியாக யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து, முந்தாநாளும் நேற்றும் நிம்மதியாக எந்தப் ‘பிடுங்கலும்’ இல்லாமல் உறங்கினேன் திரு.ராகவன்! தங்கள் பிரார்த்தனை பலித்துவிட்டது!

# கிருபாநந்தினி! உங்கள் யோசனையைக் குறை சொல்ல முடியாது. எங்கள் வீட்டு மூட்டைப்பூச்சிகள் படிகாரத்தையும் உண்டு கொழுக்கின்றன என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!

# திரு.ராமசாமிகண்ணன், பாராட்டறீங்களா, நக்கல் பண்றீங்களான்னு புரியலை! இருந்தாலும், தங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி!

# நிலாமதி மேடம்! ‘கல்லும் கனியாகும்’ படத்துல, ‘நான் ஜெயிச்சுட்டேன்... நான் ஜெயிச்சுட்டேன்... வெற்றி! வெற்றி!!’ன்னு கத்திட்டு, ‘கை விரலில் பிறந்தது நாதம்’னு பாடுவாரு டி.எம்.எஸ். அப்படிக் கத்தணும்போல இருக்கு எனக்கு! தங்கள் அக்கறைக்கும் அன்பான விசாரிப்புக்கும் நன்றி! எனக்கொரு சந்தேகம். அதென்ன பெயர் நிலாமதி? மதின்னாலே நிலாதானே?

திரு.கே.பி.ஜனா! சரியாச் சொன்னீங்க. இந்தப் பத்து நாளா நெஜம்மாவே அப்படியொரு பீதிக்குதான் என்னை ஆளாக்கிட்டுதுங்க அதுங்க!

ungalrasigan.blogspot.com said...

ஜெட்லிஇட்லி, ஜெகதீஷ், ஷ்யாம்கண்டல்லு, அனுபகவான், கண்பத், அசோக் 92, கே.பி.ஜனா, சி.எஸ்.கிருஷ்ணா, கே.பாலா, வினோ 23 ஆகியோர் தமிழிஷ்-ல் இந்தப் பதிவுக்கு ஆதரவளித்து ஓட்டளித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

Ananya Mahadevan said...

அபுதாபியில் மூட்டைப்பூச்சியா என்று எல்லாரும் வாயைப்பிளந்தார்கள் சார்.2 மாத காலம் ரொம்பக்க்‌ஷ்டப்பட்டோம்.சுத்தமா தூங்கவேமுடியாது.நீங்கசொல்ற மாதிரிதான் நாங்களும் பல முயற்சிகள் பண்ணினோம். கடைசியில பெஸ்ட்கண்ட்ரோலைக்கூப்பிட்டு, 150 திராம் கொடுத்து(!!!), ஒரு நாள் முழுதும் சொந்தக்காரர் வீட்டில் தங்கினோம்,அப்புறம் பழைய படுக்கை,ஃப்ளீஸ்,கம்ஃபோர்டர்,எல்லாவற்றையும் குப்பையில் போட்டுட்டோம்.வயத்தெரிச்சலா இருந்தது.பட் என்ன பண்ணறது?ஒருவழியா அது போச்சு. நிம்மதி.

Krishnan said...

Hello Ravi prakash,

I am krishnan from coimbatore

I landed up in your blog while searching for bed bug solution :-) I believe you got rid off bed bugs. Did you approach any pest control services? if so, can you tell me which company did you go for? Any advise or guidance would be greatly appreciated. many thanks

prmsheriff said...

சார், கடைசியில் எப்படி அதை ஒழித்தீர்கள்? உங்கள் நிலைமையில் இப்பொழுது நான் இருக்கிறேன். இதற்கு தயவுசெய்து பதில் அளித்து எனக்கு உதவி செய்யவும். நன்றி.