நண்பர்கள் தினம்!

ஹா... ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க!

இன்று நண்பர்கள் தினமாமே? ஆகஸ்ட் 2 நண்பர்கள் தினமா, அல்லது ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமா?

காலையிலிருந்து என் மொபைல் இன்பாக்ஸ் 'HAPPY FRIENDSHIP DAY' வாழ்த்து SMS-களால் நிரம்பி வழிந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மெஸேஜ் வர வர, அவற்றுக்கு உடனுக்குடன் தேங்க்ஸ் ரிப்ளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என் குழந்தைகள்.

தகவல் தொடர்பு மிக மிக எளிமையாகிப் போனதிலிருந்து ஸ்பெஷல் தினங்களுக்கு வாழ்த்து சொல்வதும், அவற்றுக்கு நன்றி தெரிவிப்பதும் உணர்வுபூர்வமாக இல்லாமல், ஒரு சிராத்தம் போல் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது எனக்கு.

எதுவுமே ஓர் அளவோடு இருக்கும்வரைதான் மரியாதை! அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? தொலைக்காட்சி வந்த புதிதில் ‘ஒளியும் ஒலியும்’ என்று வாரத்துக்கு ஒருமுறை, வெள்ளிக்கிழமை மாலைகளில் மட்டும்தான் சினிமா பாடல்கள் ஒளி-ஒலிபரப்பாகும். அப்போது அலுவலகத்தில் இருக்கவேண்டி வந்தால், ‘ஐயோ! இன்றைக்கு ஒளியும் ஒலியும் போய்விடும் போலிருக்கிறதே!’ என்று மனசு தவியாய்த் தவிக்கும். இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. எந்த சேனலைத் திறந்தாலும், ‘சூப்பர்ர்ரூ... சூப்பர்ரூ...’ என்னமாவது ஒரு டமுக்கு டப்பா பாடல் காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. டி.வி-யை அணைத்துவிட்டு, எந்தச் சந்தடியும் இல்லாமல் அமைதியாக இருந்தால் தேவலாம் போலிருக்கிறது. மொத்தத்தில் ஒளியும் ஒலியும் பார்க்கிற ஆசையே போய்விட்டது. டி.வி-யில் சினிமா பாடல் காட்சி என்றால் வெறுப்பாக இருக்கிறது.

தினங்களும் அப்படித்தான். பொதுவாகவே, தினங்களில் எனக்கு அதிகப் பிடிப்பு இல்லை. முன்னெல்லாம், அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய நான்கு தினங்களில் மட்டும் தெரிந்தவர் அறிந்தவர் அனைவருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதை நானும் வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது உண்மையிலேயே அதை நான் உணர்வுபூர்வமாகச் செய்தேன்.

காலம் செல்லச் செல்ல, எது எதெற்குத்தான் தினங்கள் கொண்டாடுவது என்று விவஸ்தையில்லாமல் போய், பெற்ற தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம், பெற்றோர் தினம், பாட்டி தினம், தாத்தா தினம், பேரன் தினம், பேத்தி தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், மகளிர் தினம், முதியோர் தினம், இளைஞர் தினம், பஸ் தினம், லாரி தினம், ஆட்டோ தினம், ஆசிரியர் தினம், காவலர் தினம், குழந்தைகள் தினம், கிழடுகள் தினம், நாய் தினம், நரி தினம் எனக் கணக்கு வழக்கில்லாமல் தினம் தினம் ஒரு தினமாக அனுஷ்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தால், திகட்டிப் போகிறது. அந்த தினத்தின் மீது உணர்வுபூர்வமான பிடிப்பும் விட்டுப் போகிறது.

ஆனால், நட்பு என்பது உயர்ந்த விஷயம். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், நட்புக்கு மரியாதை செய்வது என்பது SMS அனுப்புவதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நான் விழுப்புரம், மகாத்மாகாந்தி உயர்நிலைப்பள்ளியில் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் படித்துக்கொண்டு இருந்தபோது, மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தனி நடிப்புப் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் கலந்துகொள்வேன். அப்படி ஒருமுறை கலந்துகொண்டபோது எனக்குக் கிடைத்த தனி நடிப்புக்கான தலைப்பு: ‘முரசு கட்டிலும் மோசுகீரனாரும்’. நட்பின் உறுதியை விளக்கும் சிறு நாடகம் அது.

இலக்கியத்தில், நட்பின் இறுக்கத்தை விளக்க துரியோதனன் - கர்ணன் ‘எடுக்கவோ கோக்கவோ’ சம்பவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் உள்ளன. பாடத்திலும் வந்திருக்கிறது. ஆனால், மோசுகீரனார் என்கிற புலவர் பெயரை முதன்முறையாக நான் அப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

விரிவான கதை மறந்துவிட்டது. மையக் கருத்து மட்டும் நினைவில் உள்ளது.

தகடூர் எறிந்த சேரமான இரும்பொறை என்று ஒரு மன்னன். வாரி வழங்குவதில் கர்ணன். அவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்லலாம் என்கிற எண்ணத்தோடு வெகு தொலைவிலிருந்து வருகிறார் மோசுகீரனார் என்கிற புலவர். முன்கூட்டியே அப்பாயின்ட்மெண்ட் வாங்கவில்லை என்பதால், அவரைக் காத்திருக்கச் சொல்லிவிடுகிறார்கள் அரண்மனைச் சேவகர்கள்.

மோசுகீரனார் ஓய்வு எடுக்கவேண்டி ஓர் அறைக்குள் செல்கிறார். அங்கே ஒரு கட்டில் இருக்கிறது. அதில் படுத்து உறங்கிவிடுகிறார். அது முரசு கட்டில் என்பது பாவம், அவருக்குத் தெரியவில்லை.

முரசு கட்டில் என்பது போர் முரசு வைக்கப்படுகின்ற கட்டில். அரசு இலச்சினையைப் போன்று, மிகப் புனிதமாக மதிக்கப்படவேண்டிய ஒரு வஸ்து. அதில் அமர்வது, அரசை அவமதிப்பதாகும்.

மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தால், புலவருக்கு மரணதண்டனை நிச்சயம் என்று நினைக்கிறார்கள் சேவகர்கள், தளபதிகள், மந்திரிப் பிரதானிகள்.

மன்னன் வருகிறான். கட்டிலில் அமர்ந்திருக்கும் புலவரைப் பார்க்கிறான். உடனே வெண் சாமரம் எடுத்து வரச் சொல்லி, அதை வாங்கி, தானே புலவருக்கு வீசுகிறான். சற்றுப் பொறுத்து விழித்தெழுகிற புலவர், மன்னரே தனக்குச் சாமரம் வீசுவது கண்டு பதறிப் போகிறார். தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கும்படி வேண்டுகிறார்.

‘மன்னிப்ப்பாவது! தமிழ் அன்னை படுத்துறங்க என் முரசு கட்டில் பாக்கியம் அல்லவோ செய்திருக்கிறது!’ என்கிறான் மன்னன்.

அவனது தமிழ் மீதான பக்தியைக் கண்டு புலவருக்கும், அவரின் தமிழ்ப் புலமையைக் கண்டு மன்னனுக்கும் பரஸ்பரம் நெருங்கிய நட்பு உண்டாகியது என்று அந்த நாடகம் முடியும்.

மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம் - (புறநானூறு)

என்று மன்னனைப் போற்றிப் பாடுகிறார் புலவர்.

‘வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என் தலையைக் கொய்யாது, எனக்குப் பணிவிடை செய்தவனே, நீ வாழ்க!’ என்பது பொருள்.

தினத்துக்கு வருவோம். இங்கே நாம் அன்னையை உதாசீனப்படுத்திவிட்டு, அன்னையர் தினம் கொண்டாடு்கிறோம்; முதியோர் இல்லங்களை உருவாக்கிவிட்டு, முதியோர் தினம் கொண்டாடுகிறோம்; நண்பர்களின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டுக்கொண்டே நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம்.

போலி டாக்டர்கள், போலிச் சாமியார்கள் போல ஒட்டு மொத்த மனிதர்களுமே போலி மனிதர்களாகிக்கொண்டு வருகிறோமோ என்று கவலையாக இருக்கிறது.

***
1. ‘ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்பான் நண்பன்; ‘என்ன பிரச்னை?’ என்று கேட்பான் உண்மை நண்பன்.

2. நண்பர்கள் உள்ள எவனும் தோற்றுப்போனதாகச் சரித்திரம் இல்லை.

1 comments:

கிருபாநந்தினி said...

நண்பர்கள் தினத்துக்கும் ‘முரசு கட்டிலும் மோசுகீரனாரும்’ நாடகத்துக்கும் சம்பந்தமே இல்லை. உங்கள் மனதில் ஓடிய பழைய நாடக நிகழ்வை எழுதிவிட்டு, ‘பிறகு மன்னனும் புலவரும் பரஸ்பரம் நட்பு கொண்டார்கள்’ என்று ஒரு வரி எழுதிவிட்டால், அது நண்பர்கள் தினத்துக்கான விஷயமாகிவிடுமா?