பெரியவர் பெரியவர்தான்!

போலிச் சாமியார்களின் முகமூடிகள் கிழிபட்டுக்கொண்டே வருகின்றன. உண்மையிலேயே இது சந்தோஷமான விஷயம்தான். இந்தக் கழிசடைகளையெல்லாம் நான் எந்தக் காலத்திலும் ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டதே இல்லை. காரணம், அவர்கள் முகத்தைப் பார்த்தாலே காமுகன் என்றும், கொலைகாரன் என்றும் அவர்கள் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருப்பது என் கண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்குத் தெரிந்த விஷயம் ஏன் மற்ற லட்சோப லட்சம் மக்களுக்குத் தெரியவில்லை, அந்தப் போலிகளின் காலடியில் கொண்டு போய் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டும் குபேரர்களுக்கு ஏன் தெரியவில்லை, படித்த மேதாவிகள் பலருக்குக்கூட ஏன் இது புரியவில்லை என்பதுதான் எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

சரி, முகமூடிகள் கிழிபட்ட பின்பாவது அந்தப் போலிச் சாமியாரை ஒதுக்குகிறார்களா என்றால், இல்லை. இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா ஆசிரமத்தில் இன்னமும் கூட்டம் அம்முகிறதாம்; வெளிநாட்டுப் பக்தர் கூட்டம் கூடிக் கும்மியடிக்கிறதாம். நூறு பெரியார்கள் வந்தாலும் இவர்களைத் திருத்தவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. இந்த மாதிரி மதிகெட்ட ஆன்மிகத்துக்குப் பதிலாக நாத்திகமே தேவலை என்பேன். ஆனால், நாத்திகத்திலும் போலி நாத்திகம் கூடாது. அதுவாவது முழுமையான நாத்திகமாக இருக்க வேண்டும். ஆனால், பரவலாக இங்கே காணக் கிடைப்பதெல்லாம் ‘காரிய நாத்திகம்’தான்!

இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்... திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்... அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்...

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

இன்னொரு சம்பவம்...

ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்... முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

***

நீங்களே உதாரணமாகத் திகழ்ந்துவிட்டால், பலப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய வேலை உங்களுக்கு மிச்சம்!

30 comments:

பிரபாகர் said...

தலைப்பிலேயே சொல்லிட்டிங்களே!

வேசம் போடுற சில அற்ப பதர்களை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது.

சரியான நேரத்தில் ஓர் இடுகை...

பிரபாகர்.

பத்மநாபன் said...

''தெய்வத்தின் குரலாக '' எளிமையோடு இருந்தார் அதனால் பெரியவர் என்று இன்னமும் போற்றபட்டு வருகிறார். அவ்வெளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்தக்காட்டாக இருந்தது பற்றிய விஷயங்கள் வாசிப்பவர்களுக்கு அரிய தகவல்கள் ....
அதன் பின் வந்தவர்கள் எளிமையை கைவிட்டபிறகு, அவர்களால் பாசாங்கு இல்லாமல் இருக்கமுடியவில்லை ...அதன் தொடர்ச்சியாக எல்லா பாதகங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் .. இதில் கொடுமை என்னவென்றால் , அவர்கள் பத்திரிக்கையில் எழுதும் எழுத்தை உண்மை என்று நம்பி ஏமாறுவது . பத்திரிக்கையின் பாரம்பரியத்தை நம்பி படிக்கும் வாசகர்களை இனிமேலாவது இந்த போலிகளை வைத்து ஏமாற்றாமல் இருக்கவேண்டும்.

Chitra said...

நீங்களே உதாரணமாகத் திகழ்ந்துவிட்டால், பலப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய வேலை உங்களுக்கு மிச்சம்!

............ well-said!

Ananya Mahadevan said...

நெகிழ்ந்தேன், மெய்சிலிர்த்தேன், அழுதேவிட்டேன். அருமையான பகிர்வு. அவர்தான் உண்மையான ‘துறவி’.ஒட்டிய வயிறும், வேஷம் போடாத முகமும், தீட்சிண்யமான பார்வையும், அவரை மாதிரி யாருமே இல்லை! அவருடைய கனகாபிஷேகத்தை டீவீயில் காட்டிய போதுதான் அவர் தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.

balakrishna said...

அன்பு நண்பரே,
அருமையான செய்தி, ஆனால் எல்லா சாமியார் பற்றி முதலில் இப்படித்தான்
எழுதுவார்கள் அவர் இப்படி செய்தார் அப்படி செய்தார் என்று அதனால் மன்னிக்கவும்
யாரும் சாமியார் பற்றி எழுதாமல் இருப்பது நல்லது நமக்கு மட்டுமில்லை நாட்டிற்கே
உங்கள்
இரா

பிரகாஷ் said...

பெரியவாளைப் பற்றின டாக்குமென்டரி பார்த்து விட்டு எதேர்ச்சியாக உங்கள் வலைப்பூ பக்கம் பார்த்தால் அங்கேயும் அவர்! மனதுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. நன்றி.

தங்க முகுந்தன் said...

காஞ்சிப் பெரியவருடைய கட்டுரை என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவரை 1988இல் நேரடியாக காஞ்சிபுரத்தில் தரசித்து ஆசி பெற்றேன். அவரோடு அந்த மடத்தின் புனிதமும் போய்விட்டது! அருமையான செய்தி! இது நான் கேள்விப்படாதது. பெரியவரைப்போல ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் மோசம் செய்யும் சிலரால் இப்படிப்பட்ட புனிதர்களின் பெயரும் "சாமியார்" என்ற பதத்துள் அடங்கி மாசுபடுத்திவிடும் என்பதையிட்டு மனம்வருந்துகிறேன்.

Dr. சாரதி said...

நிஜமாகவே மெய்சிலிர்க்க வைத்தது.....

வடுவூர் குமார் said...

பெரிய‌வ‌ர் பெரிய‌வ‌ர் தான்.

எல் கே said...

//ஆனால் எல்லா சாமியார் பற்றி முதலில் இப்படித்தான்
எழுதுவார்கள் அவர் இப்படி செய்தார் அப்படி செய்தார் என்று அதனால்//

avar valnthu kaatiyavar

SurveySan said...

எவ்ளோ பட்டும் யாருக்கும் புத்தி வரமாட்டேங்குது.

have faith in god, not in godmen or godwomen.

pudugaithendral said...

பெரியவரைப்பற்றி எத்தனை பேர் எத்தனை(முறை) சொன்னாலும் கேட்டுக்கொண்டிருக்கலாம். பகிர்வுக்கு நன்றி

பொன்னியின் செல்வன் said...

காஞ்சி மகாப்பெரியவர் போன்றோரை இனி பார்ப்பது மிகவும் அரிது என்று, பல வருடங்கள் முன் குடும்ப நண்பர் ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது, இதைப் படித்தவுடன்.

பி.கு:
இந்த Comment-ஐ நான்காம் முறையாக பதிகிறேன். ஏதோ தொழில் நுட்ப கோளாறு என்று எண்ணுகிறேன். முன்னால் பதிந்த Comment Publish ஆனதா என்று தெரியாததினால். ஆக ஏதேனும் ஒன்றை 'Approve' செய்தால் போதும் சார்!

Renga said...

சரியான நேரத்தில்... அருமையான பகிர்வு. நன்றி.

Deepan Mahendran said...

நல்ல தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி...

கிருபாநந்தினி said...

காஞ்சிப் பெரியவரைப் பத்தி எழுதினது நல்ல விஷயம் சார்! ஆனா, நித்யானந்தனைக் கிழி கிழின்னு கிழிச்சு ஒரு பதிவு எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன். கவுத்திட்டீங்களே!

பின்னோக்கி said...

இவர் தான் துறவி. காமரஜர் போல ஒருவர் இருந்தார் என்பதை இந்த தலைமுறையினர் நம்பமுடியாதது போலவே, இப்படி ஒரு துறவி இருந்தார் என்பது ஒரு ஆச்சரிய செய்தியாகவே படுகிறது.

காஞ்சி ரகுராம் said...

பெரியவரிடம் கிடைத்த இதுபோன்ற அனுபவங்கள் ஏராளம். அவைகள் தற்போது 5 தொகுதிகளாக வந்துள்ளன. தரிசன அனுபவங்கள் - வானதி பதிப்பகம்.

ungalrasigan.blogspot.com said...

நன்றி பிரபாகர்!

நன்றி பத்மநாபன்! தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே! போலிகள் நிறைந்துள்ள இந்த உலகத்தில் உண்மையானதை அடையாளம் காண நமக்குத் தனிச் சக்தி வேண்டும்.

நன்றி சித்ரா!

நன்றி அநன்யா!

ungalrasigan.blogspot.com said...

நன்றி பாலகிருஷ்ணன்! தாங்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், சாமியார்கள் பற்றி நாம் சொல்லவில்லை என்றாலும், வேறு யாராவது ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது போன்று போலிகளை அடையாளம் காணும் சக்தியை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், கண்ணாடிக் கல் என்று நினைத்து வைரக்கற்களையும் அல்லவா இழந்துவிடுவோம்!

ungalrasigan.blogspot.com said...

நன்றி பிரகாஷ்! பெரியவாளைப் பற்றிய டாகுமெண்டரியை எங்கே பார்த்தீர்கள்? யார் எடுத்த டாகுமெண்டரி அது?

நன்றி தங்கமுகுந்தன்! நீங்கள் சொல்வது உண்மை. சாமியார் என்றாலே, இப்போது போலிச் சாமியார்தான் என்று ஆகிவிட்டது. அந்த வார்த்தையின் புனிதம் கெட்டுப் போய்விட்டது.

நன்றி டாக்டர் சாரதி!

நன்றி வடுவூர் குமார்!

ungalrasigan.blogspot.com said...

நன்றி எல்.கே.! சரியாகச் சொன்னீர்கள்.

நன்றி சர்வேசன்! சர்வேசன் சொல்லுக்கு அப்பீல் ஏது?

நன்றி புதுகைத் தென்றல்!

நன்றி பொன்னியின் செல்வன்!

ungalrasigan.blogspot.com said...

நன்றி ரெங்கா!

நன்றி சிவன்!

நன்றி கிருபாநந்தினி!

நன்றி பின்னோக்கி! காஞ்சிப் பெரியவர், காமராஜர், கக்கன் போன்ற பெரியவர்கள் இனிமேல் தோன்றுவார்களா என்பதே சந்தேகம்தான்!

நன்றி ரகுராம்!

காஞ்சி ரகுராம் said...

இன்றுதான் தங்கள் பதிவை முதன்முறையாகப் பார்த்து, எனது கருத்தையும் பதிவு செய்தேன். ஒரு மூத்த பத்திரிக்கையாளராக இருந்தும், கருத்தைப் பதித்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூறும் பண்பினால் பெரிதும் கவரப்பட்டேன். நன்றி.

இந்து மகாசமுத்திரத்தில் கரைகண்ட ஞானிகளையும், யொகிகளையும், ரிஷிகளையும், துறவிகளையும் கண்ட நாடு இன்று தவிக்கிறது. சங்கரர், பெரியவர் போல தவசீலர்களைப் பெற இனி நாமணைவரும் தவம் செய்ய வேண்டி இருக்கிறது.

sadathulla shariff said...

say mahaperiyava then only identify.one more thing i have to tell this time,one day i visit to madam with my friends.during poojas some one ringing the poojabell ,suddenly periyava ask him to stop ringing,and tell them in body language ther is prayer call from near by mosque,let them finish,what a great man

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அதனால் தான் அவர்
பெரியவர்.அவருடைய அற்புதங்கள் பலவற்றைப்படித்துள்ளநென்.

virutcham said...

என் சிறுவயதில் என் தந்தை அவரை பார்க்க விரும்பியதால் எங்களையும் அழைத்து சென்றார். அன்று அவர் மௌன விரதம்.

கண் தெரியதவ்ருக்காக அவர் பேசியது, மசூதியில் பிரார்த்தனை முடிய காத்திருக்க சொன்னது,

ம்ம்ம்... என்ன சொல்ல

http://www.virutcham.com

தங்க முகுந்தன் said...

http://www.youtube.com/watch?v=JW2naPy32kI&feature=related

http://www.youtube.com/watch?v=xaZiCdRKxjw&feature=related

தங்க முகுந்தன் said...

http://www.youtube.com/watch?v=xKIo3-2MNf8&feature=related

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி