இன்று ஒரு தகவல்!

தென்கச்சியார் மறைந்துவிட்டார்.

‘இன்று ஒரு தகவல்’ என்னும் தலைப்பில் ரொம்ப காலம் வானொலியிலும், பின்னர் சன் டி.வி-யிலும் தகவல் சொல்லி வந்தவர். கிருபானந்த வாரியாருக்கு அடுத்து ஆன்மிகத்தில்... கொஞ்சம் பொறுங்கள் - மிமிக்ரி கலைஞர்களுக்கு வசதியான ஒரு கேரக்டராக இருந்தவர். சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பல ஆண்டுகள் எழுதி வந்தவர்.

இவரை தகவல் சொல்பவராகத்தான் நமக்குத் தெரியும். ஆனால், இவரின் சொந்த ஊரான தென்கச்சி மக்களிடையே இவர் ஒரு ஹீரோ! அந்த ஊரில் இவர் பிரெசிடெண்ட்டாக இருந்த சமயத்திலும், அதற்குப் பின்பும் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். இவரது குடும்பத்தார்தான் இன்றைக்கும் அங்கே பல நல்ல செயல்களுக்குத் தலைமை தாங்குபவர்களாக, முன் நிற்பவர்களாக, ஊர் மக்களிடையே செல்வாக்கோடு இருந்து வருகிறார்கள்.வானொலியில் இவர் ‘இன்று ஒரு தகவல்’ சொல்லி வந்த சமயத்தில், என் தந்தையார் அதை ஆவலோடு கேட்பார். ஒரு நாளும் மிஸ் பண்ணியதில்லை. அதே போல விகடன் சேர்மனும் (திரு.எஸ்.பாலசுப்ரமணியன்) இவரின் பெரிய ரசிகர். அவரும் ஒரு நாள் கூட தென்கச்சியாரின் ‘இன்று ஒரு தகவல்’ கேட்காமல் இருந்ததில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சேர்மன் தினமுமே காலையில் எட்டு எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துகொண்டு இருந்தார். (இப்போது வாரத்துக்கு ஒரு முறைதான்.) போர்ட்டிகோவில் அவர் கார் வந்து நின்றதுமே செக்யூரிட்டிகள் ஓடிப் போய் கார் கதவைத் திறந்துவிடுவார்கள். உதவியாளர் வந்து சேர்மனின் கைப்பையை வாங்கிக் கொள்வார். பின்பு மெதுவாக காரிலிருந்து இறங்குவார் சேர்மன்.

அன்றைக்கும் அப்படித்தான், சேர்மனின் கார் வந்து நின்றதும் செக்யூரிட்டிகள் ஓடிப் போய் கார் கதவைத் திறக்க முயன்றார்கள். சேர்மன் கை காட்டி அவர்களை நிறுத்தினார். கைப்பையை வாங்கிக்கொள்ள வந்த பி.ஏ-வும் மௌனமாக நின்றார். டிரைவரும் இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். கார் போர்டிகோவில் வந்து நின்று இரண்டு நிமிடங்கள் வரை அனைவருமே அமைதியாக இருந்தனர். பின்னர் மெதுவாகக் காரிலிருந்து இறங்கினார் சேர்மன்.

அன்றைய தினம் எடிட்டோரியல் மீட்டிங்கின்போது, அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன். சேர்மன் சிரித்துக்கொண்டே, “அதுவா... நான் தினமும் ‘இன்று ஒரு தகவல்’ கேட்டபடியே கார்ல வர்றது வழக்கம். என்னோட கார் இங்கே கேட்ல நுழையும்போது கரெக்டா அந்த நிகழ்ச்சி முடியும். இறங்கி வந்துடுவேன். ஆனா, இன்னிக்கு டிரைவர் கொஞ்சம் ஸ்பீடா வந்துட்டார் போலிருக்கு; நிகழ்ச்சி முடியலே. அதனால, காருக்குள்ளேயே உட்கார்ந்து அதை முழுக்கக் கேட்டுட்டு அப்புறம் இறங்கி வந்தேன்” என்றார். அந்த அளவுக்கு தென்கச்சியாரின் பரம ரசிகர் எங்கள் சேர்மன்.

என் அப்பாவுக்குப் பிடித்த, எங்கள் சேர்மனுக்குப் பிடித்த தென்கச்சியாரின் தகவல் நிகழ்ச்சி என்னை மட்டும் ஒரு நாளும் ஈர்த்ததில்லை. யதார்த்தமாகச் சொல்கிறேன் பேர்வழியென்று ஓர் அசதியான குரலில், அப்போதுதான் தூங்கி எழுந்தது போன்ற சோம்பலான குரலில் தென்கச்சியார் சொல்வது போலவே எனக்குப் படும். புத்துணர்வாக இருக்க விரும்பினாலும் விடாமல் நம்மையும் அசதிக்குள்ளாக்கிவிடும் போன்ற பாணி அவருடையது.

அந்த மீட்டிங்கில் தான் தென்கச்சியாரின் பரம ரசிகன் என்பதாக எங்கள் சேர்மன் சொல்லி முடித்ததுமே நான் சும்மாயிருக்காமல், என் வழக்கமான சுபாவப்படி, “என்ன சார், அதுல ரசிக்கிறதுக்கு அப்படி என்ன இருக்கு? கேட்க உற்சாகமாகவே இல்லையே! அவர் ஏதோ வேண்டாவெறுப்பா சொல்ற மாதிரியல்லவா சொல்றார்? எனக்கு அது கொஞ்சம்கூடப் பிடிக்கலை. இன்று ஒரு தகவல் வந்ததுமே நான் ஸ்டேஷனை மாத்திடுவேன்!” என்றேன்.

சேர்மன் ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டார். அந்த நிகழ்ச்சியை ரசிக்காதவரும் இருப்பார் என்பதையே அவர் நினைத்துக்கூடப் பார்த்திருந்திருக்க மாட்டார் போலும்! நான் நிஜமாகத்தான் சொல்கிறேனா, சும்மா வேடிக்கை பண்ணுகிறேனா என்று அவருக்கு ஒரு கணம் புரியவில்லை. “என்ன சொல்றீங்க... அதையா பிடிக்கலைன்னு சொல்றீங்க?” என்றார். திரும்பவும் நான், “தென்கச்சியார் குரலைக் கேட்டாலே எனக்கு அன்றைய பொழுது டல்லாயிடுது சார்!” என்றேன்.

சேர்மன் நம்பவே முடியாமல், மற்றவர்களைப் பார்த்து, “என்ன சார் இவர் இப்படிச் சொல்றாரு? எத்தனை அருமையான நிகழ்ச்சி! உங்க அபிப்ராயம் என்ன? இவர் கருத்தை எத்தனை பேர் ஏத்துக்கறீங்க?” என்று கேட்டார். யாருமே என் கருத்தோடு உடன்படவில்லை. “சார்! ரொம்பப் பிரமாதமான நிகழ்ச்சி சார் அது. பல புதிய விஷயங்களை அவர் இப்படி ரொம்ப யதார்த்தமா, நம்மோட பேசுற மாதிரி சொல்ற பாணியே புதுசு சார்! கேக்கவே அத்தனை சுவாரசியமா இருக்கு. இவருக்கு ஏன் பிடிக்கலைன்னு தெரியலை! டைட்டானிக் படத்தையே குப்பைன்னு சொன்னவர்தானே இவரு!” என்றார்கள்.

சரி, என் ரசனை அவ்வளவுதான்! அதற்கு நானென்ன செய்ய முடியும்? தென்கச்சியார் நிகழ்ச்சி எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் புகழ் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே!

*****
திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதன் பொருள், திறந்த வாயுடன் இருக்க வேண்டும் என்பதல்ல!

4 comments:

A-kay said...

Well, I agree with you - I didn't warm up to his program very well either. That said, however, some of the nuggets that he made in those programs were really good and as you said, he had a very distinct voice / style which endeared him to the mimic artists.

Sad that he is no more - as you mentioned in the other post, it is indeed sad to note that the world is poorer due to the loss of so many of these souls :(

Raju said...

அன்னாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
:-(

ungalrasigan.blogspot.com said...

* விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி ஏ-கே!

* ராஜு! அருமையானதொரு ஆத்மா நம்மிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டது! அன்னாருக்கு என் அஞ்சலியும்!

butterfly Surya said...

நகைச்சுவை கதைகள் நன்றாக இருக்கும். குரலும் சற்று வித்யாசமானது தான்.

தென்கச்சியாருக்கு அஞ்சலி..