நடிகையர் திலகம்!

 

நடிகையர் திலகம் சாவித்திரி – 26.12.2020

‘கோமா’ என்ற சொல் பிரபலமானது, நடிகையர் திலகம் சாவித்திரி உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஒன்றரை வருடங்களுக்கு மேல் கோமாவில் படுக்கையில் வீழ்ந்திருந்தபோதுதான். தமிழ்த் திரையுலகில் முடிசூடா ராணியாக வலம் வந்த சாவித்திரியின் மறைவு ஒரு துயரமான நிகழ்வு. சாவித்திரி மறைந்தபோது அவருக்கு வயது 45-தான்!

‘சரஸ்வதி சபதம்’ படத்தில் சரஸ்வதியாக வந்து வீணையை மீட்டியபடி சாவித்திரி பாடும் அந்த அழகுக் காட்சி இன்னும் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. ‘நவராத்திரி’ படத்தில் நடிகர் திலகத்தின் ஒன்பது வேடங்களுக்கும் ஈடு கொடுத்து நடித்திருப்பார். குறிப்பாக, கூத்துக் கலைஞராக வரும் சிவாஜியுடன் தெருக்கூத்து ஆடும் காட்சியின் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘திருவிளையாடல்’, ‘அமர தீபம்’, ‘ஆயிரம் ரூபாய்’, ‘மிஸ்ஸியம்மா’ எனப் பல படங்கள் சாவித்திரியின் அபார நடிப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை. கடைசியாக அவரைத் திரையில் நான் பார்த்தது ‘நட்சத்திரம்’ படத்தில் நடிகை சாவித்திரியாகவே அவர் தோன்றியதைத்தான். அதன்பின்பும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எனினும், அவை மனதில் தங்கவில்லை.

குழந்தை மனசு கொண்டவர் சாவித்திரி. ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிப்பதென முடிவானபோது, அதில் முதலில் சாவித்திரியைத்தான் நடிக்க வைக்கத் திட்டமிட்டார்கள் தயாரிப்பாளர் பெருமாள் முதலியாரும், இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சுவும். இதற்காக, சென்னையில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எம்.ஆர்.ராதா நடத்தியபோது, அதைப் பார்ப்பதற்காக சாவித்திரியை அழைத்துச் சென்றார்கள். அப்போது அவருக்கு 16, 17 வயசு இருக்கும். ஆரம்பத்தில் நாடகத்தைக் குதூகலமாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி, எம்.ஆர்.ராதா குஷ்டரோகியாக வேடம் பூண்டு நடிக்கத் தொடங்கியவுடன் நடுங்கத் தொடங்கிவிட்டார். கை கால்கள் உதறலெடுத்தன. மாடிப்படியில் உதைத்துத் தள்ளும் காட்சியில், ‘அடியே காந்தா…’ என்று எம்.ஆர்.ராதா அலறிக்கொண்டே படிகளில் உருண்டு விழுந்தபோது, பயந்தடித்துக்கொண்டு வெளியேறி வீட்டுக்குப் போய்விட்டார் சாவித்திரி. அந்தப் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தந்துவிட்டார்.

நடிகையர் திலகத்தின் நினைவு நாள் இன்று.

 

0 comments: